Monday, June 28, 2010

பாடம் 070: ஆத்மா அழியாதது (பிரம்ம சூத்திரம் 2.3.16)

பிரளயத்தின் பொழுது அனைத்தும் அழியும் விதத்தை விவரித்தபின் அழிவு என்பது பிரபஞ்சத்திற்கு மட்டும்தான், ஆத்மாவுக்கல்ல என்பதை இப்பாடம் தெளிவுபடுத்துகிறது.

மரணம் ஆத்மாவுக்கல்ல

அனைத்து உயிரினங்களும் பிரளயத்தின்பொழுது அழியும் என்பதன் பொருள் அனைத்து அசையும் மற்றும் அசையா ஜடப்பொருள்களும் அழியும் என்பதே. உயிரினம் என்ற சொல் இந்த இடத்தில் உடல் மற்றும் மனதை மட்டும்தான் குறிக்கும். எனவே மரணம் என்பது வெறும் உடல்களுக்கு மட்டுமேயன்றி அழிவு ஆத்மாவுக்கல்ல. நான் என்ற சொல்லின் உண்மை பொருள் ஆத்மா. எனவே என் உடல் பிரளயத்தில் அழிந்தாலும் நான் அழியமாட்டேன் என்பதை தெளிவாக புரிந்து கொண்டால் நாம் அழிவைக்கண்டு அஞ்சவேண்டிய அவசியமில்லை.

ஆத்மா என்றால் என்ன?

ஆத்மா என்றால் என்ன என்று முறையாக யாரும் நமக்கு சொல்லித்தராமலேயே வழக்கில் பொதுவாக உபயோகபடுத்தும் 'அன்னாரது ஆத்மா சாந்தி அடையட்டும்' போன்ற தொடர்களின் அடிப்படையில் 'எனக்கு ஒரு ஆத்மா இருக்கிறது' என்ற எண்ணம் நம்மிடம் இருந்து வருகிறது. அணிந்திருக்கும் சட்டையை 'நான்' என்ற சொல்லின் பொருளுக்குள் உட்பட்டதாக நாம் ஏற்றுக்கொள்வதில்லை. சட்டை கிழிந்து விட்டால் நான் இறந்துவிட்டேன் என்று துயரப்படுவதுமில்லை. ஒரு சிலருக்கு புதிதாக வேறு ஒரு சட்டை வாங்கும் வாய்ப்பு ஏற்பட்டதற்காக மகிழ்ச்சிகூட ஏற்படும். அணிந்திருக்கும் சட்டை போன்றதுதான் நாம் உபயோகபடுத்தும் உடலும் மனதும். இவை 'நான்' என்ற சொல்லின் பொருளுக்குள் அடங்கா. நான் என்பது ஆத்மா மட்டுமே.
  
நமது வாகனங்களுக்கு இங்கும் அங்கும் அலைய ஆவல் ஏதுமில்லை. ஓட்டுனர் ஒருவர் வாகனத்தை செலுத்தினால் மட்டுமே வாகனம் நகர ஆரம்பிக்கும். ஊதியத்திற்காக அமர்த்தப்பட்டுள்ள ஓட்டுனருக்கு கூட எப்பொழுது வேலை முடிந்து வீடு திரும்பலாம் என்ற எண்ணம் இருக்குமே தவிர வாகனத்தில் அமர்ந்திருக்கும் நாம் போகவேண்டிய இடங்களுக்கு செல்ல அவருக்கு அவா இருக்காது. வண்டியும் ஓட்டுனரும் இருப்பது நமக்காகவே தவிர அவை நாமே அல்ல.

நான் ஆத்மா. உடல் எனது வாகனம். மனது அந்த வாகனத்தை செலுத்தும் ஓட்டுனர். ஆத்மா கண்ணுக்கு தெரியாமலும் ஆத்மாவின் குரல் காதுக்கு கேட்காமல் இருப்பதாலும் வாகன ஓட்டுனர் தான் வண்டிக்கு சொந்தக்காரர் போல செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டிருக்கும் நாமும் ஓட்டுனர்தான் நான் என்ற தவறான எண்ணத்தில் அவரது விருப்பத்திற்கு செயல் பட்டுகொண்டிருக்கிறோம்.

விருப்பு வெறுப்புகள் நமக்கு நன்மை பயக்குமா அல்லல் ஏற்படுத்துமா என்று ஆராயாமல் மனம் போன பொக்கில் வாழ்க்கையை பெரும்பாலோர் நடத்தி வருகிறார்கள். ஓட்டுனரும் வாகனமும் நமது உபயோகத்திற்காக இருக்கிறது என்று அறிந்து கொண்டால் நம் வாழ்க்கைப்பாதையை திருத்திகொண்டு குறையாத இன்பமும் தடைபெறாத அமைதியும் என்றும் நிறைந்த ஒரு வாழ்வை நாம் வாழலாம்.

