Wednesday, March 31, 2010

பாடம் 043: தர்க்கம் முக்தியை தராது (பிரம்ம சூத்திரம் 2.1.12)


காரண-காரிய ஆராய்ச்சியினால் பெற முடியாத ஞானத்தை தர்க்கத்தின் துணையினால் பெற முடியும் என்பது போன்ற தவறான எண்ணத்தை சென்ற பாடம் நம்மிடம் ஏற்படுத்தியிருக்க கூடும் என்பதற்காக வெறும் தர்க்கத்தால் மட்டும் நம்மால் முக்தியை அடைய முடியாது என்பதை இந்த பாடம் வலியுருத்துகிறது. தர்க்கம் என்பது உண்மையை புரிந்து கொள்ள பெரிதும் உதவும் சாதனமென்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் வேதத்தை சார்ந்து இல்லாமல் தனித்து இயங்கும் வறட்டு தர்க்கம் நமக்கு பயன் தராது என்பதை தர்க்கத்தின் மூலமாகவே இந்த பாடம் நிரூபிக்கிறது.

ஊட்டியில் ஏன் குளிரெடுக்கிறது?

அதென்னமோ ஆரம்பகாலத்திலிருந்தே அப்படித்தான் இருக்கிறது என்ற பதிலில் திருப்தியடைந்துவிடுபவர்களுக்கு உலகம் எப்படி உண்டானது என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுமளவுக்கு அறிவுக்கூர்மை இருக்காது. அது அவர்களுக்கு தேவையுமில்லை. ஏனெனில் வாழ்க்கையில் எதேனும் துன்பம் ஏற்படும் பொழுது அவர்கள் நொடிந்து போய்விடுவது கிடையாது. கடவுள் நமக்கு படியளந்தது அவ்வளவுதான் என்றோ அல்லது நாம் கொடுத்துவைத்தது அவ்வளவுதான் என்றோ மனதை தேற்றிக்கொண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள். அவர்களுக்கு நான்தான் என் வாழ்வின் நிலமைக்கு காரணம் என்ற அகங்காரம் இருப்பதில்லை. இது ஏன் இப்படி நடக்கிறது என்ற கேள்வியை அவர்கள் கேட்பதில்லை.

அறிவுடன் செயல் படுபவர்களால் இம்மாதிரி சர்வசாதாரணமாக வாழ்க்கையை வாழ முடிவதில்லை. அவர்கள் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர துடிப்பவர்கள். ஊட்டி கடல் மட்டத்திலிருந்து வெகு உயரத்தில் இருப்பதால் அங்கு குளிர்கிறது என்று பதில் சொன்னால் அதற்கும் ஏன் என்று கேள்வி கேட்பார்கள். ஊட்டி அதிக உயரத்தில் இருப்பதால் சமவெளியை விட சூரியனுக்கு அருகில் இருக்கிறது, எனவே அங்கு வெப்பமாகத்தானே இருக்க வேண்டும் என்று குறுக்கு கேள்விகள் கேட்டு அறிவியலின் முழு விளக்கம் கிடைக்கும் வரை அவர்கள் திருப்தி அடைய மாட்டார்கள்.

காலிகுடம் அசையாது

முழு அறியாமை நமக்கு நிம்மதியை கொடுக்கும். உதாரணமாக கலஹாரி பாலைவனத்தில் வாழும் ஆப்ரிக்க பழங்குடியினர் இயற்கையோடு ஒன்றி ஒரு பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். வேட்டையாடி கிடைக்கும் உணவை தொன்று தொட்டுவரும் சமூக பிரிவினைகளின்படி அவர்களுக்குள் பிரித்துகொண்டு நாடோடி வாழ்க்கை வாழ்கிறார்கள். உடலளவில் நிர்வாணத்திற்கு மிக அருகில் இருக்கும் அவர்கள் மனதளவில் முழு நிர்வாணத்தை அடைந்தவர்களாக இருக்கிறார்கள். போட்டி, பொறாமை, ஒருவருக்கொருவர் சண்டை, சச்சரவு போன்ற காழ்ப்புணர்ச்சியேதுமில்லாமல் திருமணம் போன்ற சமுதாய மாற்றங்களுக்குட்படாமல் ஏறக்குறைய விலங்குகள் போல நிம்மதியாகவும் இன்பமாகவும் வாழ்கிறார்கள்.

குறைகுடம் கூத்தாடும்

அறைகுறை ஞானம் துன்பத்தை கொடுக்கும். ஊட்டியில் ஏன் குளிருகிறது என்ற கேள்வியை கூட கேட்காமல் அறியாமையில் மூழ்கி இருக்கும் மேலே விளக்கப்பட்ட பழங்குடியினரைப்போல் அல்லாமல் குறுக்கு கேள்வி கேட்பவர்கள்தான் இந்த உலகில் அதிகம். இவர்களால் எல்லா கேள்விகளுக்கும் முழுமையான பதில் தெரிந்து கொள்ளாமல் அமைதியடைய முடியாது.

ஒன்றும் தெரியாத நிலைமையிலிருந்து கல்வியறிவின் மூலமாக படிப்படியாக எல்லோரும் அறிவுடையவர்களாகிறார்கள். காலிகுடம் என்ற நிலையிலிருந்து குறைகுடம் என்ற நிலையை ஏறக்குறைய உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் அடைகிறார்கள். ஆனால் குறைகுடம் என்ற நிலையிலிருந்து நிறைகுடம் என்ற நிலையை சமயங்களில் கூறப்பட்டுள்ள தத்துவங்களை தெரிந்து கொள்ளாமல் யாருமே அடைவதில்லை. இதற்கு பின்வரும் காரணங்கள் உள்ளன.

