Monday, September 27, 2010

பாடம் 092: தாமரை இலை மேல் தண்ணீர் போல (பிரம்ம சூத்திரம் 3.1.24-27)

நான் ஆனந்தமயமானவன் என்ற உண்மையை அறியாமல் உலகத்தில் இன்பத்தை தேடியலையும் மனிதன் எப்பொழுது தாமரை இலைமேல் இருக்கும் தண்ணீர் போல பட்டும் படாமலும் இவ்வுலகில் வாழத்தொடங்குகிறானோ அப்பொழுதுதான் அவனுக்கு வேதம் கூறும் உண்மையை அறியும் ஆர்வம் ஏற்படும் என்ற கருத்தை இந்த பாடம் வலியுருத்துகிறது.

ஆசையின் தன்மை

ஆசை தொடர்ந்து வளரும் தன்மை உள்ளது. நெய் உற்றி நெருப்பை அணைக்க முடியாது. அது போல ஆசை பட்ட பொருளை அடைவதால் ஆசை அதிகமாகுமே தவிர குறையாது.

எட்டா கனிதான் இனிக்கும். எது நமக்கு சுலபமாக கிடைக்கிறதோ அதில் அவ்வளவு இன்பம் இருப்பதில்லை என்பதை நாம் அனுபவத்தில் உணர்வோம். உண்மை என்னவெனில் எது மிகவும் பிரயத்தனபட்டபின் கிடைக்கிறதோ அதிலும் இன்பம் இருக்காது. ஆனால் அது கிடைத்தால் இன்பம் அடைவோம் என்ற நினைப்பு நம்மை விட்டு அகலுவதில்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை என்று தொடர்ந்து நமது சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு பொருளை  விரும்புவதை எல்லா மனிதர்களும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இது ஒரு அவசியமான பயிற்சி. பிறந்த குழந்தை தொடர்ந்து கையையும் காலையும் அசைக்கத்துவங்குவது மிக அவசியமான உடற்பயிற்சி என்று அதற்கு தெரியாவிட்டாலும் அது அவ்வாறு தொடர்ந்து செய்கிறது. அதே போல் ஆசை பட்டதை அடைந்த பின் இன்பம் கிடைக்காதபோதும் தொடர்ந்து மென்மேலும் ஆசையை வளர்த்திக்கொள்வது நமது இச்சா சக்தி, ஞான சக்தி மற்றும் கிரியா சக்திகளை வலுபடுத்திக்கொள்ள தேவையான ஒரு பயிற்சி.

வேதத்தை முறையாக பயின்று குறைவில்லாத இன்பத்தை அடைய நமக்கு இம்மூன்று சக்திகளும் மிக அதிக அளவில் தேவை. எனவே உலக வாழ்வில் வெற்றிபெறும் திறன் இல்லாதவர்கள் காவியுடை உடுத்திக்கொண்டால் கோவில் முன் அமர்ந்து பிச்சை எடுத்து சாப்பிடலாமே தவிர முக்தி கிடைக்காது.

உலகம் பற்றிய உண்மை

பெற்றோர்களும் ஆசிரியர்களும்நன்றாக படி. அப்பொழுதுதான் நன்றாக சம்பாதித்து சந்தோஷமாக வாழ முடியும்என்று அறிவுரை வழங்கும்பொழுது நாம் கற்கும் கல்விக்கும் இன்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று நமக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்த அறிவுரைகளை உண்மை என்று நம்பி கல்லூரிப்படிப்பை முடித்து நல்ல வேலை கிடைத்தபின் தொடர்ந்து இன்பத்தை தேடி எல்லோரும் ஓட ஆரம்பிக்கிறோம். இந்த ஓட்டப்பந்தயத்தில் வேகமாக ஓடுபவன் வெற்றிபெறுவான் என்கிற உத்தரவாதம் கிடையாது. யார் ஓடும்பொழுது தனக்கு முன்னால் ஓடுபவர்களை கவனித்து பின் வரும் உண்மைகளை முதலில் அறிந்து கொள்கிறானோ அவனுக்குத்தான் வெற்றி வாய்ப்பு மிகவும் அதிகம்.

முதல் உண்மை : துன்பம் கலந்த இன்பம்

வாழ்க்கையில் நாம் பெறும் எந்த இன்பமும் துன்பத்துடன் கலந்தே நமக்கு கிடைக்கிறது. அயராது உழைத்ததால் பதவி உயர்வு கிடைக்க, அது மேலும் உழைப்பை அதிகரிக்கும் அவசியத்தை ஏற்படுத்திவிடும்.

இரண்டாம் உண்மை: குறையும் இன்பம்

வாழ்வில் நாம் அடையும் எந்த இன்பமும் படிப்படியாக குறையும் தன்மை உடையது. (Law of diminishing returns).  வேண்டிய பொருளை அடைந்தவுடன் ஏற்படும் அளவுகடந்த ஆனந்தம் ஒரு சிலநாட்களுக்கு பிறகு வெகுவாக குறைந்து விடுகிறது.  

மூன்றாம் உண்மை: நிலையா இன்பம்

ஒரு நல்ல ஆடையை அதிக விலை கொடுத்து வாங்கி முதல் முறையாக அணியும்பொழுது நண்பர் ஒருவர் இது உனக்கு கொஞ்சம்கூட பொருத்தமாயில்லை என்று கூறிவிட்டால் அதுவரை இருந்த இன்பம் சுவடு தெரியாமல் உடனே மறைந்து விடும்.

நான்காம் உண்மை: ஆடம்பரமான தேவைகள்

நம்மிடம் இருக்கும் பொருள்கள் அனைத்தும் நம் அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்ய அவசியமானவை. இல்லாத பொருள்கள் அனைத்தும்இருந்தால் நன்றாக இருக்கும்என்ற வகையை சேர்ந்தவை. இது அனைத்து தர மக்களுக்கும் பொருத்தமான உண்மை. மேலும் எப்பொழுது இல்லாத பொருள்மேல் ஆசை பட்டு அதை இருக்கும் பொருளாக மாற்றிக்கொள்வோமோ அப்பொழுதிலிருந்து அந்த பொருள் நமது அடிப்படைத்தேவை என்ற பட்டியலில் சேர்ந்து விடும்.