அதைவிடுத்து ஓட்டுனருக்கும் வாகனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்துகொண்டிருந்தால் மரணபயமும் பிரளய பயமும் நம்மை விட்டகலா. மரணத்திற்குபின் வாகனம் என்கிற நம் உடல் மறைந்தாலும் நமது ஓட்டுனர் நம்முடன் அடுத்த பிறவிக்கும் தொடர்ந்து வந்து புதிதாக நமக்கு கிடைக்கும் உடலை தனது புதிய வாகனமாக கருதி மறுபடியும் நம்மை தவறான வழியில் அழைத்துசெல்வார். எனவே பிறப்பு இறப்பு என்ற முடிவில்லா சுழற்சியில் சிக்கி நாம் இன்பம் எங்கே என்று தொடர்ந்து தேடிக்கொண்டிருப்போம். நான் ஆத்மா என்ற அறிவு நமக்கு எப்பொழுது ஏற்படுகிறதோ அப்பொழுதுதான் இந்த தேடல் முடிவுபெறும்.

முடிவுரை :

பிறப்பும் இறப்பும் ஆத்மாவுக்கல்ல. நான் என்ற சொல்லின் உண்மையான பொருள் ஆத்மா என்பது மட்டுமே. ஆகையால் பிரளயத்தின்பொழுது நம் பருவுடல், நுண்ணிய உடல் உள்ளிட்ட அனைத்து பஞ்சபூதங்களும் அழிந்தாலும் நான் அழிவதில்லை என்ற அறிவை நாம் பெறுவது அவசியம்.

பயிற்சிக்காக :

1. ஆத்மா என்பதன் பொருள் என்ன?

2. மரணத்திற்கு பின் நம் உடலிலிருந்து நமது ஆத்மா நம்மைவிட்டு பிரிந்து செல்லும் என்ற கருத்து உண்மையா?

சுயசிந்தனைக்காக :

1. ஆத்மா ஒன்றா பலவா?

2. பிரளயத்திற்கு முன்னும் பின்னும் ஆத்மாவின் நிலை என்ன?


Friday, June 25, 2010

பாடம் 069: ஊழிக்காலத்தில் மனிதர்கள் (பிரம்ம சூத்திரம் 2.3.15)

பிரளயத்தின்பொழுது பஞ்சபூதங்கள் அழிந்து பரமனுடன் ஒன்றாகும் விதத்தை சித்தரித்தபின் மனிதர்கள் மற்றும் மற்ற உயிரினங்களுக்கு ஏற்படும் கதியைபற்றி இந்த பாடம் விவரிக்கிறது.

மரணம் என்றால் என்ன?

பெரும்பான்மையான மனிதர்களுக்கு மரணம் என்பது அச்சத்தை கொடுக்ககூடிய ஒரு நிகழ்வு. மரணபயம் என்பது நாம் மரணமடையபோகிறோம் என்ற எண்ணத்தினால் ஏற்படுகிறதே தவிர மரணம் என்றால் என்ன என்று நமக்கு தெரிந்திருப்பதால் அல்ல. புலிக்கு பயப்படுவதற்கும் பூதத்திற்கு பயப்படுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. புலியிடம் அகப்பட்டால் என்ன நடக்கும் என்று நமக்கு தெரிந்திருப்பதால் அதனிடம் பயப்படுவது நியாயம். பூதம் என்றால் என்னவென்றே தெரியாதபொழுது அதற்கு பயப்படுவது சிறுபிள்ளைத்தனம். மரணம் என்றால் என்ன என்ற வேதம் தரும் அறிவை முழுதும் புரிந்துகொண்டால் மரண பயம் நீங்கிவிடும். உலகம் அழிந்து விடுமோ என்ற பயமும் இருக்காது.

மரணம் என்பது ஆழ்ந்த உறக்கம் போன்றது. ஆழ்ந்த உறக்கத்தை நாம் அனைவரும் விரும்புகிறோம். மரணம் என்றால் மட்டும் வேண்டாம் என்கிறோம். மரணமடைந்த பின் எனக்கும் என்னைச் சேர்ந்தவர்களுக்கும் என்னவாகும் என்ற கவலையாலேயே மரணத்தை தவிர்க்க நினைக்கிறோமே தவிர மரண அனுபவம் எனக்கு வேண்டாம் என்ற காரணத்தால் அல்ல.

பிரளயத்தின்பொழுது, 'நான் இறந்ததும் மற்றவர்களுக்கு என்ன ஆகும்' என்ற கவலைக்கு அவசியமில்லை. ஏனெனில் அனைத்து உயிரினங்களும் ஒரே சமயத்தில் அழிவதால் நான் போனபின் என் நாய்க்கு யார் சாப்பாடுபோடுவார்கள் என்ற கவலையோ என்னுடைய சொத்தையெல்லாம் யார் அனுபவிக்க போகிறார்களோ என்ற பயமோ தேவையில்லை.
மரண அனுபவம் ஆழ்ந்த உறக்கத்தை போன்றதென்பதால் அதை குறித்தும் நாம் அஞ்சத்தேவையில்லை. எஞ்சியிருப்பது மரணத்துக்கு பின் எனக்கு என்ன ஆகும் என்ற ஒரே கவலைதான்.