1. கற்றது கை மண்ணளவு. கல்லாதது உலகளவு: எவ்வளவுதான் ஒருவர் அறிவு பெற்றாலும் அது முழுமையான இறுதியான அறிவாக ஆவதில்லை. இசைஞானி இளையராஜா செய்த சாதனைகளை ஏ.ஆர்.ரகுமான் முறியடித்துக்கொண்டிருக்கிறார். நாளை இவரின் இசைஞானத்தை ஒன்றுமில்லை என்று கூறும் அளவுக்கு ஒருவர் தோன்றுவார். இந்த உண்மை எல்லாத்துறைகளுக்கும் பொருந்தும். அதுவுமில்லாமல் ஒரிரு துறைகளில் 'எல்லாம் தெரிந்தவர்' என்ற நிலையை அடைவதற்கே வாழ்நாள் போதாது. அப்படியிருக்க எல்லா துறைகளிலும் சான்றோன் என்ற நிலையை அடைவது சாத்தியமில்லை.

2. உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது: உலகில் உள்ள அனைத்தும் தொடர்ந்து மாற்றத்திற்கு உட்பட்டு கொண்டிருக்கிறது. எந்த துறையிலும் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது, இனிமேல் இந்த துறையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட வழியில்லை என்ற நிலை ஏற்படவில்லை. மாட்டுவண்டியை ஒப்பிட்டால் ஆகாயவிமானம் மிகப்பெரிய முன்னேற்றம்தான். ஆனால் தனிமனிதனால் ஒளியின் வேகத்தில் பயணம் செய்ய முடியும் நாள் வரும்பொழுது இன்றய நவீன விமானங்கள் அருங்காட்சியகத்தில் மட்டுமே காணப்படும்.

ஆகவே முழுமையான இறுதியான உலக அறிவு என்பது இவ்வுலகில் என்றும் யாருக்கும் எட்டாக்கனியாகவே இருக்கும்.

நிறைகுடம் தளும்பாது

முழு ஞானம்தான் முழு அறியாமையைப்போல் நிம்மதியை கொடுக்கும். அரை குறை ஞானம் படைத்த யாரும் அதை தொலைத்துவிட்டு பழையபடி ஒன்றுமறியா குழந்தைகளாக மாறி இன்பத்தை அடைய முடியாது. இன்பத்தை அடைய அவர்களுக்கு இருக்கும் ஒரே பாதை முழு ஞானத்தை பெறுவதுதான். குறைகுடம் கூத்தாடும். நிறைகுடம் தழும்பாது. காலிகுடமும் நிலையாக இருக்கும்.

காலிகுடமாயிருப்பவர்களும் நிறைகுடமாயிருப்பவர்களும் நிம்மதியாய் இருப்பதற்கு என்று எதையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. குறைகுடமாயிருப்பவர்கள் அறிவை பெறுவதை தவிர வேறு என்ன செய்தாலும் பயனில்லை.

முழு அறிவைப்பெறாமல் முக்தியடைய முடியாது

முக்தியடையவில்லை என்பதை நாம் இடைவிடாத தேடலில் ஈடுபட்டு கொண்டிருப்பதிலிருந்தே அறிந்து கொள்ளலாம். கண்டுபிடித்துவிட்டேன் கண்டுபிடித்துவிட்டேன் என்று தெருவில் ஓடிய ஆர்கிமிடீஸிலிருந்து அணுவை பிளந்த ஐன்ஸிடின் வரை யாருமே தங்கள் கண்டுபிடிப்பில் முழுமையடைந்ததாக தெரியவில்லை. தேடல் அவர்களின் வாழ்வின் இறுதி நாள்வரை தொடர்ந்தது. அதேபோல் பெறவேண்டியதையெல்லாம் பெற்றுவிட்டேன் என்று மாவீரன் அலெக்ஸாண்டரோ மைக்ரோசாஃப்ட்டின் பில் கேட்ஸோ திருப்தியடைந்ததாக தெரியவில்லை.

புத்தர், ஏசு, ஆதி சங்கரர் போன்ற மதசான்றோர்களின் வழிநடந்தவர்கள் மட்டுமே முழுஅறிவை பெற்று நான் கண்டுகொண்டேன், இனி எனக்கு எதுவும் தேவையில்லை என்ற முக்திநிலையை அடைந்துள்ளார்கள்.

முழு அறிவைபெறுவதற்கு தர்க்கம் மட்டும் உதாவது.

ஜடப்பொருள்களுக்கு உணர்வில்லை என்று கூறினால் அது உனக்கு எப்படித் தெரியும் என்ற கேள்வியை கேட்டால் பதில் ஒன்றும் சொல்ல முடியாது. அவ்வாறு கேள்வி கேட்பவர்கள் வெறும் வறட்டு தர்க்கவாதிகள். அவர்களது தர்க்கம் அவர்களுக்கு முக்தியை கொடுக்காது. ஏனெனில் வெறும் தர்க்கத்தால் நிரூபிக்கப்பட்ட எந்த கருத்தையும் அதைவிட உயர்ந்த தர்க்கவாதத்தால் முறியடித்து விடலாம். கடவுள் இருக்கிறாரென்பதையோ இல்லையென்பதையோ தர்க்கத்தால் நிரூபிக்க முடியாது. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொண்ட பின் அந்த உண்மையை மனதில் நிலை நிறுத்த மட்டும்தான் தர்க்கம் உதவிசெய்யும், இந்த கருத்து எல்லாதுறைகளுக்கும் பொருந்தும்.

அறிவின் ஆதாரம்

தர்க்கம் என்பது அறிவைகொடுக்கும் ஐந்து புலன்களின் வழியாக நாம் பெறும் அறிவை ஆதாரமாக கொண்டுதான் இயங்கமுடியும். உதாரணமாக என் பிறந்த நாளன்றுன்று கட்சி தொண்டர்கள் ஆளுக்கு பத்து ரூபாய் நன்கொடை கொடுத்தார்கள் என்று ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கு கட்சிதலைவர் கணக்கு காட்டினால் அது தர்க்கத்துக்கு பொருந்துமே தவிர அதை உண்மையென நிரூபிக்க உதவாது.