எனவே அடிப்படைத்தேவைகள் என்ற பட்டியலை மிக நீளமாய் வைத்திருப்பவர்களுக்கு இன்பத்தை விட துன்பம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

ஐந்தாம் உண்மை: நிறைவு தரா இன்பம்

எவ்வளவுதான் பணம் சம்பாதித்திருந்தாலும், நல்ல குடும்பம் அமைந்திருந்தாலும், ஆரோக்கியமான உடல் இருந்தாலும் ஏதோ ஒரு இனம் தெரியாத குறை நம் எல்லோரிடமும் இருந்து கொண்டே இருக்கும். (இந்த குறையை வேதத்தை படித்து புரிந்து கொள்ளாமல் நிறைவு செய்ய முடியாது.)  எதையாவது தேடி, இனிமேல் தேட உடலில் வலு இல்லை என்ற காரணத்தால் மட்டும் தேடலை நிறுத்தி இளைஞர்களை பொறாமையுடன் பார்க்கும் முதியோர்கள் நிறயபேர் உண்டு.

இன்பத்தை பற்றிய இந்த ஐந்து உண்மைகளை யார் முதலில் அறிந்து கொள்கிறார்களோ அவர்களே இல்லாத இடம் தேடி ஓடும் ஓட்டப்பந்தயத்தில் இருந்து விலகி இன்பத்தை சரியான இடத்தில் தேட தகுதியானவர்கள்.

பொருளாதார ஓட்டப்பந்தயத்தில் இன்பம் எனும் வெற்றி கிடைக்காது என்பதால் அந்த பந்தயத்தில் கலந்து கொள்ளவே கூடாது என்பது தவறான முடிவு. அதில் கலந்து கொண்டு சில காலம் ஓடினால் மட்டுமே மேற்கூறிய ஐந்து உண்மைகளை அனுபவபூர்வமாக அறிந்து கொள்ள முடியும்.

மேலும் வேதத்தை படிக்க தேவையான மனப்பக்குவமும் இந்த பந்தயத்தில் முழுமுயற்சியுடன் ஈடுபட்டால் மட்டுமே நமக்கு கிடைக்கும்.

சுகமும் இன்பமும்

வாழ்க்கை தரம் (standard of living) தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு மக்களின் இடைவிடாத உழைப்பு மட்டுமே காரணம். நன்றாக படித்து நல்ல வேலை செய்தால் நிறய பணம் கிடைக்கும். நல்ல கார், வீடு ஆகியவற்றை வாங்கலாம். குழந்தைகளுக்கு நல்ல படிப்பை கொடுத்து அவர்களுக்கும் நிறய பணம் சம்பாதிக்கும் தகுதியை ஏற்படுத்தி கொடுக்கலாம். இந்த எண்ணப்போக்கில் எந்த தவறும் இல்லை. இதை அனைத்தையும் நாம் அனைவரும் செய்தால் மட்டுமே உலகம் தொடர்ந்து முன்னேறி எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்என்ற கனவு நினைவாவது சாத்தியம்.

ஆனால் இதற்கும் இன்பத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதை மட்டும்தான் நாம் உணர வேண்டும். ஏழையாக குடிசையில் குறைவில்லா இன்பத்துடன் வாழ வேண்டுமா அல்லது அனைத்து வசதிகளுடன் கூடிய அரண்மனையில் இன்னும் வேண்டுமென்கிற குறைவுடன் கூடிய இன்பத்துடன் வாழ வேண்டுமா என்று கேட்டால், நாம் புத்திசாலியாக இருந்தால் அரண்மணையில் குறைவில்லா இன்பத்துடன் வாழ வேண்டும் என்று பதில் சொல்வோம்.

பணமும் இன்பமும்

பணமும் இன்பமும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை என்பது உண்மையென்றாலும் இரண்டும் நமக்கு மிகவும் அவசியமானவை. இன்பமாயிருப்பதால் மட்டும் நமக்கு வாழ்வில் சுகம் கிடைத்துவிடாது.  சுகமாயிருக்க நிச்சயம் பணம் வேண்டும்.

நமக்கு மட்டுமின்றி நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு தேவையான பணத்தை கொடுக்க முடிந்த அளவுக்கு நாம் பணக்காரர்களாய் இருப்பது நன்று. எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணம் சம்பாதிப்பது நமது கடமை. பணத்தை உபயோகபடுத்தி இன்பத்தை பெற முடியாது என்பது மட்டும் நமக்கு புரிந்தால் போதும். பொருள் ஈட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டிய அவசியமேயில்லை.

ஆசையே இன்பத்திற்கு காரணம்

உலகத்தில் இன்பம் இருக்கிறது என்ற அறியாமையின் அடிப்படையில் தோன்றும் ஆசை நம்மை செயலில் ஈடுபடுத்துகிறது. தொடர்ந்து உழைப்பதால் நாம் நம் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்கிறோம். அதே சமயத்தில் உலகில் இன்பம் இல்லை என்ற மனப்பக்குவமும் நமக்கு ஏற்படுகிறது. எனவே வேதம் படிக்க ஆரம்பிக்கிறோம். நானே ஆனந்த மயமான பரமன் என்பதை அறிந்து கொள்கிறோம். இன்பத்திற்காகவன்றி இன்பமாக இருப்பதால் தொடர்ந்து உழைக்கிறோம். மேலும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திகொண்டு குறைவற்ற இன்பத்துடன் சிறப்பாக வாழ்கிறோம். எனவே ஆசையே இன்பத்திற்கு மட்டுமில்லாமல் சுகத்திற்கும் காரணம்.