மரணத்தின் தன்மைகளை பற்றி வேதம் தரும் பின்வரும் உண்மைகளை தெரிந்து கொண்டால் இந்த கவலையும் மறையும்.
  1. இரவு உறங்கியபின் மறுநாள் காலை எழுந்திருப்பது போல் மரணமடைந்தாலும் நாம் மறுபடியும் எழுந்திருப்போம். உறங்கும்பொழுது நேரம் என்பதற்கு அர்த்தமில்லை. எழுந்தவுடன் ஒரு எட்டு மணிநேரம் நாம் இல்லாமல் இந்த உலகம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தது தெரியவரும். அது போல மரணமடைந்த பின் நம்மை பொறுத்தவரை நேரம் நின்றுவிடும். மறுபடி எழுந்தவுடன் சற்று அதிகம் மாறுபட்ட உலகில் நம் வாழ்க்கைபயணத்தை தொடருவோம்.
  1. உறங்கி எழுந்தால் நம்மை சேர்ந்த பணம், பதவி, சுற்றம் ஆகியவற்றில் அவ்வளவு மாற்றமிருக்காது. மரணத்துக்கு பின் மீண்டும் எழும்பொழுது நாம் செய்த வினைகளுகேற்ப இப்பொழுது இருப்பதைவிட பலமடங்கு சிறப்பான சுற்றுபுரத்தில் நாம் இருக்க வாய்ப்புள்ளது.
  1. வயதாகிய உடலை உதறிவிட்டு மறுபடி ஒரு புதிய இளைய உடலை பெறும் வாய்ப்பு மரண உறக்கத்தில் மட்டும்தான் நமக்கு கிடைக்கும்.
  2. மனது மரணத்திற்கு பின்னும் நம்முடன் தொடரும். அதே மனதாயிருந்தாலும் அதில் அவசியமில்லாத அத்தனை நினைவுகளும் நீக்கப்பட்டு அது புதிதாக இருக்கும். உபயோகிக்கப்பட்ட கம்புயூட்டரை வாங்கும்பொழுது ஹார்ட் டிஸ்க்கை ஃபார்மட் செய்வது எப்படி புத்திசாலித்தனமோ அதுபோல நமது புதிய வாழ்வுக்கு தேவையில்லாத பழைய நினைவுகளை மரணம் நம் மனதிலிருந்து நீக்குவது நமக்கு நன்மை பயக்கும்.
  1. நம் விருப்பு வெறுப்புகள், நமது அறிவாற்றல், திறமை, புத்திசாலித்தனம் (IQ) போன்றவை மரணத்தில் மாற்றமடையா. இதற்கு காரணம் நமது மனம், புத்தி, கருவி கரணங்கள் ஆகியவை நமது நுண்ணிய உடலைச்சேர்ந்தவை. மரணத்தின் பொழுது பருவுடல் மட்டும் அழியுமே தவிர நுண்ணிய உடல் அழியாது. அது பிறவிதோரும் நம்முடன் தொடரும். இதனாலேயே மரணம் என்பதை ஆழ்ந்த உறக்கத்திற்கு ஒப்பிட முடிகிறது. தூக்கத்திலிருந்து எழுபவர் தூங்க சென்றவரிடமிருந்து வேறுபட்டவரல்ல. அதே போல புதிதாக பிறப்பவர் மரணமடைந்தவரிடமிருந்து வேறுபட்டவரல்ல. பருவுடலை மாற்றுவது பழைய உடையை நீக்கி புதிய உடையை புனைவது போல. எனவே மரணத்திற்கு பின் அதே மனிதன்தான் வேறொரு உடலில் பிறக்கிறான்.
  1. ஊழிக்காலத்தில் ஏற்படும் மரணத்தில் மட்டும் நம் நுண்ணுடல் நம்முடன் தொடர்ந்து வருவதில்லை. எப்படி பருவுடல் பஞ்சபூதங்களுடன் சேர்ந்து மறைந்து விடுகிறதோ அது போல நமது நுண்ணுடலும் அவற்றை தோற்றுவித்த நுண்ணிய பஞ்சபூதங்களில் கலந்து மறைந்துவிடும்.
  1. ஆயினும் தொடர்ந்து ஏற்படும் பிறப்பு-இறப்பு-மீண்டும் பிறப்பு என்ற சுழற்சி பிரளயத்தில் முழுவதும் முடிவடைந்துவிடுவதில்லை. அனைத்து உயிரினங்களுக்கும் பருவுடல், நுண்ணிய உடல் மற்றும் காரண உடல் என்று மூன்று உடல்கள் உள்ளன. ஒவ்வொரு பிறப்பு-இறப்பு சுழற்சியிலும் பருவுடல் மட்டும் அழியும். பிரளயத்தில் பருவுடலுடன் நுண்ணிய உடலும் அழிந்து விடும். ஆனால் நம் காரண உடல் அழியாது.
  1. நாம் செய்த வினைகளின் பயன்கள் நமது காரண உடலில் பதிவாகியுள்ளன. பிரளயம் என்பது பிரபஞ்சத்தின் முடிவான மறைவு அல்ல. ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற முடிவற்ற சுழற்சியில் பிரளயத்திற்கு பின் மறுபடியும் உலகம் உண்டாக்கப்படும். அப்பொழுது நாம் மீண்டும் பிறப்போம். நமது வினைகளின் பலனுக்கேற்றாற்போல் பிறந்து மறுபடியும் விருப்பு வெறுப்புகளையும் அறிவையும் சேர்க்கத் துவங்குவோம்.
வேதம் கூறும் இவ்வுண்மைகளை நாம் அறிந்து கொண்டால் ஊழிக்காலத்தில் கூட பயப்பட வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலோருக்கு மரண பயம் ஏற்படும்பொழுது கடவுளின் ஞாபகமும் ஏற்படுகிறது. வாழ்நாழ் முழுவதும் நாத்தீகனாக இருந்தாலும் மரணம் ஏற்படுவது உறுதி என்ற நிலையில் எல்லோரும் தீவிர கடவுள் பக்தி கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள்.