மாறும் உலகை பற்றிய அறிவை பெறுவதற்கு நாம் நமது ஐந்து புலன்களை ஆதாரமாக கொண்டுள்ளது போல இந்த உலகம் எவ்வாறு தோன்றியது போன்ற மதச்சார்புடைய தத்துவங்களை தெரிந்து கொள்வதற்கு அறிவை கொடுக்கும் ஆறாவது புலனான வேதத்தின் துணையை நாட வேண்டும். வேதத்தில் கூறப்பட்ட கருத்துக்களை தர்க்கம் மூலம் சோதித்து புரிந்து கொள்ளலாம். வேதத்தில் கூறப்பட்டு தர்க்கத்துக்கு பொருந்தாத எந்த கருத்துக்களையும் நாம் மூடநம்பிக்கையாக ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அறிவுகூர்மை அதிகம் உள்ளவர்கள் தங்கள் தர்க்க ஞானத்தை முழுதாக பயன்படுத்தி வேதத்தில் கூறப்படும் ஞானத்தை அறிந்து குறைகுடம் என்ற நிலையிலிருந்து நிறைகுடம் என்ற நிலையை விரைவில் அடையலாம்.

முழு அறிவு

வேதத்தை அடிப்படையாக கொள்ளாமல் வெறும் வறட்டு தர்க்கத்தின் துணையை மட்டும் கொண்டு தேடலில் ஈடுபட்டால், தேடல் முடிவடையாது. மாறும் உலகத்தை முழுதும் புரிந்து கொள்ள முடியாது என்பதை புரிந்து கொள்ள வேதத்தின் துணை அவசியம். புரிந்து கொள்ள முடியாத மாயையை ஏன் புரிந்து கொள்ள முடியாது என்று புரிந்து கொண்டவர்கள் மட்டும்தான் நிறைகுடமாக முக்தியடைந்து நம்மிடையே வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

தர்க்கத்தின் இயலாமை

வெறும் தர்க்கத்தின் மூலம் உலகம் தோன்றிய நாளிலிருந்து இன்றுவரை ஒருவர்கூட முக்தியடைந்ததாக தகவல் இல்லை. வேதத்தை சார்ந்த தர்க்க சாத்திரத்தின் உதவியால் முக்தியடைந்தவர்கள் பலர் நம்மிடையே வாழ்ந்துவருகிறார்கள். ஆகவே வெறும் தர்க்கம் முக்தியை கொடுக்காது என்று நிரூபணமாகிறது.

முடிவுரை :

ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது. பசியெடுக்கும்பொழுது சமையல் செய்வது எப்படி என்ற விவாதம் நமது பசியை அதிகபடுத்துமேயன்றி குறைக்காது. அதுபோல நமது நிறைவின்மையை போக்கஉதவாத ஞானம் அறைகுறை ஞானம்தான். உதாரணங்கள் மூலம் வேதம் என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொண்டு தர்க்க சாத்திரத்தின் உதவியால் வேதம் சொல்வது உண்மையா என்று பரிசோதித்து புரிந்துகொண்டு பின் யோகத்தின் மூலம் அந்த ஞானத்தில் நிலைத்து நிற்பதுவே முக்தி. நாம் முக்தியடைந்தபின்தான் வேதத்தின் மகத்துவம் முழுமையாக நமக்கு புரியும். சமையல் குறிப்பு சரிதானா அல்லது நாம் சரியாக சமைக்கிறோமா என்பது போன்று நம்மிடம் இருக்கும் சந்தேகங்கள் சாப்பிடும்பொழுது மறைந்து விடும்.

அது போல முக்தியை கொடுப்பது யோகம்தான் என்றோ, இல்லை காரண-காரிய அறிவுதான் என்றோ, இல்லவேயில்லை தர்க்கம்தான் என்றோ விவாதம் செய்து கொண்டிருப்பதால் முக்தி கிடைக்காது. விஞ்ஞானம், தர்க்கம் ஆகியவை வெறும் ஏட்டுச்சுரைக்காய்கள். நம் குறையை தீர்க்கும் திறனில்லாதவை என்பதை எவ்வளவு சீக்கிரம் புரிந்து கொண்டு வேதத்தின் உதவியை நாம் நாடுகிறோமோ அவ்வளவு விரைவில் நம் அறிவுப்பசி தீர்ந்து நிறைகுடமாவோம்.

பயிற்சிக்காக :

1. நிறைகுடம், குறைகுடம் மற்றும் காலிகுடம் இவற்றை ஒப்பிட்டு சொல்லப்படும் கருத்து என்ன?

2. அரைகுறை அறிவு முழுமை பெறாமலிருக்கும் காரணங்கள் என்னென்ன?

3. முழு அறிவு பெறுவதற்கும் முக்தியடைவதற்கும் என்ன தொடர்பு?

4. தர்க்கம் முக்தியளிக்காது என்பதை நிரூபணம் செய்க.

5. மாறும் உலகை பற்றிய முழுமையான இறுதியான அறிவை பெறுவது எப்படி?

சுயசிந்தனைக்காக :

1. நிறைகுடமாய் ஆகாமல் காலிகுடமாகவே இருப்பதில் என்ன தவறு?

2. ஏன் புரிந்து கொள்ள முடியாது என்பதை புரிந்துகொள்வதால் முக்தி எப்படி கிடைக்கும்?

Tuesday, March 30, 2010

பாடம் 042: ஜடமான உலகம் காரியமா காரணமா? (பிரம்ம சூத்திரம் 2.1.4-11)


நாம் இந்த உலகத்தில் ஜடப்பொருளும் உணர்வும் கலந்து இருப்பதை பார்க்கிறோம். ஜடப்பொருளாலான உலகத்தின் படிபடியான பரிணாம வளர்ச்சியின் ஒருகட்டத்தில் உணர்வுடன் கூடிய உயிரினங்கள் தோன்றின என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். உணர்வு மயமான பரமனிடமிருந்து உலகம் பிறந்தது என்று வேதம் கூறுகிறது. இந்த இரு ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களிடையே எது உண்மை என்பதை இந்த பாடம் விளக்குகிறது.