முடிவுரை :

வைராக்யம் உள்ளவர்கள் உலக சுகங்களை அனுபவிக்க மாட்டார்கள் என்பது தவறான கருத்து. உலகத்தில் உள்ள அனைத்தையும் உள்ளதை உள்ளவாறு பார்க்கும் திறமை படைத்தவர்களே வைராக்யம் உள்ளவர்கள். இவர்கள் பொருள்களில் இல்லாத இன்பத்தை இருப்பதாக நினைத்து அவற்றிற்கு ஏங்க மாட்டார்கள்.

உலகம் படைக்கப்பட்டது நமது அனுபவத்திற்காக. இதில் வைராக்யம் உள்ளவர்களால் மட்டுமே அனைத்து பொருள்களையும் துன்பம் கலக்காத இன்பத்துடன் தொடர்ந்து அனுபவிக முடியும். உலக சுகங்களின் மேல் ஆசைபட்டு அவற்றை அடையும் முயற்சியில் என்று நாம் வைராக்கியத்தை அடைகிறோமோ அன்றிலிருந்து நமக்கு கிடைக்கும் அனைத்து பொருள்களையும் அளவுகட்டுப்பாடு ஏதுமின்றி அனுபவிக்கலாம். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு வைராக்யம் வருவதற்குள் முதுமை வந்துவிடுகிறது. எனவே வைராக்யம் வந்தபின்கூட இயலாமை காரணமாக அனுபவங்களை இழக்க நேரிடுகிறது.

பொருளாதார வாழ்வில் முன்னேறி வாழ்வில் சுகங்களை பெற அவசியமான கல்வியை இளம் வயதில் கற்பது போல குறைவில்லா இன்பத்தை அடைய தேவையான வேதத்தையும் முதுமை அடைவதற்குள் பயின்று தேர்ந்தால் வாழ்வில் சுகமாகவும் இன்பமாகவும் இருக்கலாம்.

பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஓவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. உலகத்தில் உள்ள பொருள்களை தடையின்றி அனுபவிக்க  அவற்றின் மீது வைராக்யம் அவசியம் என்ற கருத்துடன் மூன்றாவது அத்தியாயத்தின் முதல் பகுதி இத்துடன் முற்று பெறுகிறது.

பயிற்சிக்காக :

1. ஆசையின் தன்மை என்ன?

2. பொருள்களில் உள்ள இன்பத்தை பற்றி கூறப்பட்ட ஐந்து உண்மைகள் யாவை?

3. ஆசை எப்படி இன்பத்திற்கு காரணமாயிருக்க முடியும்?

சுயசிந்தனைக்காக :

1. ஞானிகள் சுகபோகிகளாக வாழலாமா?

2. உலகத்தில் உள்ள பொருள்கள் எவற்றையும் அனுபவிக்காமல் இன்பமாக இருக்க முடியுமா?

Friday, September 24, 2010

பாடம் 091: பரமனுடன் ஒன்றாக ஆகும் காலம் (பிரம்ம சூத்திரம் 3.1.23)

தங்களுடைய இயல்பு நிலையான ஆனந்தத்தை அடைவதே அனைத்து மக்களின் முடிவான குறிக்கோள். இந்த குறிக்கோளை அடைய எவ்வளவு காலம் ஆகும் என்பது நாம் எவ்வளவு வேகமாக இந்த பாதையில் பயணிக்கிறோம் என்பதை பொறுத்தே அமையும். இந்த பாதையில் அடங்கியுள்ள படிக்கட்டுகளை விவரிப்பதன் மூலம் வேதம் நாம் எந்த படியில் இருக்கிறோம், இன்னும் எவ்வளவு தூரம் சென்றால் நம் இலக்கை அடையலாம் என்பதை அறிய உதவுகிறது.

முதல் படிஅடிப்படை சக்திகளை வலுப்படுத்திக்கொள்வது

நம் வாழ்க்கையின் தரம் நமது இச்சா சக்தி, ஞான சக்தி மற்றும் கிரியா சக்தி ஆகியவற்றின் வலுவை பொறுத்து அமைகிறது. ஒரு சராசரி மனிதனால் வீடுபேறை அடைய முடியாது. இந்த மூன்று சக்திகளையும் தொடர்ந்து வலுப்படுத்திக்கொள்ள நமக்கு வாழ்வில் முன்னேறும் துடிப்பு இருக்கவேண்டும். கார், வீடு, சமூகத்தில் ஒரு மதிப்பு போன்றவற்றை தொடர்ந்து ஒன்றுக்குபின் ஒன்றாக அடைய முயற்சிப்பதன் மூலம் நாம் இந்த மூன்று சக்திகளையும் தேவையான அளவு வலுப்படுத்திக்கொள்ளலாம். கடின உழைப்பு, விடா முயற்சி, கிடைத்ததில் திருப்தியின்மை, ஆரோக்கியமான போட்டி ஆகியவை இந்த முன்னேற்றத்திற்கு மிக அவசியம்.

ஆனால் செய்யும் செயல்கள் அனைத்தும் தர்மமாக இருக்க வேண்டும். குறுக்கு வழி, பொய் சொல்லுதல், ஏமாற்றுதல் போன்ற செயல்களால் மற்றவர்களை இம்மியளவும் துன்பத்தில் ஆழ்த்த கூடாது. யாருக்கும் எந்த தீமையையும் மனதறிந்து செய்யக்கூடாது.
பணம், புகழ், பதவி போன்றவற்றை அடைய நாம் செய்யும் தர்மமான முயற்சி முக்கியமே தவிர இவற்றை அடைவது முக்கியமல்ல. அதர்மமான வழிகளில் இவற்றை அடைந்தால் நாம் பாதையில் பின்னோக்கி பயணிக்கிறோம் என்று அர்த்தம்.