இதற்கு காரணம் அறியாமையே. ஒருவேளை கடவுள் நம்மை தண்டித்துவிடுவாரோ என்ற கடவுளிடம் தோன்றும் பயமே பலரிடம் பக்தியாக மாறுகிறது. வாழ்நாழ் முழுவதும் பக்தி செய்தவர்கள் தாங்கள் செய்த பக்திக்கு பலனாக மோட்சம் தரவேண்டும் என்று கடைசிகாலத்தில் கடவுளிடம் கோருகிறார்கள். மீண்டும் பிறவா வரம் பரமனை முழுதும் அறிந்து கொள்வதால் மட்டும் கிடைக்குமேயன்றி வெறும் கோரிக்கைகளால் கிடைக்காது.

முடிவுரை :

ஊழிக்காலத்தில் பிரபஞ்சம் படிப்படியாக தோற்றத்திற்கு எதிர்வரிசையில் ஒடுக்கம் அடைகிறது.

உயிரினங்களின் பருவுடல் ஜடமென்பதால் மற்ற அனைத்து ஜடப்பொருள்களையும் போல பஞ்சபூதங்களில் ஒடுங்கிவிடும். பஞ்சபூதங்கள் ஒன்றினுள் ஒன்று ஒடுங்கி கடைசியில் அனைத்தும் பரமனுடன் ஒன்றிவிடும்.

பிறவிகள்தோறும் தொடரும் நுண்ணிய உடலும் பிரளயகாலத்தில் அழிந்துவிடும். பருவுடலைக்காட்டிலும் நுண்ணியது என்றாலும் நுண்ணிய உடலும் பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்டவையே. எனவே அனைத்து உயிரினங்களின் நுண்ணிய உடல்களும் பிரளயத்தின்பொழுது அழிந்து விடும்.

காரண உடல் பரமனின் மாயாசக்தியின் ஒரு அங்கம். எனவே பிரபஞ்சத்தின் அழிவு காரண உடலை அழிக்காது. ஆர்டிக் கடலில் கண்ணுக்கு தெரியும் பனிப்பாறைகளை பருவுடலுக்கு ஒப்பிட்டால் கண்ணுக்குத்தெரியாமல் கடலில் ஆழ்ந்திருக்கும் பகுதியை நுண்ணிய உடலுக்கு ஒப்பிடலாம். காரண உடல் என்பது கடலின் ஏற்படும் குளிர்ச்சியை போன்றது. தட்பவெப்ப நிலைக்கேற்றவாரு பனிப்பாறைகள் உருவாகி மறைவது நம் பிறப்பு-இறப்பு சுழற்சியை போன்றது. வேனில் காலத்தில் பனிப்பாறைகள் முழுவதுமாக மறைந்தாலும் கடலின் குளிர்ச்சியடையும் தன்மை மறைவதில்லை. அது குளிர் காலத்தில் மீண்டும் பனிப்பாறைகளை உருவாக்க காரணமாயிருத்தல் போல நமது காரண உடல்கள் பிரபஞ்சத்தின் அடுத்த தோற்றத்தில் உயிரினங்கள் மறுபடி தோன்ற காரணமாயிருக்கும்.

பயிற்சிக்காக :

1. மரண பயத்திற்கு காரணங்கள் என்ன?

2. மரண அனுபவம் நமக்கு ஏற்பட்டிருக்கிறதா?

3. மரணத்தின் பொழுது அழிவதற்கும் பிரளயத்தின் பொழுது அழிவதற்கும் உள்ள வேறுபாடுகளை உயிரினங்களின் மூன்று உடல்களின் நோக்கில் ஆராய்க.

சுயசிந்தனைக்காக :

1. பிரளயத்திற்கு பின் தோன்றும் உலகில் மனிதர்களுக்கு விருப்பு வெறுப்புகள் இருக்காதா?

2. காரண உடல்களுக்கிடையே வேறுபாடு உள்ளதா?

Monday, June 21, 2010

பாடம் 068: ஊழிக்காலத்தில் ஒடுங்கும் முறை (பிரம்ம சூத்திரம் 2.3.14)

பஞ்சபூதங்கள் ஒன்றிலிருந்து ஒன்று எப்படி தோன்றியதோ அதன் எதிர்வரிசையில் பிரளய காலத்தில் ஒன்றுக்குள் ஒன்று ஒடுங்கும் என்ற வேதத்தின் கருத்தை இந்த பாடம் விளக்குகிறது.

சரியான முடிவு

படிப்படியாக ஏறி மாடிக்கு சென்றவன் இறங்கும்பொழுது அதே படிகளை எதிர்வரிசையில் கடப்பது போல் காற்றிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து நீர், நீரிலிருந்து நிலம் என்ற வரிசையில் தோன்றிய பிரபஞ்சம் ஊழிக்காலத்தில் நீரில் கரைந்து, பின் நீர் நெருப்பில் மறைந்து கடைசியில் காற்றில் கலக்கும்.

எப்படி நீரிலிருந்து தோன்றிய பனிக்கட்டி நீராக மாறி அழிகிறதோ அதே போல் பரமனிடமிருந்து தோன்றிய பிரபஞ்சம் முடிவில் பரமனிடம் சென்று மறையும்.