காரண காரியம்

ஜடமான பொருள் தன்னிடம் இல்லாத உணர்வை உண்டாக்குவதோ உணர்வுமயமான பரமன் தன்னிடமில்லாத ஜடப்பொருளை உற்பத்தி செய்வதோ காரண காரிய அறிவுக்கு பொருத்தமில்லாமல் இருக்கிறது. கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா? முட்டை என்பது வெறும் ஜடப்பொருளாக இருக்குமேயானால் அதிலிருந்து உணர்வுடன் கூடிய கோழி வெளிவர வாய்ப்பில்லை. உயிருடன் கூடிய நம் உடலிலிருந்து நகம் மற்றும் முடி போன்ற ஜடமான பொருள்கள் உற்பத்தி செய்யபடுவதால் உணர்விலிருந்து உணர்வற்ற பொருள் வரலாம் என்பதும் தவறான விளக்கம். உடல் என்பது உயிருடன் கூடிய ஜடப்பொருள். ஆகவே ஒரு ஜடப்பொருளிலிருந்து மற்றொரு ஜடப்பொருள் உண்டாவதை உணர்விலிருந்து ஜடப்பொருள் உண்டாவதாக கூற முடியாது.ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் அணுக்களை ஒன்று சேர்த்தால் இரண்டிலுமில்லாத திரவத்தன்மையுடன் கூடிய தண்ணீர் உருவாவது போல ஜடமான உணவுப்பொருள்களிலிருந்து வீரியமுள்ள விந்து உருவாகிறது என்றும் சொல்ல முடியாது.

இதேபோல் சிலந்தியிலிருந்து வலை வெளிப்படுவது சாணத்திலிருந்து தேள் வெளிப்படுவது போன்ற எந்த உதாரணங்களும் பரிணாம வளர்ச்சியிலிருந்து உணர்வு தோன்றியதா அல்லது உணர்வுதான் ஜடப்பொருள்களை உண்டாக்கியதா என்ற நமது கேள்விக்கு சரியான பதில் தருவதில்லை.

ஒரு கருத்தை விளக்குவதற்காகவேயன்றி அதை உண்மையென நிரூபிக்க உதாரணங்கள் உதவ மாட்டா. உணர்விலிருந்து ஜடம் உருவானதா ஜடத்திலிருந்து உணர்வு உண்டானதா என்பதன் பதிலை உறுதியாக தெரிந்த பின் அதை விளக்க மட்டுமே உதாரணங்களை உபயோகிக்கவேண்டும்.

காரண காரிய அறிவின் மூலம் இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்க முடியாததனால் இப்பொழுது நாம் தர்க்கத்தின் துணையுடன் உண்மையை அறிய முயற்சிக்கலாம்.

உயிரும் உணர்வும்

இவ்வுலகில் நாம் ஜடமான பொருள்களை பார்க்கிறோம். ஜடமும் உணர்வும் கலந்து இருக்கும் உயிரினங்களை பார்க்கிறோம். உணர்வு மட்டும் தனித்து இருப்பதை பார்ப்பதில்லை. ஒருவர் இறந்து விட்டால் உடலிலிருந்து உயிர் பிரிந்து விட்டது என்கிறோம். உயிர் பிரிந்தபின் உடல் உணர்வற்ற ஜடமாகிவிடுகிறது. பிரியும் உயிரை நாம் பார்க்க முடிவதில்லை. மருத்துவ உபகரணங்கள் உடலில் உயிர் இருக்கிறதா இல்லையா என்பதை மட்டுமே ஆய்ந்தறியும் சக்தி கொண்டவையாயிருக்கின்றனவேயன்றி, தனியாக இதுதான் உயிர் என்று காட்ட அருகதையற்றவையாக இருக்கின்றன.

பொருள்கள் எவ்வளவு சிறிதாக இருந்தாலும் அவற்றின் இருப்பை காட்டிக்கொடுக்ககூடிய சக்திகொண்ட உபகரணங்கள் நம்மிடம் இப்பொழுது அறிவியலின் துணையால் உள்ளன. அணுவின் ஒரு சிறு பாகமான எலக்ட்ரான் அல்லது அதிலிருந்து வெளிப்படக்கூடிய சக்தி போன்றவற்றை துல்லியமாக அறியவும் அளக்கவும் நம்மிடம் கருவிகள் உள்ளன. ஆனால் இக்கருவிகளால் உயிரின் இருப்பை காட்ட முடிவதில்லை. இதிலிருந்து உயிர் என்பது பருவடிவமில்லாத (not a gross body) நுண்ணியது (subtle) என்று தர்க்கத்தின் மூலம் அறியலாம்.


உயிர் என்றால் என்ன?

பரமனின் பிரதிபிம்பத்தை உள்ளடக்கிய நுண்ணிய உடலைத்தான் நாம் உயிர் என்று குறிப்பிடுகிறோம். 19 பாகங்களை கொண்ட நுண்ணிய உடல் நமது பருவுடலிலிருந்து பிரிவதைத்தான் நாம் உயிர் பிரிகிறது என்கிறோம்.

உயிரற்ற பொருள்களிடம் உணர்வு இருப்பதில்லை. உயிரற்ற ஜடப்பொருள்களுக்குள் நுண்ணிய உடல் உட்புகுந்தபின்தான் பரிணாம வளர்ச்சி தொடங்குகிறது.(Involution precedes evolution).

எனவே ஜடமான உலகம் தோன்றுவதற்கு முன் உணர்வுடன் கூடிய நுண்ணிய உடல்கள் இருந்திருக்க வேண்டும்.

வேதத்திலிருந்து நமக்கு கிடைக்கும் இந்த விளக்கங்கள் நம் தர்க்க அறிவுடன் ஒத்து போகின்றன.

உலகம் தோன்றியது எப்படி?