இந்த முதல் படியின் குறிக்கோள் நமது இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகியவற்றை வலுப்படுத்திக்கொள்வதே தவிர பொருளாதார முன்னேற்றம் அடைவதல்ல. ஆனால் இந்த மூன்று சக்திகளை வலுபடுத்திக்கொள்ள நமக்கு இருக்கும் ஒரே வழி பணம், புகழ், பதவி போன்றவற்றை தேடுவதுதான். தேடல் மட்டும்தான் முக்கியமே தவிர அடைதல் முக்கியமல்ல.

இரண்டாம் படி மனப்பக்குவம் (செயலும் பலனும் தொடர்பற்றவை) பெறுதல்

வாழ்வின் வெற்றிக்கு அதிர்ஷ்டம் மட்டுமே காரணம். நம்முடைய கடும் உழைப்பு, ஊக்கம், விடாமுயற்சி, சாமர்த்தியம் போன்றவற்றிக்கும் வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை புரிந்து கொள்வது மிகக்கடினம். இதை புரிந்து கொண்டால்  நமக்கு மனப்பக்குவம் வந்து விட்டது என்று அர்த்தம். 

செய்யும் செயலுக்கும் அதன் விளைவுக்கும் உள்ள சம்பந்தம் என்ன என்பதை நம்மால் அறிந்து கொள்ளவே முடியாது. எல்லாம் சரியாக செய்தும் நாம் எதிர்பார்த்த விளைவு ஏற்படாமல் போவதையும் எதுவுமே செய்யாமல் இருந்தபோதும் நாம் எதிர்பாராத ஒரு விளைவு ஏற்படுவதையும் நாம் எல்லோரும் அனுபவித்து இருக்கிறோம். ஆனால் இவை விதிவிலக்கு என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். இதுதான் விதி என்று நமக்கு தெரிந்து விட்டால் நமக்கு மனப்பக்குவம் வந்து விட்டது என்று அர்த்தம்.

அடுத்த வருடம் ஒரு கோடி ரூபாய் நிகர லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதை நிறைவேற்ற தேவையான அனைத்து செயல்களையும் முறையாகவும் திறமையாகவும் செய்தாலும் எவ்வளவு லாபம் வருகிறது என்பது நமது பாவ புண்ணியங்களை மட்டுமே பொறுத்து அமையும். அதனால் திட்டமிடுவதோ, அதை அடைவதற்காக முழுத்திறமையை உபயோகித்து கடின உழைப்பில் ஈடுபடுவதோ அவசியமில்லை என்று அர்த்தமில்லை. நாம் கடமையை சரியாக முழுத்திறமையுடன் செய்வது மிக அவசியம். இதனால் நம்முடைய இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகியவை மிக வலுவடைகின்றன. மேலும் நாம் இதுபோல தொடர்ந்து முயற்சித்தால்தான் முயற்சிக்கும் பலனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற மனப்பக்குவம் ஏற்படும்.

மூன்றாம் படிமனப்பக்குவம் (உலகத்தில் இன்பம் இல்லை) பெறுதல்

நமது ஆசை ஒரு பொருளை பெற வேண்டும் என்பது. அந்த ஆசைக்கு காரணம் அந்த பொருள் கிடைத்தால் இன்பம் கிடைக்கும் என்பது. உலகத்தில் உள்ள எந்த பொருளுக்கும்/ எந்த மனிதருக்கும் நமக்கு இன்பத்தை கொடுக்கும் சக்தி கிடையாது. இதை புரிந்து கொள்வது மிகக்கடினம். இதை புரிந்து கொண்டால்  நமக்கு மனப்பக்குவம் ஏற்பட்டு விட்டது என்று அர்த்தம்.

இன்பம் தரும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் நாம் ஆசை கொள்கிறோம். ஆசைப்பட்டதை அடைந்த பின் ஏற்படும் இன்பம் நிலைப்பதில்லை. வேறொரு ஆசை ஏற்பட்டு அது நிறைவேறினால் போதும் என்று தொடர்ந்து முயற்சியில் ஈடுபடுகிறோம். எப்பொழுது நாம் எதை அடைந்தாலும் நிலைத்த இன்பம் ஏற்படுவதில்லை என்ற உண்மையை  அறிந்து கொள்கிறோமோ அப்பொழுது நமக்கு மனப்பக்குவம் ஏற்பட்டு விட்டது என்று அர்த்தம்.

தொடர்ந்து செயலாற்றுவதன் மூலம் நமக்கு தேவையான மனப்பக்குவம் ஏற்படும். இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய மூன்று சக்திகளும் மிக வலுபெற்றுவிடும். இந்த நிலையில் நாம் அடுத்த படிக்கு தயாராவோம்.


நான்காம் படி: வேதத்தை படித்தல்

நம்முடைய ஆசை நிரந்தரமான ஆனந்தம். இதை வெளி உலகில் தேடி பெற முடியாது. வேதம் ஆனந்தம் நமது இயல்பு, அதை தேடிப்பெற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகிறது. இது எப்படி என்பதை அறிந்து கொள்ள நாம் நம்மிடம் உள்ள இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய மூன்றையும் பயன் படுத்தி வேதத்தை குருவிடமிருந்து கற்க வேண்டும்.

நாம் செய்த புண்ணியத்தின் விளைவாக அடிக்கடி நாம் நமக்கு தகுந்த குருவுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைக்கும். ஆனால் நாம் சீடனாக தயாராக இருப்பதில்லை. எல்லாம் எனக்குத்தெரியும். தெரியாததை நானே படித்து தெரிந்து கொள்வேன் என்ற நினைப்பில் புத்தக கண்காட்சிக்கு சென்று ஆன்மீக புத்தகங்களை வாங்குவதனால் நாம் வேதத்தை புரிந்து கொள்ள முடியாது.

எப்பொழுது நாம் ஒரு குருவிடம் சரணடைகிறோமோ அப்பொழுதுதான் நமது ஆன்மீகப்பயணம் தொடங்குகிறது.