எது அதிகம்?

பஞ்சபூதங்களுக்குள் எது முதலில் படைக்கப்பட்டதோ அது பின்னால் படைக்கப்பட்டதை விட சக்தி அதிகம் வாய்ந்தது. முதலில் தோன்றி கடைசியில் மறைவதால் அதிக காலம் இருப்பது. இருக்கும் காலத்தில் அதிகம் வியாபித்திருப்பது. நிலத்தை விட நீர் அதிகம் வியாபித்துள்ளது. இதே போல் நீரை விட நெருப்பும், நெருப்பை விட காற்றும், காற்றைவிட வெளியும் அதிகம் வியாபித்துள்ளதை நாம் அறிவியல் பூர்வமாக அறிகிறோம்.

நிலத்தை விட நீர் அதிகம் என்பது பூமியை பொறுத்தவரை சரி என்று மட்டும்தான் அறிவியல் கூறுகிறது. ஆனால் வேதம் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நிலப்பரப்பை விட நீர்தான் அதிகம் வியாபித்திருக்கிறது என்று கூறுகிறது. எதிர்காலத்தில் அறிவியல் அறிஞர்கள் விண்வெளியைபற்றி இன்னும் சரியான உண்மைகளை அறிந்துகொள்ளும்பொழுது இந்த கருத்து வேறுபாடு மறையலாம்.


அழிவை பற்றி அறிவியல் கருத்து

பிரபஞ்சம் எவ்வாறு அழியும் என்பதில் இன்னும் அறிவியல் உலகம் ஒரு முடிவுக்கு வரவில்லை. பிக் பேங்க் (Big Bang) பிரபஞ்சத்தின் தொடக்கத்தை விளக்கும் கோட்பாடாக பெரும்பான்மையான அறிவியல் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்தாலும் இந்த தொடர்ந்த விரிவாக்கம் எப்பொழுது ஒரு முடிவுக்கு வரும் என்பதில் இன்னும் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது. ஒரு சாரார் வேதம் கூறுவது போல விரிவடையும் பிரபஞ்சம் சுருங்கத்தொடங்கி கடைசியில் ஆரம்பத்திலிருந்த நிலையை அடையும் என்கிறார்கள். இந்த பிக் க்ரன்ச் (Big crunch) வாதம் தற்பொழுது மறுக்கப்பட்டு பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைந்து அனைத்து வெப்ப சக்தியும் தீர்ந்து போய் பிக் ஃப்ரீஸ் (Big freeze)ல் முடியும் என்ற கருத்து பிரபலமாயுள்ளது.

இது போன்ற எந்த ஒரு துறையுலும் முடிவான உண்மையை அறிவியலால் அறியமுடியாது. ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் இனி மாறாத உண்மை இதுதான் என்ற முடிவுக்கு அறிவியல் அறிஞர்கள் என்றும் வரமாட்டார்கள். எனவே பிரபஞ்சத்தின் அடர்த்தி பற்றி இன்னும் அதிக தகவல்கள் சேகரித்த பின் வேதம் கூறும் கருத்தான பிக் க்ரன்ச் (Big crunch) தான் சரியான கோட்பாடு என்ற முடிவு பெரும்பான்மையான அறிவியல் அறிஞர்களின் ஆதரவை பெறலாம்.

முடிவுரை :

பஞ்சபூதங்கள் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுவதைப்போல இறுதிகாலத்தில் ஒன்றினுள் ஒன்று மறையும். பஞ்சபூதங்களின் கலவையாக தோன்றிய அனைத்து உயிரினங்களும் ஜடப்பொருள்களும் அழிந்து மண்ணோடு மண்ணாகும். பின் நிலம் நீரில் மூழ்கும். நீர் நெருப்பில் அழியும். நெருப்பு காற்றில் கலக்கும். காற்று வெளியில் காணாமல் போகும். கடைசியில் வெளி பரமனிடம் அடங்கும்.

இது முடிவான முடிவல்ல. தோற்றம் மறைவு என்ற தொடர்ந்த சுழற்சியில் பிரளயம் ஒரு அங்கம்தான். ஊழிக்காலத்தில் மறையும் உலகம் மறுபடியும் தோன்றும். உயிரினங்கள் வாழத்தகுந்த உலகம் மறுபடியும் உருவாகும் என்று வேதம் தெளிவாக கூறுகிறது.

பயிற்சிக்காக :

1. பிரளயத்தின் பொழுது பஞ்ச பூதங்கள் எந்த வரிசையில் ஒடுங்கும்?

சுயசிந்தனைக்காக :

1. பிரளயத்திற்கு பின் என்ன நடக்கும்?


Thursday, June 17, 2010

பாடம் 067: தோற்றுவிப்பவன் பரமனே (பிரம்ம சூத்திரம் 2.3.13)

பிரபஞ்சத்தின் தொடக்கத்தை பற்றி சொல்லபட்ட விதம் ஒரு வேளை பஞ்சபூதங்களுக்கு தோற்றுவிக்கும் சக்தி இருக்கிறதோ என்ற சந்தேகத்தை மக்கள் மனதில் ஏற்படுத்திவிடக் கூடாதென்று தோற்றுவிக்கும் சக்தியும் அறிவும் பரமனிடம் மட்டுமே இருக்கிறது என்று இந்த பாடம் விளக்கம் அளிக்கிறது.