ஆனால் உணர்வுடன் கூடிய நுண்ணிய உடல்களால் ஜடமான உலகை உருவாக்கியிருக்க முடியாது. ஏனெனில் நுண்ணிய பொருள்கள் கூட ஜடமானவையே என்று வேதம் கூறுகிறது. அவை உணர்வுடன் கூடியவையாக தோற்றமளிப்பதற்கு காரணம் அவற்றிற்கு பரமனின் உணர்வை பிரதிபலிக்கும் தன்மை இருப்பதால் மட்டுமே. எப்படி ஒரு கண்ணாடியும் கல்லும் ஜடமாயிருந்தாலும் கண்ணாடிக்கு மட்டும் ஒளியை பிரதிபலிக்கும் சக்தியிருப்பதால் சூரியனின் ஒளியை பிரதிபலிக்கிறதே தவிர அதற்கு சுயமாக ஒளிரும் தன்மையில்லையோ அது போல நுண்ணிய உடல்களுக்கு உணர்வு சொந்தமில்லை. பரமன் மட்டுமே உணர்வுமயமானவன். உணர்விலிருந்து ஜடப்பொருள் உருவாகியிருக்க முடியாது.

ஆக உணர்வு ஜடப்பொருள்களை உருவாக்கவில்லை. அவை ஜடப்பொருள்களென்பதால் தானாகவும் உருவாகியிருக்க முடியாது. எனவே ஜடமான உலகம் தர்க்கத்தின் படி இருக்க முடியாது. ஆனால் இருக்கிறதென்று நம் அனுபவம் கூறுகிறது.

நம் கண்ணால் பார்த்து கொண்டிருக்கும் ஒரு யானையின் மீது ஒரு பெரிய துணியை போட்டு மூடிய அடுத்த நொடியில் அந்த துணி கீழே விழ அங்கு அதுவரை நின்று கொண்டிருந்த யானையை காணவில்லை. தர்க்கத்தின் படி யானை மாயமாக மறைந்திருக்க முடியாது. ஆனால் நம் அனுபவத்தில் யானையை காண முடிவதில்லை. இம்மாதிரி இந்திர ஜால காட்சிகளில் நாம் நம் அனுபவத்தை நம்புவதில்லை. என்ன நடந்தது என்று தெரியாவிட்டாலும் எதோ நடந்திருக்கிறது என்று நமக்கு தெரிகிறது. இருக்கும் யானையை இல்லையென்றோ இல்லாத யானையை இருக்கிறதென்றோ நாம் நம்பும்படி மந்திரவாதி ஏதோ செய்திருக்கிறான் என்று நாம் உணர்வதால் நம் அனுபவத்தை உண்மையென நம்பாமல் நடப்பதையெல்லாம் ஆச்சரியத்துடன் பார்த்து ரசிக்கிறோம்.

அதே போல உணர்வு மற்றும் ஜடம் ஆகிய இரு ஒன்றுக்கொன்று முரணான பொருள்கள் ஒன்றையொன்று உருவாக்கியிருக்க முடியாது. ஆனால் உணர்வுடன் கூடிய நாம் ஜடப்பொருள்களை அனுபவிக்கிறோம். ஏதோ நடந்திருக்கிறது. எப்படி இது நடந்தது என்று தெரியாவிட்டாலும் இல்லாத உலகத்தை இருப்பதாக காட்டும் கடவுள் என்னும் மாயாவியின் சக்தியை நாம் ஆச்சரியத்துடன் அனுபவிக்க வேண்டும்.

இந்திர ஜாலக்காட்சியை, "ஆமாம், முதலில் யானை இருந்தது. பின் நம் கண்முன்னாலேயே மறைந்து விட்டது. அதனால் என்ன?” என்று சுவாரசியமில்லாமல் பார்த்துகொண்டிருந்தால் நமது நேரமும் பணமும் வீண். அதே சமயத்தில் மாஜிக் நிபுணனின் கால்களில் விழுந்து நீங்கள்தான் கடவுள் என்று கொண்டாடுவதும் முட்டாள்த்தனம். அதுபோல ஜடமான உலகம் இருக்க முடியாது. ஆனால் இருப்பதை அனுபவிக்கிறோம். கடவுளின் திறனை பாராட்டிவிட்டு வாழ்வை இன்பமாக அனுபவிப்பதை விடுத்து இவ்வுலகம் உண்மை என நம்புவது அறியாமை.

எது உண்மையில் இல்லையோ ஆனால் இருப்பது போல தோற்றமளிக்கிறதோ அது மாயை. அது மாயை என்பது புரியாமல் உண்மை என்று நினைத்துகொண்டிருந்தால் எப்பொழுதும் இன்பமாக இருப்பதற்கு பதிலாக பயம், துக்கம், குற்றவுணர்வு போன்ற உணர்வுகளால் வாட்டப்பட்டு கொண்டிருப்போம்.

ஆக உலகம் தோன்றியது எப்படி என்ற கேள்விக்கு, "உலகம் தோன்றவில்லை. அது இருப்பது போல் தெரியும் ஒரு மாயத்தோற்றம்.” என்பதுதான் சரியான விடை. இதை புரிந்து கொள்ள கோமாளி தொப்பி உதாரணத்தை உபயோகிக்கலாம். ஒரு முழுநீள காகிதத்தாளை (FoolsCap paper) கோமாளி தொப்பி வடிவில் உருட்டினால் வெறும் காகிதத்திலிருந்து நமக்கு ஒரு தொப்பி கிடைக்கிறது. தொப்பி என்பது காகிதத்திலிருந்து வேறுபட்ட ஒரு பொருளல்ல. காகிதம்தான் தொப்பி. இருப்பது காகிதம் மட்டும்தான். தொப்பி என்பது வெறும் வடிவமும் பெயரும் மட்டுமே. அதுபோல இருப்பது பரமன் மட்டும்தான். உலகம் என்பது வெறும் வடிவமும் பெயரும் மட்டுமே. பிரபஞ்சத்தில் உள்ள பொருள்களுக்கு வடிவங்களை கொடுத்தது இறைவனின் திறமை. அவற்றிற்கு பெயர்களை சூட்டியது மனிதனின் கற்பனை.