வேதத்தை படிப்பது ஒரு முழுநேர வேலை அல்ல. நாம் நம் குடும்பவாழ்வில் ஈடுபட்டுக்கொண்டே வேதத்தை ஒரு பகுதி நேர அடிப்படையில் படிக்கலாம். நாம் நம் அனைத்து கடமைகளையும் செவ்வனே செய்த பிறகு எஞ்சிய நேரத்தை வேதம் படிக்க ஒதுக்கினால் போதும். வேதம் எவ்வாறு இந்த உலகத்தில் இன்பமாக வாழ்வது என்பதை நமக்கு கற்றுக்கொடுக்கிறது. காரை விற்றுவிட்டு கார் கற்றுக்கொள்ள முயல்வது புத்திசாலித்தனம் ஆகாது. அதுபோல உற்றார், உறவினர், நண்பர்கள், குடும்பம், சமூகம் ஆகியவற்றின் நடுவே எப்பொழுதும் இன்பமாக இருப்பது எப்படி என்பதை வேதத்தை படித்து கற்றுக்கொண்ட பின் காட்டில் சந்நியாசியாக உலவ முடிவு செய்வது புத்திசாலித்தனம் அல்ல.
  

முடிவுரை :

வீடு பேறு அடைய எவ்வளவு காலமாகும் என்பது நாம் எப்பொழுது ஆன்மீக பயணத்தை ஆரம்பிக்கிறோம், எவ்வளவு நேரம் வேதத்தை படிக்க ஒதுக்குகிறோம்  என்பதை பொறுத்து இருக்கிறது.  ஆனால் ஆன்மீகபயணத்தை ஆரம்பித்துவிட்டால் வீடுபேறு அடைவது உறுதி. பெரும்பான்மையான மக்களுக்கு ஆன்மீகபயணத்தை ஆரம்பிக்க அவசியமான மனப்பக்குவமோ தீவிர இச்சா சக்தியோ இருப்பதில்லை.

எனவேதான் கடந்த இரண்டாயிரம் வருடங்களில் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்த மனிதன் இன்னும் வெளி உலகில் நிலையான இன்பத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறான்.

பயிற்சிக்காக :

1. நிலையான ஆனந்தத்தை அடையும் பயணத்தில் உள்ள நான்கு படிக்கட்டுக்கள் யாவை?

2. ஆன்மீகப்பயணம் ஆரம்பமானதா இல்லையா என்பதை எது தீர்மானிக்கிறது ?

3. இரு மனப்பக்குவங்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. யார் சரியான குரு? எந்த குருவிடம் படித்தாலும் முக்தியடைந்து விடலாமா?


2. இச்சா சக்தி மற்ற இரு சக்திகளை காட்டிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. – இது சரியா ?

Wednesday, September 22, 2010

பாடம் 090: மனிதனின் தன்மை (பிரம்ம சூத்திரம் 3.1.22)

இந்த பிரபஞ்சம் முழுவதும் பரமனின் மாயாசக்தியின் வெளிப்பாடு என்றாலும் மனிதன் மட்டும்தான் பரமனின் முழுமையான பிரதிநிதி. பரமனின் அறிவு உருவம், ஆனந்தமயம் மற்றும் நித்தியமான சத்யம் என்ற மூன்று தன்மைகள் மனிதனின் இயல்பாக இருக்கின்றன என்பதை நிரூபிப்பதுடன் மாயாசக்தி மனிதன் மூலம் செயல்படும் விதத்தையும் இந்த பாடம் விளக்குகிறது.  

இயற்கை தன்மை

பள்ளிக்கூடம் செல்லும்பொழுது பலிக்களத்துக்கு ஆடு செல்வது போல் செல்லும் சிறுவர்கள் மாலை பள்ளி முடிவதற்கான மணியோசை கேட்டவுடன் உற்சாகத்துடன் வெளியே வருகின்றனர். ஏனெனில் கட்டுப்பாட்டுடன் ஒரு இடத்தில் இருப்பது அவர்களது இயற்கை அன்று. எல்லோருக்கும் எப்பொழுதும் தங்கள் இயற்கை சுபாவத்துடன் இருப்பதே பிடிக்கும். அதில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் எப்படியாவது அந்த மாற்றத்தை நீக்கி இயற்கைத்தன்மைக்கு திரும்ப தொடர்ந்து முயற்சிப்பார்கள்.

அனைவரும் ஏன் எப்பொழுதும் ஆனந்தமாய் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்? ஏனெனில் ஆனந்தமாய் இருப்பதுதான் நமது இயல்பு நிலை. எரிச்சல், கோபம், ஏக்கம் போன்ற உணர்வுகள் நமது மனதை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும்பொழுது நாம் நிம்மதியாக இருப்பதில்லை. கூடிய சீக்கிரம் அந்த நிலையிலிருந்து வெளிவர காத்துக்கொண்டு இருப்போம். ஆனந்தமாய் இருக்கும்பொழுது மட்டும்தான் நாம் நம்மை மறந்து அதே நிலையில் தொடர்ந்து இருக்க விரும்புவோம். நமது சந்தோஷத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் யாரேனும் ஏதாவது செய்வதை நாம் விரும்புவதில்லை. இதிலிருந்து ஆனந்தம் என்பது நமது இயல்பு என்று நிரூபணம் ஆகிறது.

மரணம் என்பது அனைவருக்கும் நிச்சயம் என்றாலும் மனிதர்கள் அனைவரும் ஏன் எப்பொழுதும் உயிர் வாழவேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறார்கள்? ஏனெனில் மனிதன் நிரந்தரமானவன், அழிவதில்லை. நித்தியமாக இருப்பதுதான்  அவர்களது இயற்கைத்தன்மை.