பரமனிடமிருந்து முதலில் தோன்றியது வெளி. அடுத்த படியாக வெளியிலிருந்து காற்று தோன்றியது என்ற கருத்தை படிக்கும்பொழுது வெளி என்பதற்கு உருவாக்கும் சக்தியிருக்குமோ என்ற எண்ணம் வரலாம். அத்தகைய எண்ணம் தவறு. பரமனுக்கு மட்டுமே தோற்றுவிப்பது என்பது சாத்தியம். நீரிலிருந்து நிலத்தை உருவாக்கியது பரமனே தவிர நீர் தன் சுய அறிவாலோ முயற்சியாலோ நிலத்தை தோற்றுவிக்கவில்லை.

அறிவுள்ள உயிரினங்களின் செயல்பாட்டுக்கும் பரமனே காரணம்.

சார்ல்ஸ் டார்வினின் பரிமாண வளர்ச்சி தத்துவத்தின் படி உயிரினங்கள் மாறுவதோ மறைவதோ இயற்கையால் (principle of natural selection) தீர்மானம் செய்யப்படுகிறது. இந்த தத்துவத்தின்படி ஒரு வகை மான்கள் தொடர்ந்து கழுத்தை நீட்டி உயரமாக இருக்கும் மரங்களில் உள்ள இலைகளை உண்ண முயற்சித்ததால் அவற்றின் கழுத்து நீளமாகி அவை ஒட்டகசிவிங்கியாக உருமாறின. இதற்கு காரணம் அவற்றின் தனிபட்ட அறிவுபூர்வமான செயல்பாடு அல்ல. பரமனின் அறிவாற்றல் மட்டுமே இம்மாற்றத்திற்கு காரணம்.

பரிணாம வளர்ச்சி தத்துவம் உண்மையெனில் இன்றய உலகம் இத்தனை வேறுபட்ட உயிரின வகைகளோடு வளர்ச்சிபெற்று இருப்பதற்கு காரணம் எந்த ஒரு குறிப்பிட்ட உயிரினங்களின் அறிவாற்றலோ செயல்பாட்டுத்திறனோ அல்ல. இதற்கு ஒரே காரணம் இயற்கை (principle of natural selection) என்பது சார்ல்ஸ் டார்வினின் முடிவு.

பரமனின் அறிவு மட்டுமே மனிதனை செயல்படுத்துகிறது.

உயிரற்ற ஜடப்பொருள்களான நீர், நிலம், காற்று போன்ற பஞ்சபூதங்கள் மட்டுமன்றி அவற்றின் வெவ்வேறு கலவைகளால் உருவாக்கப்பட்ட இந்த பிரபஞ்சத்தில் ஏற்படும் அனைத்து ஆக்கல் அழித்தல் போன்ற செயல்பாடுகளுக்கும் பரமனின் அறிவு மட்டுமே காரணம். இந்த உண்மை மனிதர்களுக்கும் பொருந்தும்.

ஒரு தாஜ்மஹாலை கட்டியது ஷாஜஹானோ கொத்தனார்களோ அல்ல. பரமனின் அறிவின் செயல்பாட்டால் மட்டுமே அது உருவாகியது. மக்களின் மனதை செயல்படுத்துவது பரமனின் அறிவே. அவனன்றி ஒரு அணுவும் அசையாது. நாம் அசைப்பதாக எண்ணிக்கொண்டிருப்பது அறிவீனம்.

யார் காரணம்?

விண்வெளி அறிஞர்கள் மற்ற கிரகங்களை ஆராய்ச்சிசெய்து அவற்றை கிரமமாக புகைபடம் எடுத்து வருகிறார்கள். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நம் கண்ணில் தென்படும் உபகிரகம் ஒன்றில் சென்ற வருடம் எடுத்த புகைபடத்தில் இல்லாத புதிய ஒரு செவ்வக வடிவம் தற்பொழுது தென்பட்டால் அங்கே அறிவுஜீவிகள் யாராவது இருக்க வேண்டுமென்பதே அனைவரது முதல் எண்ணமாயிருக்கும். ஏனெனில் முறையான படைப்பு உருவாக அறிவாற்றல் அவசியமென்றும் ஜடப்பொருள்களால் தாமாக எதையும் கிரமமாக உருவாக்க முடியாதென்பதும் அனைவருக்கும் தெரியும்.

வெளி, காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகிய பஞ்சபூதங்களும் ஜடப்பொருள்கள். அவற்றால் எதையும் தாமாக உருவாக்க முடியாது. எனவே அனைத்து பூதங்களுக்குள்ளிருந்து செயல்படுவது அறிவுமயமான பரமனே.

உபகிரகங்கள் கிரமமாக கிரகங்களை சுற்றுவதற்கும் கிரகங்கள் பல சேர்ந்து ஒரு சூரியகுடும்பமாக செயல்படுவதற்கும் யார் காரணம்? இவை தானாக ஏற்பட்டது என்றால் ஏன் ஒரு அடையாளம் தெரியாத செவ்வகமோ உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹாலோ தானாக உருவாகியிருக்க கூடாது.