முடிவுரை :

நாம் இருக்கிறோம் என்பது உண்மை. நாம் உணர்வும் உடலும் கலந்து இருக்கிறோம். காரண காரிய அறிவின் படி ஒன்றுக்கொன்று முரணான உணர்வோ அல்லது ஜடமான உடலோ ஒன்றை ஒன்று உருவாக்கியிருக்க முடியாது. வேதத்தில் கூறப்பட்ட கருத்துக்களை தர்க்கத்தின் துணை கொண்டு ஆராய்ந்தால் இருப்பது உணர்வு மட்டும்தான் என்றும் உடல் இருப்பதுபோல் தோற்றமளிக்கும் ஒரு மாயை என்றும் தெரிகிறது. நம் உடலும் இந்த உலகமும் ஒரு மாயை என்று புரிந்தால் நாம் எப்பொழுதும் இன்பமாக இருக்கலாம்.

இருப்பது இரண்டு கட்சிகள். ஏதோ ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒன்றை தேர்ந்தெடுத்தால் நாம் துன்பபடுவது நிச்சயம். மற்றதை தேர்ந்தெடுத்தால் நாம் எப்பொழுதும் இன்பமாயிருக்கலாம். உடலும் உணர்வும் கலந்து இருக்கும் நான் உடலா? உணர்வா? உடல் என்றால் துன்பபடுவதும் மரணமடைவதும் நிச்சயம். உணர்வு என்றால் மரணமில்லாமல் எப்பொழுதும் அமைதியாகவும் இன்பமாகவும் இருப்பது நிச்சயம்.

நம் உடல் மற்றும் மனம் உள்ளிட்ட இந்த உலகம் நிலையானதன்று. தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பது. உணர்வு என்பது என்றும் மாறாதது. இன்பவடிவாக என்றும் இருப்பது.

நாம் உடலா உணர்வா என்று நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்தல் களத்தில் மக்களின் அறியாமையால் சுயநலவாதிகள் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் உடலா உணர்வா என்பதில் போட்டியே இல்லை. இருப்பது உணர்வு ஒன்றுதான். இல்லாத உடலை இருப்பதாக கருதி அதற்கு ஓட்டுப்போட்டு 'நான் உடல்தான்' என்று முடிவுசெய்யுமளவுக்கு நாம் அறியாமையில் மூழ்கியிருப்போமேயானால், முட்டாள்கள் இருக்கும் ஜனநாயக அமைப்பில் குண்டர்களே ஆட்சிக்கு வருவார்கள் என்ற கூற்றுக்கு ஒப்ப நாம் தொடர்ந்து வாழ்க்கையின் வளமை-வறுமை, வெற்றி-தோல்வி போன்ற இருமைகளிடையே அலைக்களிக்க படுவதை தவிர்க்கமுடியாது.

எனவே முக்தியடைய பரிணாம வளர்ச்சி தத்துவம் உதவாது. மாறும் உலகம் என்றாவது ஒருநாள் நாம் இன்பமாக இருக்க வழிவகுக்கும் என்பது பகல் கனவு. உணர்வுமயமான ஆனந்த மயாமான பரமனே நான் என்ற அறிவு மட்டுமே நமக்கு முக்தியை கொடுக்கும்.

பயிற்சிக்காக :

1. உதாரணங்கள் எதற்கு உபயோகப்படும்?

2. உதாரணங்களை எதற்கு உபயோகப்படுத்த முடியாது?

3. காரண காரிய அறிவின் மூலம் ஏன் உலகம் காரணமா அல்லது காரியமா என்று நிரூபிக்க முடியாது?

4. உயிர் என்றால் என்ன?

5. உயிரை ஏன் அறிவியல் உபகரணங்களால் கண்டுபிடிக்க முடியாது?

6. உணர்வு-ஜடம் இவற்றுக்கிடையே நாம் யாருக்கு ஓட்டுப்போட்டால் நமக்கு என்ன பலன்?

சுயசிந்தனைக்காக :

1. தர்க்கத்தினால் உண்மையை அறிந்து கொள்ள முடியுமா?


2. உலகம் காரணமா காரியமா என்பது போன்ற புரியாத கருத்தையெல்லாம் அனாவசியமாக ஆராய்ந்து காலத்தை விரயம் செய்யாமல் நாம் ஏன் இன்பமாக பொழுதை கழிக்க கூடாது?

Sunday, March 28, 2010

பாடம் 041: யோகம் முக்தியை கொடுக்குமா? (பிரம்ம சூத்திரம் 2.1.3)


பதஞ்சலி தனது யோகசூத்திரத்தில் முக்தியை கொடுக்கும் எட்டு படிக்கட்டுகளை விவரித்துள்ளார். தற்காலத்தில் நிலவிவரும் அனைத்து தியான முறைகளும் யோகசூத்திரத்தை அடிப்படையாக கொண்டவைதான். தியானம் செய்வதன் மூலம் முக்தியை அடையலாம் என்பது பரவலாக நிலவிவரும் ஒரு கருத்து. இது தவறான கருத்து என்று வேதம் இந்த பாடம் மூலம் விளக்குகிறது.

முக்தி என்பது நமது குறிக்கோள். யோகம் என்பது நமது குறிக்கோளை அடைய உதவும் வழி. இதில் யாருக்கும் எந்த குழப்பமும் கிடையாது. ஆனால் முக்தியென்றால் என்ன என்பதிலும் யோகமென்றால் என்ன என்பதிலும் பல தெளிவற்ற தவறான கருத்துக்கள் உள்ளன.

யோகம் என்றால் என்ன?

