Tuesday, June 8, 2010

பாடம் 064: நெருப்பு காற்றிலிருந்து தோன்றியது (பிரம்ம சூத்திரம் 2.3.10)

பரமன் அனைத்துக்கும் காரணம் என்றாலும் படைப்பின் நியமத்தின் படி முதலில் தோன்றிய வெளியிலிருந்து உருவான காற்றுதான் நெருப்பை உண்டாக்கியது என்ற கருத்தை இப்பாடம் விளக்குகிறது.

நெருப்பு என்றால் என்ன?

நெருப்பு என்பது ஒரு பொருள் அல்ல என்பதில் அறிவியல் உலகம் மிகத்தெளிவாக இருக்கிறது. நெருப்பு என்பது மற்ற பொருள்களின் வேதியியல் மாற்றத்தின் வெளிப்பாடு என்பது அவர்கள் கருத்து.

நெருப்பு என்பதை ஒரு பொருளாகவே ஏற்றுக்கொள்ளாததால் நெருப்பை தோற்றுவிக்கும் பொருள்களின் தன்மைகளைத்தான் ஆய்வுக்கருவாக அறிவியல் அறிஞர்கள் ஆய்ந்து கொண்டிருக்கிறார்களே தவிர நெருப்பின் தனித்தன்மை என்ன என்பதை அவர்கள் தொடக்கப்பள்ளி பாட அளவிற்குமேல் அறிந்து கொள்ள முயலுவதில்லை. எரியக்கூடிய பொருள்களை ஆக்ஸிஜனின் முன்னிலையில் வெப்பபடுத்தினால் அவற்றில் உள்ள கார்பன் அணுக்கள் ஒளிச்சக்தியாகவும் வெப்பசக்தியாகவும் மாறுவதை நாம் நெருப்பு என்கிறோம் என்ற அளவில் நெருப்பை பற்றிய ஆராய்ச்சியை அவர்கள் நிறுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

நெருப்பு என்பது ஒரு பொருள் மட்டுமல்ல. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருள்களையும் உருவாக்க தேவையான ஐந்து மூலப்பொருள்களில் அதுவும் ஒன்று என்பது வேதத்தின் தெளிவான கருத்து.

பிக் பேங்க் (Big Bang)ன் துவக்கத்தில் முதலில் தோன்றியது வெளி. வெளியில் உள்ள அணுக்கள் ஒன்றிணைந்து காற்றாக மாறி அதன் பின் அளவிடமுடியாத அழுத்தம் காரணமாக மிகுந்த வெப்பம் ஏற்பட்டது என்ற அறிவியல் கண்டுபிடிப்பு நெருப்பு காற்றிலிருந்து உருவானது என்ற வேதத்தின் கருத்தை நிரூபிக்கிறது.

நெருப்பின் தன்மைகள்

வேதம் நெருப்பின் தன்மைகளாக பின்வரும் கருத்துக்களை தெரிவிக்கிறது.

1. எது சுடுமோ அது நெருப்பு.

2. காற்றிலிருந்து தோன்றியது நெருப்பு.

3. ஒலி, தொட்டுணர்வு, ஒளி ஆகிய மூன்று குணங்களை கொண்டது நெருப்பு.

4. முதன் முதலில் தோன்றிய வடிவம் நெருப்பு.

5. நெருப்பு பரவும்.

6. நெருப்பின் ஒளி பிரபஞ்சத்தில் உள்ள மற்ற பொருள்கள் மீது பட்டு அவற்றிலிருந்து பிரதிபலிப்பதால் மட்டுமே நம்மால் கண்களை உபயோகிக்க முடிகிறது.

7. மேலும் நம் நுண்ணிய உடலைச்சேர்ந்த கண்களையும் கால்களையும் உருவாக்கியதில் பெரும்பாகம் வகிப்பது நெருப்புதான்.

8. வேதத்தின் கர்மகாண்டத்தில் நெருப்பு என்பது மானிடர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே உள்ள பாலமாக கருதப்படுகிறது. யாகத்தில் வளர்க்கப்படும் நெருப்பில் நாம் சமர்ப்பிக்கும் பொருள்கள் அனைத்தும் நாம் எந்த தெய்வத்தை குறித்து வழிபடுகிறோமோ அந்த தெய்வத்திற்கு நேராக சென்றுவிடுகின்றன.

9. நாம் உண்ட உணவை செரிப்பதற்கு நம் வயிற்றிலிருக்கும் நெருப்புதான் காரணம்.


முடிவுரை :

பசுவிலிருந்து பால் கிடைக்கிறது. தயிர், வெண்ணை, நெய் போன்றவையும் பசுவினிடமிருந்துதான் கிடைக்கின்றன. ஆனால் நாம் வழக்கில் பால் மட்டுமே பசுவிடமிருந்து கிடைப்பதுபோலவும், தயிர் பாலினில் இருந்து வந்தது என்றும், பின் தயிரிலிருந்து வெண்ணை, வெண்ணையிலிருந்து நெய் என்று இப்பொருள்களின் தோற்றத்தை பற்றி ஒரு கிரமத்துடன் பேசுகிறோம். அது போல் இப்பிரபஞ்சம் முழுவதற்கும் பரமன்தான் ஆதாரம் என்றாலும் முதலில் தோன்றியது வெளி, அதிலிருந்து தோன்றியது காற்று, காற்றிலிருந்து நெருப்பு என்று வேதம் விளக்குகிறது.

நெருப்பிலிருந்து நீர், நீரிலிருந்து நிலம் பின் இந்த பஞ்சபூதங்களின் வெவ்வேறு வித சேர்க்கையினால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருள்களும் உருவாக்கப்பட்டன என்ற கருத்து பின் வரும் பாடங்களில் தெளிவுபடுத்தபடுகிறது.

பயிற்சிக்காக :

1. நெருப்பின் தன்மைகள் யாவை?

2. நெருப்பை பற்றி அறிவியல் ஆய்வுக்கும் வேதத்தின் கூற்றுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

சுயசிந்தனைக்காக :

1. சூரியனில் நெருப்பைத்தவிர வேறு ஏதாவது இருக்கிறதா?