ஜடப்பொருள்களால் எதையும் உருவாக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. மனிதனைத்தவிர மற்ற உயிரினங்களால் எதையும் உருவாக்க முடியாது என்பது சிறிது ஆராய்ச்சிக்கு பின் அறிந்து கொள்ள கூடிய ஒன்று. சிலந்தி வலையை உருவாக்குகிறதே என்றால் அது இயற்கையின் விளைவு. பரமனின் அறிவே சிலந்தியை செயல்படுத்தி வலையை தோற்றுவிக்கிறது.

மனிதனாலும் எதையும் உருவாக்கமுடியாது என்பதை சார்ல்ஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சி தத்துவத்தையும் (theory of evolution) இயற்கையின் செயல்பாட்டு கோட்பாட்டையும் (principle of natural selection) முறையாக பயின்றால் தெரியவரும். விலங்குகள் தாங்கள் செய்யும் காரியங்களை 'நான் செய்தேன்' என்று நினைக்காததால் இயற்கையோடு ஒன்றி வாழ்கின்றன. ஆனால் மனிதர்களோ தாங்கள் செய்யாத செயல்களை செய்ததாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். எப்படி குரங்கிலிருந்து மனிதன் தானாக தோன்றினானோ அது போல மனிதனின் வளர்ச்சியும் பரிணாம வளர்ச்சி தத்துவத்தின் கட்டுப்பாட்டிற்குள்தான் இன்றும் இருந்து வருகிறது.

நாளை உலகபோர் மூண்டு அணுகுண்டுகள் வெடித்துசிதறி உலகம் முழுவதும் அழிந்து போனாலும் அல்லது நாடுகளின் எல்லைகள் வரைபடங்களிலிருந்து நீக்கப்பட்டு அனைத்து மக்களும் ஒரே குடும்பத்தைப்போல் வாழத்தொடங்கினாலும் காரணம் பரமனின் லீலையே தவிர மனித முயற்சி அல்ல. ஏனெனில் எந்த ஒரு தனி மனிதனுக்கும் சுயமாக தன் விரலை அசைப்பதற்குகூட அறிவோ சக்தியோ கிடையாது. ஆக்கல் அழித்தல் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளுக்கும் ஒரே காரணம் பரமனே.

முடிவுரை :

தோற்றம் - வளர்ச்சி - மறைவு என்பது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் துண்டு துண்டாக நடக்கும் நிகழ்வுகள் அல்ல. நாம் பிறந்து வளர்ந்து மறைவது எப்படி ஒரே ஒரு தொடர் நிகழ்வாக அமைந்திருக்கிறதோ அதுபோலவே இந்த பிரபஞ்சம் மறையும் வரை தோற்றம் என்பது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். மனிதனின் அனைத்து செயல்பாடுகளும் இந்த தொடர்ந்த மாற்றத்தின் ஒரு அங்கமே.

முதலில் தோன்றிய பஞ்சபூதங்கள் ஒன்றிலிருந்து ஒன்றாக தோன்றின. அவற்றை ஒன்றிலிருந்து ஒன்றாக தோற்றுவித்தவன் பரமனே. பஞ்சபூதங்களுக்கு தோற்றுவிக்கும் சக்தி கிடையாது.

பஞ்சபூதங்களின் வெவ்வேறு கலவைகளாக இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்து சூரிய குடும்பங்களையும் அவற்றிலுள்ள ஜடப்பொருள்களையும் தோற்றுவித்தது பரமனே. ஜடப்பொருள்களுக்கு தோற்றுவிக்கும் சக்தி கிடையாது.

ஜடப்பொருள்களின் குறிப்பிட்ட மாறுபாடுகளுக்குபின் அவற்றிலிருந்து ஓரறிவுள்ள நீர் வாழ்வன, ஈரறிவுள்ள தாவரம், மூன்றிவுள்ள ஊர்வன/நீந்துவன, நான்கறிவுள்ள பறப்பன, ஐந்தறிவு உள்ள விலங்குகள் ஆகிய அனைத்து உயிரினங்களை உருவக்கியதும் பரமனே. உயிரினங்களுக்கு ஒன்றிலிருந்து மற்றொன்றாக உருவாகும் அறிவு கிடையாது.

இந்த பரிணாம வளர்ச்சியில் கடைசியாக தோன்றியிருப்பவன் ஆறறிவுள்ள மனிதன். மனிதனின் வளர்ச்சிக்கும் அனைத்து செயல்பாடுகளுக்கும் பரமன் மட்டுமே காரணம். ஏனெனில் அறிவு என்பது பரமனின் இயல்பு. மனிதனிடமும் மற்ற உயிரினங்களிடமும் பரமனின் இயல்பான அறிவு பிரதிபலித்து அவர்கள் மூலம் பூமியில் மாறுதல்கள் ஏற்படுத்தபட்டு வருகின்றன.

எனவே பஞ்சபூதங்களை உருவாக்கி அவற்றிலிருந்து மனிதன் உள்ளிட்ட அனைத்தையும் படைத்து இப்பிரபஞ்சத்தின் இயல்பான மாற்றமாக நடைபெறும் அனைத்து செயல்பாடுகளுக்கும் பரமன் மட்டுமே காரணம்.

பயிற்சிக்காக :

1. யார் யாரால் தங்கள் சுய அறிவாலும் முயற்சியாலும் செயல்பட முடியாது என்று இந்த பாடம் விவரிக்கிறது?