யோகம் என்றால் ஒன்று சேர்வது என்று பொருள். பரமனும் நானும் எப்பொழுதும் ஒன்றுதான் என்று புரிந்து கொள்வதுதான் யோகத்தின் குறிக்கோள். ஆனால் நானும் பரமனும் வேறு. நான் பரமபதத்தை யோகம் செய்வதன் மூலம் அடையலாம் என்பது போன்ற பல தவறான கருத்துக்கள் நிலவி வருகின்றன. மேலும் யோகம் என்பதற்கு தியானம் செய்வது மற்றும் யோகாசனம் என்ற உடற்பயிற்சி போன்ற தவறான பொருள்களும் பாமர மக்களிடையே வழக்கத்தில் உள்ளது.

முக்தி என்றால் என்ன?

பிறப்பு-இறப்பு மறுபடியும் பிறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுபடுவது முக்தி. நாம் செய்த பாவபுண்ணியங்களின் பலனை அனுபவிக்க நாம் திரும்ப திரும்ப பிறவிகள் எடுத்துகொண்டு வருகிறோம். வெற்றி-தோல்வி, வளமை-வறுமை போன்ற இருமைகள் நிறைந்த உலகில் உழன்றுகொண்டிருக்கிறோம். இந்த சுழற்சியிலிருந்து விடுபட்டு குறையாத இன்பத்துடன் வாழ்வதுதான் முக்தி. முக்தியடைந்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்று வேதம் கூறுகிறது.

நாம் முக்தியடைந்து விட்டோமா இல்லையா என்று நமக்கு தெரிய வேண்டும். நாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாமல் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தால் அவன் இறக்கிவிடும் இடத்தில் இறங்கிவிட்டு அவன் கேட்கும் பணத்தை கொடுப்பதை தவிர நமக்கு வேறு வழியில்லை. போகும் வழி தெரியவேண்டுமென்ற அவசியமில்லை. போகவேண்டிய இடம் தெளிவாக தெரிந்தால் மட்டும் போதும். அது தெரியாவிட்டால் பயணம் செய்ய வேண்டிய அவசியமேயில்லை. முக்தி என்பது என்ன என்று தெரியாவிட்டால் யோகம் நமக்கு அவசியமில்லாத ஒன்று.

முக்தி என்றால் என்ன என்பதை நாம் வேதத்தை படிக்காமலேயே, யாருடைய உதவியுமில்லாமலேயே அறிந்து கொள்ளலாம். நாம் செய்யும் அனைத்து செயல்களின் முடிவான நோக்கம் ஆனந்தம். எப்பொழுதும் இன்பமாயிருப்பதே முக்தி. முக்தியென்பதற்கு இதைத்தவிர வேறு எந்த பொருளென்றாலும் அது நமக்கு தேவையில்லை.

இன்றிலிருந்து என்றும் இன்பமாயிருப்பதுதான் நமது குறிக்கோள். அதுதான் முக்தி.

யோகம் முக்தியை கொடுக்குமா?

ஆம். கொடுக்கும். பதஞ்சலியால் விவரிக்கப்பட்ட அஷ்டாங்க யோகத்தை முறையாக செய்தால் நிச்சயமாக முக்தியை அடையலாம்.

இல்லை. கொடுக்காது. யோகம் என்ற பெயரில் கண்ணை மூடி அமர்ந்து கொண்டோ அல்லது உடலை வில்லாக வளைத்து கொண்டோ அல்லது மூச்சை அடக்கியோ நாம் எத்துணை பயிற்சி செய்தாலும் நாம் நம் நேரத்தை வீணடத்துகொண்டிருக்கிறோம் என்ற அறிவு வந்தால் வருமே தவிர முக்தி வராது.

அஷ்டாங்க யோகம் என்றால் என்ன?

யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணம், தியானம், சமாதி ஆகிய எட்டு அங்கங்கள் சேர்ந்தது அஷ்டாங்க யோகம். இந்த எட்டு படிகளில் சுலபமாக செய்யகூடிய ஆசனம், பிராணாயாமம், தியானம் என்ற மூன்று படிகள் மட்டும் மக்களிடையே பிரபலப்படுத்தப்பட்டுள்ளது. அறியாமையின் காரணமாக மக்கள் இதைத்தான் முழுமையான யோகம் என்று நம்பிக்கொண்டு பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

வேதத்தில் இந்த அனைத்து படிக்கட்டுக்களும் விளக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை முறையாக ஓரிடத்தில் கொடுக்கப்படவில்லை. பதஞ்சலியின் ஒப்பற்ற யோகசூத்திரம் வேதத்தின் கருத்துக்களை முறைபடுத்தி பாமரமக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் கொடுக்கிறது. முதல் இரண்டு படிக்கட்டுக்களான யமம், நியமம் ஆகியவை என்ன என்று தெரியாமலேயே ஆசனம், பிராணாயாமம் போன்ற பயிற்சியில் ஈடுபட்டால் பலன் கிடைக்காது என்பதில் எந்த சந்தேகமும் இருக்க வேண்டாம். தியானம் என்பது முதல் ஆறு படிகளையும் முறையாக கடந்த பின்னர் ஆரம்பிக்க வேண்டிய ஏழாவது படி.

சமாதி என்றால் என்ன?

அஷ்டாங்க யோகத்தின் முதல் ஏழு படிகளை முறையாக கடந்த பின் அடையும் முடிவான பலன் சமாதி. சமாதி என்பது எவ்வித எண்ணங்களும் இல்லாமல் எண்ணங்கள் வராமலிருக்க எவ்வித பிரயத்தனமும் செய்யாமல் கண்ணை மூடி அமர்ந்திருக்கும் நிலை என்பது மட்டுமல்ல. கண்ணை திறந்து கொண்டு எல்லாவித நிகழ்வுகளிலும் பங்கேற்று கொண்டு, மனதில் ஏற்படும் எண்ணங்களும், செய்யும் செயல்களும் 'என்னுடையது' என்ற அகங்காரம் இல்லாமல் இருப்பதும் சமாதியாகும். சமாதி என்பதற்கும் முக்தியென்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.