தினமும் செய்தித்தாள்களை படித்து உலகில் என்ன நடக்கிறது என்பதை மட்டுமில்லாமல் அக்கம்பக்கத்தில் என்ன நிகழ்கிறது என்பதையும் இவையெல்லாம் நிகழ காரணங்கள் யாவை என்று அலசுவதும் பெரும்பான்மையான மக்களின் இயற்கை குணம். எப்பொழுதும் ஆனந்தமாக உயிர் வாழ வேண்டும் என்ற இரு விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள அறிவு மிக அவசியம். முதல் இரு ஆசைகளும் அனைத்து உயிரினங்களுக்கும் இருந்தாலும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற இந்த மூன்றாவது ஆசை மனித குலத்துக்கு மட்டுமே சொந்தமானது.  மனிதர்களுக்கிடையே உள்ள பொருளாதார ரீதியான ஏற்றத்தாள்வுகளுக்கு அறிவு ஒரு மிகப்பெரிய காரணமாக உள்ளது. தொடர்ந்து அறிவை அதிகரித்து என்றாவது ஒருநாள் மரணத்தை வென்று என்றும் ஆனந்தமாக இருக்கும் நிலையை அடைந்து விடலாம் என்று பெரும்பாலான விஞ்ஞானிகள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். 

ஆனந்தமாகவும், பேரறிவுடனும் நித்யமாகவும் இருப்பது மனிதனின் இயல்பு என்று வேதம் கூறுகிறது. இதனால்தான் இந்த  மூன்று ஆசைகளும் எல்லா மனிதர்களுக்கும் இருக்கின்றன. ஆனால் இவை அடையப்பட வேண்டிய ஆசைகள் அல்ல. அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள். நான் என்றுமிருக்கும் ஆனந்தமான அறிவுருவம் என்று நம்மையும் பரமனையும் ஒன்றாக்கி வேதம் கூறும் உண்மையை உணர்ந்து கொள்வதைத்தான்வீடுபேறுஎன்ற தொடர் குறிக்கிறது .

வீடு பேறு என்பது நம் எல்லோராலும் ஏற்கனவே அடையப்பட்டுவிட்ட ஒரு நிலை. முறையாக வேதத்தை படித்து அதை அறிந்து கொண்டவர்கள் ஒரு சிலரே.


மூன்று சக்திகள்

நான் பரமன். என்னுடைய உடலும் மனதும் மாயாசக்தியின் வெளிப்பாடுகள். இச்சா சக்தி, ஞான சக்தி மற்றும் கிரியா சக்தி ஆகிய நமது மூன்று சக்திகள் மூலம் மாயாசக்தி செயல்படுகிறது.

இச்சா சக்தி: ஆசை படுவது.

ஞான சக்தி: அறிந்து கொள்ளும் திறன்.

கிரியா சக்தி: அறிந்ததை ஆசைபட்டு அதை செயல்கள் மூலம் அடையும் திறன்.

இந்த மூன்று சக்திகளும் ஒரு சேர உபயோகப்படுத்துவதாலேயே மனிதன் மற்ற விலங்கினங்களிலிருந்து வெகுவும் முன்னேறியவனாக இருக்கிறான். கற்காலம் தொடங்கி இன்றய நவீன விஞ்ஞான உலகம் உருவான விதத்தை அலசினால் பின்வரும் மூன்று அடிப்படை காரணங்கள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருந்து செயல் பட்டிருப்பது தெரியவரும்.

முதல் அடிப்படை காரணம்: இச்சா சக்தி.

எப்பொழுதும் ஆனந்தமாக இருக்கவேண்டும் என்ற ஆசை, விலங்குகள் போல் வாழ்ந்து வந்த மனிதனை வேட்டை ஆடும் ஆயுதங்கள் பற்றிய அறிவை அடையத்தூண்டியது.

இரண்டாவது அடிப்படை காரணம்: ஞான சக்தி.

அறிவுகூர்மையால் விலங்கினங்களை பின் தள்ளிவிட்டு முன்னேற ஆரம்பித்த மனிதன் தொடர்ந்து அறிவியல், சமூகவியல், பொருளியல் ஆகிய துறைகளில் அறிவை பெருக்கிக்கொள்ள ஆரம்பித்தான். புத்தகங்கள் மூலம் ஒரு தலைமுறையினர் கற்ற அறிவு அடுத்த தலைமுறைக்கு பயன்பட ஆரம்பித்தது. எனெவே மனித இனத்தின் அறிவு வெகு வேகமாக வளர்ந்தது.

மூன்றாவது அடிப்படை காரணம்: கிரியா சக்தி.

அறிவியல் கண்டுபிடிப்புகளை உபயோகித்து ஆசைபடுவதையெல்லாம் அடைய வேண்டிய உந்துதல் அனைத்து மக்களையும் ஓயாமல் செயல்களில் ஈடுபடுத்தியது. எனவே ஒட்டுமொத்த மனித இனம் இன்று வெகுவாக முன்னேறியுள்ளது.

தொடரும் முன்னேற்றம்.  

இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என்ற மூன்று சக்திகள் ஒவ்வொரு மனிதனின் மூலமும் வெளிப்பட்டு இந்த உலகம் தொடர்ந்து இயங்கி வருகிறது. ஆயினும் மனிதன் தன் இயற்கை நிலையான ஆனந்தத்தை இன்னும் அடையவில்லை. ஏனெனில் வீடுபேறு என்பது நமது இயற்கையான சொரூபத்தை அறிந்து கொள்வதே தவிர அடையவேண்டிய இலக்கு அல்ல.

எனவே வெளியுலகில் இன்பத்தை தேடியலையும் செயலை நிறுத்திவிட்டு வேதம் கூறும் உண்மைகளை முறையாக படித்து தெரிந்துகொள்ள நாம் ஆசைபடவேண்டும். தற்போது நமது ஞான சக்தி உலகை அறிந்து கொள்வதில் தொடர்ந்து செலவிடப்பட்டுகொண்டிருக்கிறது. எப்பொழுது நாம் தேடுவது வெளிவுலகில் இல்லை என்ற மனப்பக்குவம் ஏற்படுகிறதோ அப்பொழுது நாம் நம் ஞான சக்தியை வேதத்தை படிக்க செலவிட ஆரம்பிப்போம். இத்தகைய மாற்றம் ஒரு சிலரிடம்தான் ஏற்படும். மற்றவர்கள் தொடர்ந்து கிரியா சக்தியால் உலகை மாற்றும் முயற்சியில் ஈடுபடும்பொழுது இவர்கள் தங்கள் கிரியா சக்தியை வேதம் படிப்பதில் செலவிடுவார்கள். செய்த புண்ணியத்தின் ஒருபகுதி நல்ல ஆசிரியரை இனம்காண இவர்களுக்கு உதவும். ஆசிரியரின் அனுக்கிரகத்துடனும் தனது ஞான சக்தியின் உதவியுடனும் இவர்கள் விரைவிலேயே வீடுபேறு அடைவார்கள்.