2. சார்ல்ஸ் டார்வினின் (Charles Darwin) பரிணாம வளர்ச்சி தத்துவம் எவ்வாறு வேதத்தில் விளக்கப்பட்ட உண்மைகளை நிரூபிக்கிறது?


சுயசிந்தனைக்காக :

1. நம் வாழ்வில் இதுவரை ஏற்பட்ட வெற்றி தோல்விகளுக்கு முழுமுதற்காரணம் யார் என்று ஆராய்க.

Wednesday, June 16, 2010

பாடம் 066: நிலம் நீரிலிருந்து தோன்றியது (பிரம்ம சூத்திரம் 2.3.12)

பிரபஞ்சத்தின் தோற்றத்தில் வெளி, காற்று, நெருப்பு, நீர் என்ற நான்கு பொருள்களுக்குபின் ஐந்தாவதாக தோன்றியது நிலம் என்ற கருத்தை இப்பாடம் விளக்குகிறது.

நிலம் என்றால் என்ன?

நீர் என்பதற்கு ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் வாயுக்களின் கலவையால் உருவானது என்ற தெளிவான விளக்கம் கொடுக்கும் அறிவியல் அறிஞர்கள் நிலம் என்பதை ஒரு தனிபட்ட பொருளாக கருதுவதில்லை. எனவே அவர்கள் நிலம் என்றால் என்ன என்று ஆராயும் பணியை பொருளாதார துறை வல்லுனர்களின் கவனத்திற்கு ஒதுக்கியுள்ளார்கள்.

வெளி, காற்று, நெருப்பு, நீர் ஆகிய நான்கு மூலப்பொருள்களை விட மனிதனின் பருஉடலை உருவாக்குவதில் நிலம் பெரும்பங்கு வகிக்கிறது. மண்ணின் துணையினால் உண்டாகும் உணவுப்பொருள்கள் மனித உடலாக வளர்கிறது. முடிவில் உடல் மண்ணுடன் கலந்து மறுபடியும் மற்ற உயிரினங்களின் உடல்களை வளர்க்கும் உணவாக மாறுகிறது.

மனிதனின் வாழ்வில் நிலம் ஒரு பெரும் பகுதியை வகிக்கிறது. மண்ணின் மீது மனிதனுக்காசை, மனிதன் மீது மண்ணுக்காசை என்ற தொடர் மனிதனுக்கும் மண்ணுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை எடுத்துக்காட்டுகிறது. இதனாலேயே திரைக்கடலோடி திரவியம் தேடிய பின் பிறந்த மண்ணில் சொந்தமாக ஒரு நிலம் வாங்கி அதில் நிம்மதியாக வாழ்ந்து மண் வாசனையை அனுபவிக்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருந்து வருகிறது.

நிலம் எப்படி உருவானது?

வெளி என்ற பொருளில் அடர்த்தி அதிகமானவுடன் காற்றும், அதிலிருந்து வெப்பம் அதிகமானவுடன் நெருப்பும், நெருப்பிலிருந்து நீரும், நீரிலிருந்து சுழற்சி மூலம் நிலமும் உருவானது என்ற விளக்கத்தை வேதம் தருகிறது.

இந்த ஐந்து மூலப்பொருள்களின் கலவையாகவே இந்த பிரபஞ்சம் முழுவதும் உருவானது என்றும் வேதம் கூறுகிறது.

நிலத்தின் தன்மைகள்

வேதம் நிலத்தின் தன்மைகளாக பின்வரும் கருத்துக்களை தெரிவிக்கிறது.

1. திடமானது நிலம்.

2. நீரிலிருந்து தோன்றியது நிலம்.

3. ஒலி, தொட்டுணர்வு, உருவம் மற்றும் சுவை ஆகிய நான்கு குணங்களுடன் மணம் 
என்ற ஐந்தாவது குணத்தையும் கொண்டது நிலம்.

4. நிலம் கருப்பு நிறம் கொண்டது.

5. நிலம் அனைத்தையும் தாங்கும் சக்தி படைத்தது.

6. நம் நுண்ணிய உடலைச்சேர்ந்த மூக்கையும் உணவை செரிக்கும் உருப்புகளையும் உருவாக்கியதில் பெரும்பாகம் வகிப்பது நிலம்.

முடிவுரை :

நிலம் என்பது படைப்பில் ஐந்தாவதாக உருவான பொருள். படைக்கப்பட்டவை என்ற பட்டியலில் இடம் பெறுபவை வெளி, காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற ஐந்து மூலப் பொருள்கள் மட்டுமே. பிரபஞ்சத்தில் உள்ள மற்ற அனைத்து பொருள்களும் இவ்வைந்தின் கலவைகளே என்று வேதம் கூறுகிறது.

பயிற்சிக்காக :

1. நிலத்தின் தன்மைகள் யாவை?

2. மனிதனுக்கும் நிலத்திற்கும் உள்ள உறவு யாது?

சுயசிந்தனைக்காக :

1. நிலம் மற்றும் மண் என்ற சொல்களுக்கு அறிவியல் ரீதியான பொருளை ஆராய்க.

2. அறிவியல் உலகம் கூறும் மூலப்பொருள்களான 94 வேதிப்பொருள்களுக்கும் (Periodic table) வேதம் கூறும் மூலப்பொருள்களான பஞ்சபூதங்களையும் ஒப்பிடுக.