வாழ்வில் ஏற்படும் இருமைகளை சமமாக பார்க்கும் சக்தி சமாதியடைந்தவர்களுக்கே சாத்தியம். ஆக முறையாக அஷ்டாங்க யோகத்தின் எட்டு படிகட்டுகளையும் ஒன்றன்பின் ஒன்றாக செய்தால் நாம் முக்தியடையலாம்.

தியானம் ஏன் முக்தியை கொடுக்காது?

வேதத்தில் ஞானம் மட்டும்தான் நமது பழைய கர்மபலன்களை அழிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.கர்மபலன்களை அழிக்காவிட்டால் மறுபடியும் பிறக்கவேண்டியது அவசியம். எனவே ஞானம்தான் முக்தியை கொடுக்கும். நம்மிடம் ஞானத்தை கொடுக்கும் கருவிகள் ஐம்புலன்கள் மற்றும் வேதம் என்ற ஆறு உள்ளன. தியானம் என்பது இந்த ஆறு அறிவை கொடுக்கும் கருவிகளில் ஒன்று அல்ல. எனவே தியானம் நிச்சயமாக முக்தியை கொடுக்காது.

ஆனால் புத்தருக்கு போதிமரத்தினடியில் ஞானம் கிடைத்ததே, அது போல நாமும் தியானம் செய்தால் ஏன் நமக்கும் ஞானம் கிடைக்காது? புத்தருக்கு போதிமரத்தடியில் ஞானம் கிடைத்தது உண்மை. ஆனால் அவருக்கு பிறகு வேறு யாருக்கும் எந்த மரத்தடியிலும் இன்றுவரை ஞானம் கிடைத்ததாக தெரியவில்லை. எனவே நமக்கு கிடைக்காது என்பது உறுதி. புத்தர் வேதங்களை முறையாக பயின்றபின்பு அதில் கூறப்பட்ட கருத்துக்களை தியானம் என்ற பெயரில் சிந்தித்து கொண்டிருந்தார். ஆப்பிள் ஏன் கீழே விழுந்தது என்று சிந்தித்த நியூட்டனுக்கு 'புவியீர்ப்பு விசை' என்ற பதில் மனதில் தோன்றியது போல அவருக்கும் மக்களது துன்பத்திற்கு காரணம் ஆசை என்ற உண்மை தோன்றியது. அது போல நாமும் வேதத்தை முறையாக படித்துவிட்டு ஆசிரியர் கூறிய கருத்துக்களை சிந்தனை செய்து கொண்டிருந்தால் எந்த நேரத்திலும் நமக்கு ஞானம் கிடைக்கலாம்.

நமது அனைத்து துன்பங்களுக்கும் 'நாம் யார்?' என்ற உண்மை அறிவு இல்லாமல் நாம் நம் உடல்/மனம் என்று நினைத்து கொண்டிருக்கும் அறியாமைதான் காரணம். அறியாமை என்பது ஞானத்தால் மட்டுமே அகலும். தியானம் அறியாமையை போக்காது. எனவே தியானம் முக்தியை தராது.

யோகம் என்ற பெயரில் சொல்லித்தரப்படும் யோகாசனம், பிராணாயாமம், தியானம் போன்றவை உடல் ஆரோக்கியம், மன அமைதி போன்ற பலன்களை தரலாம். ஆனால் இவை மட்டும் நிச்சயம் முக்தியைதாரா. இதை நிருபிப்பது மிகவும் எளிது. நாம் செல்ல வேண்டிய இடம் நமக்கு தெளிவாக தெரிந்தால் ஆட்டோ ஒட்டுனருக்கு அது தெரியுமா என்று சோதித்து பார்த்துவிடலாம். அது போல நமக்கு யோகம் செய்ய சொல்லித்தரும் ஆசிரியரிடம் முக்தி என்றால் என்ன என்ற கேள்வியை கேட்டால் அவர் சொல்லும் பதிலிலிருந்து நாம் அவர் சொல்லும் பாதையில் செல்வதா வேண்டாமா என்று முடிவு செய்துவிடலாம்.

முடிவுரை :

வேதத்தின் கருத்துக்களை முறைபடுத்தி யோகசூத்திரமென்ற பெயரில் பதஞ்சலி வழங்கியுள்ளார். அவர் கூறிய எட்டு படிகளையும் முறையாக பயின்றால் நாம் முக்தியை அடையலாம். ஆனால் தகுந்த ஆசிரியர் கிடைப்பது கடினமென்பதால் யோகசூத்திரத்தின் மூலம் முக்தியடைவது துர்லபம். வேதத்தை முறையாக கற்று தரும் அனைத்து ஆசிரியர்களும் தங்கள் பாடதிட்டத்தில் ஒரு பகுதியாக நிச்சயம் யோகசூத்திரத்தை மாணவர்களுக்கு கற்றுத்தருவார்கள். எனவே நாம் தியானம் முக்தியை தரும் என்ற நினைவை கைவிட்டு முறைப்படி வேதத்தை பயில ஆரம்பிக்கவேண்டும். யோகசூத்திரத்தை உள்ளடக்கிய நமது பயிற்சி நம்மை முக்தியடையச்செய்யும்.

பயிற்சிக்காக :

1. முக்தி என்றால் என்ன?

2. யோகம் என்றால் என்ன?

3. யோகம் முக்தியை கொடுக்குமா?

4. அஷ்டாங்க யோகத்தின் எட்டு படிக்கட்டுக்கள் யாவை?

5. சமாதிக்கும் முக்திக்கும் என்ன வேறுபாடு?

சுயசிந்தனைக்காக: :

1.சமாதி என்றால் மனதில் எவ்வித எண்ணங்களும் இல்லாமல் இருப்பது மட்டுமென்றால் அதனால் என்ன பயன்?

2. யோகம் செய்பவர்கள் சமுதாயத்திலிருந்து விலகி காட்டில் வசிக்க வேண்டுமா?