முடிவுரை :

அஞ்ஞானத்தை ஆதாரமாக கொண்டுதான் இந்த உலகம் இயங்கி வருகிறது. மாயை மனிதர்களிடம் உள்ள இச்சா,ஞானம்,கிரியா ஆகிய மூன்று சக்திகள் மூலம் உலகை தொடர்ந்து மாற்றி வருகிறது. மக்கள் அனைவரும் தங்கள் இயற்கை நிலையான ஆனந்தத்தையும் அழிவின்மையையும் அறியாமையால் வெளியுலகில் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

நீதான் பரமன் என்று முழக்கமிடும் வெதத்தை முறையாக பயில நாம் ஆசைகொள்ள வேண்டும். இந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்வதற்கு புத்திசாலித்தனம், மனப்பக்குவம் மற்றும் சரியான ஆசிரியரின் துணை ஆகியவை தேவை.

பயிற்சிக்காக :

1. மனிதனின் இயல்பாக வேதம் கூறும் மூன்று தன்மைகள் யாவை?

2. மாயை எந்த மூன்று சக்திகளாக செயலாற்றுகிறது?

3. மனிதகுல முன்னேற்றத்திற்கான அடிப்படை காரணங்களை விவரி.

சுயசிந்தனைக்காக :

1. மனப்பக்குவம் என்றால் என்ன?

2. கடின உழைப்பு, விடா முயற்சி ஆகியவற்றின் அவசியம் என்ன?

Monday, September 20, 2010

பாடம் 089: தீவினை செய்வோரின் கதி (பிரம்ம சூத்திரம் 3.1.12-21)


நமது செயல்களின் பலனை நாம் அனுபவித்துத்தான் ஆக வேண்டுமென்பதாலும் நம் ஆசைகள் நமது வாழ்வின் தரத்தை தீர்மானிக்கின்றன என்பதாலும் நாம் இவ்விரண்டின் தன்மைகளை அறிந்து கொண்டு தீவினைகளை தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை இந்த பாடம் வலியுருத்துகிறது.

ஆசையும் செயலும்

நமது அனைத்து செயல்களும் நமது ஆசையின் அடிப்படையிலேயே அமைகின்றன. நமது செயல்கள் மூலம் நாம் தொடர்ந்து பாவ புண்ணியங்களை ஈட்டி வருகிறோம். எந்த கடைக்கு போய் என்ன பொருள் வாங்குகிறோம் என்பது நாம் எதன்மேல் ஆசை கொண்டுள்ளோம் என்பதையும் நம்மிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதையும் பொறுத்துள்ளது. அது போல வாழ்வில் நாம் அடையவேண்டிய குறிக்கோளை நமது ஆசைகளும் எவ்வளவு தூரம் முன்னேறுகிறோம் என்பது நமது பாவ புண்ணியங்களை பொறுத்தும் தீர்மானிக்கபடுகிறது.

சொர்க்கமும் நரகமும்

தீதும் நன்றும் பிறர்தர வாரா. யார் எப்பொழுது எப்படியெல்லாம் துன்பங்களை அனுபவித்தாலும் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவரவர் வினைப்பயன்களைதான் நாம் எல்லோரும் எப்பொழுதும் அனுபவித்து கொண்டு இருக்கிறோம். எனவே ஒருவரது நிலைக்கு இன்னொருவர் காரணமாக இருக்க முடியாது.  இந்த பூவுலகை சொர்க்கமாகவோ நரகமாகவோ மாற்றிக்கொள்வது அவரவர் கையில்தான் இருக்கிறது. கடவுள் நமது வினைப்பயன்களை அனுபவிக்க இந்த பூமியை படைத்துள்ளார். அதில் ஒவ்வொருவரும் தங்களது விருப்பபடியும் வினைப்பயன்களுக்கு தக்கபடியும் வாழ்ந்து வருகிறோம்.

சம்ஸார சுழல்

ஒரு குறிப்பிட்ட இலக்கை அடையும் ஆசையில் அதற்கு தேவையான அனைத்து செயல்களை செய்தும்கூட சில சமயங்களில் அந்த ஆசை நிறைவேறுவது இல்லை.

ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்கஎன்ற தொடர் இந்த நிலையை தெளிவாக எடுத்துக்கூறுகிறது. செயல்களை ஆசை தூண்டிவிட்டாலும் அவை என்ன பயனை கொடுக்கிறது என்பது அவை மற்றவர்களுக்கு எவ்வளவு தூரம் நன்மை அல்லது தீமையை கொடுத்தது என்பதை பொறுத்தே அமையும். மேலும் செய்த செயல்களின் பலன்கள் எப்பொழுது நம்மைச் சேரும் என்பதும் நமக்கு தெரியவராது. எனவே வாழ்க்கையில் எல்லோரும் தொடர்ந்து ஏதாவது ஒரு குறிக்கோளை அடையும் நோக்கில் செயல்களை செய்து கொண்டேயிருப்பார்கள்.

நாம் செய்யும் செயல்கள் நமது பிடித்தவை-பிடிக்காதவை என்ற பதிவுகளை மேலும் உறுதிபடுத்தி அதனால் நம் ஆசைகளையும் அதிகபடுத்துகின்றன. எனவே செயல் செய்யாமல் இருப்பது என்பது செயல் செய்வதை விட மிக கடினமானது.

ஏழை ஒருவன் மூட்டை தூக்கி கூலிவேலை செய்வதில் தொடங்கி சொந்தமாக சிறுதொழில் ஒன்றை ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி மாதம் பத்து லட்சம் நிகரலாபம் சம்பாதித்துகொண்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். பணம் வேண்டும் என்ற ஆசையினால் அதிகமாக உழைக்க ஆரம்பித்தவன் இப்பொழுது போதிய அளவு பணம் இருக்கிறது என்பதால் உழைப்பை நிறுத்திக்கொள்ள முடியாது. மருத்துவர்கள் பரிசோதித்து படுக்கையை விட்டு எழுந்தால் எமலோகப்பயணம் நிச்சயம் என்று சொன்னால் கூட கடைசி மூச்சு உள்ளவரை உழைக்கும் ஆசை அவனை விட்டு போகாது. ஏனெனில் உழைப்பு என்பது அவனுக்கு பழகி போய்விட்டது. திருட்டு கொள்ளை போன்ற தீயசெயல்களில் ஈடுபட்டுகொண்டிருப்பவர்களுக்கும் இதே உதாரணம் பொருந்தும். முதலில் ஆசை செயலில் ஈடுபட தூண்டும்.


ஆசை நிறைவேறும் வரை மட்டும் செயல் செய்வது என்பது சரித்திரத்தில் என்றும் நடந்ததில்லை. ஏனெனில் செயல்கள் ஆசையை தொடர்ந்து பெரிதாக வளர்த்து விடும். எனவே நிறைவேறாத ஆசைகள் என்று ஒரு பட்டியல் எப்பொழுதும் மனிதனுக்கு இருந்து கொண்டேயிருக்கும்.

ஆசை நிறைவேறும் பொழுது ஏற்படும் உற்சாகம், இது நிலைக்குமா என்ற திகிலுடன் கலந்து நம் வாழ்க்கை ரோலர் கோஸ்டர் பயணம் போல தொடர்ந்து மேலும் கீழும் அலைகழிக்கப்பட்டு கொண்டிருப்பதைதான் சம்ஸாரச்சுழல் என்று வேதம் வர்ணிக்கிறது.
இந்த சுழலை முறியடிக்க தீய செயல்களை முடிந்தவரை தவிர்த்து நற்செயல்களை அதிகரித்து கொள்ள வேண்டும்.

தர்மமும் அதர்மமும்

தர்மம் செய்தால் புண்ணியமும் அதர்மம் செய்தால் பாவமும் ஏற்படும். புண்ணியம் நமக்கு இனிமையான சூழ்நிலைகளையும் பாவம் நாம் துன்பபடக்கூடிய சூழலையும் உண்டாக்கும். இது பிறவிகள் தோறும் தொடரும். பாவம் இரும்புச்சங்கிலி என்றால் புண்ணியம் தங்கசங்கிலி. இரண்டும் நம்மை தொடர்ந்து சம்ஸாரச்சுழலில் பந்தப்படுத்தி முடிவில்லாமல் செயல்களில் ஈடுபடுத்தும். எனவே நமக்கு பாவம் புண்ணியம் ஆகிய இரண்டிலிருந்தும் விடுதலை கிடைத்தால் மட்டுமே மீண்டும் பிறவா நிலையான முக்தியை அடைவோம்.

அதர்மமான செயல்கள் செய்பவர்களுக்கு இந்தசுழலில் இருந்து விடுதலை என்பது கிடையவே கிடையாது. தர்மமாக நடப்பவர்களின் புண்ணியத்தின் ஒரு சிறுபகுதி அவர்களுக்கு நல்லறிவை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை வழங்கும். புண்ணியத்தின் பலனாக நற்சான்றோர்களின் அறிமுகம் தர்மமாக நடப்பவர்களுக்கு மட்டும் ஏற்படும். எனவே இவர்களுக்கு சான்றோர்களின் துணையுடன் சம்ஸார சுழலிலிருந்து மீளும் வாய்ப்பு கிடைக்கும்.

முடிவுரை :

தானாக உருவாக்கிக்கொள்வதல்லாமல் மனிதனுக்கு வேறு பிரச்சனைகளே கிடையாது. தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படவேண்டியவை என்ற அறிவு இல்லாமல் தீயகாரியங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து துன்பபட்டு நரகத்தில் உழலுவதைத்தவிர வேறு வழியில்லை.

நம்மை செயல் செய்ய தூண்டுவது நம் ஆசைகள். எதில் ஆசை படுகிறோம் என்பது நமது அறிவை பொறுத்து உள்ளது. எது நல்லது எது கெட்டது என்ற அறிவு எல்லோருக்கும் எப்பொழுதும் இருக்கும். ஒரு திருடன் திருடும்பொழுது குற்றவுணர்வுடன்தான் திருடுவான். அது பழகிப்போனாலும் அது தவறு என்ற உண்மையை அவனால் மறக்கவோ மறுக்கவோ முடியாது.

எனவே தவறான செயல்களை தவிர்ப்பது எல்லோராலும் சாத்தியமே. ஆனால் செயல் செய்யாமல் இருப்பது என்பது யாராலும் முடியாது. தீய செயல்களை செய்யக்கூடாது என்றும் நல்ல செயல்களை செய்யவேண்டும் என்றும் நமக்கு நாமே ஒரு கட்டாயத்தை விதித்துகொண்டு தர்மமான காரியங்களை மட்டும் செய்துவருவது மிக அவசியம்.

பயிற்சிக்காக :

1. ஆசைகளுக்கும் செயல்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பை விவரிக்கவும்.

2. ஏழை மக்களின் துன்பத்திற்கு காரணம் என்ன?

3. சம்ஸார சுழல் என்றால் என்ன? அதிலிருந்து விடுபடுவது எப்படி?

சுயசிந்தனைக்காக :

1. நற்காரியங்களை மட்டும் செய்து இன்பமாக இருப்பவர்கள் ஏன் சம்ஸார சுழலிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும்?