Thursday, June 17, 2010

பாடம் 067: தோற்றுவிப்பவன் பரமனே (பிரம்ம சூத்திரம் 2.3.13)

பிரபஞ்சத்தின் தொடக்கத்தை பற்றி சொல்லபட்ட விதம் ஒரு வேளை பஞ்சபூதங்களுக்கு தோற்றுவிக்கும் சக்தி இருக்கிறதோ என்ற சந்தேகத்தை மக்கள் மனதில் ஏற்படுத்திவிடக் கூடாதென்று தோற்றுவிக்கும் சக்தியும் அறிவும் பரமனிடம் மட்டுமே இருக்கிறது என்று இந்த பாடம் விளக்கம் அளிக்கிறது.

பரமனிடமிருந்து முதலில் தோன்றியது வெளி. அடுத்த படியாக வெளியிலிருந்து காற்று தோன்றியது என்ற கருத்தை படிக்கும்பொழுது வெளி என்பதற்கு உருவாக்கும் சக்தியிருக்குமோ என்ற எண்ணம் வரலாம். அத்தகைய எண்ணம் தவறு. பரமனுக்கு மட்டுமே தோற்றுவிப்பது என்பது சாத்தியம். நீரிலிருந்து நிலத்தை உருவாக்கியது பரமனே தவிர நீர் தன் சுய அறிவாலோ முயற்சியாலோ நிலத்தை தோற்றுவிக்கவில்லை.

அறிவுள்ள உயிரினங்களின் செயல்பாட்டுக்கும் பரமனே காரணம்.

சார்ல்ஸ் டார்வினின் பரிமாண வளர்ச்சி தத்துவத்தின் படி உயிரினங்கள் மாறுவதோ மறைவதோ இயற்கையால் (principle of natural selection) தீர்மானம் செய்யப்படுகிறது. இந்த தத்துவத்தின்படி ஒரு வகை மான்கள் தொடர்ந்து கழுத்தை நீட்டி உயரமாக இருக்கும் மரங்களில் உள்ள இலைகளை உண்ண முயற்சித்ததால் அவற்றின் கழுத்து நீளமாகி அவை ஒட்டகசிவிங்கியாக உருமாறின. இதற்கு காரணம் அவற்றின் தனிபட்ட அறிவுபூர்வமான செயல்பாடு அல்ல. பரமனின் அறிவாற்றல் மட்டுமே இம்மாற்றத்திற்கு காரணம்.

பரிணாம வளர்ச்சி தத்துவம் உண்மையெனில் இன்றய உலகம் இத்தனை வேறுபட்ட உயிரின வகைகளோடு வளர்ச்சிபெற்று இருப்பதற்கு காரணம் எந்த ஒரு குறிப்பிட்ட உயிரினங்களின் அறிவாற்றலோ செயல்பாட்டுத்திறனோ அல்ல. இதற்கு ஒரே காரணம் இயற்கை (principle of natural selection) என்பது சார்ல்ஸ் டார்வினின் முடிவு.

பரமனின் அறிவு மட்டுமே மனிதனை செயல்படுத்துகிறது.

உயிரற்ற ஜடப்பொருள்களான நீர், நிலம், காற்று போன்ற பஞ்சபூதங்கள் மட்டுமன்றி அவற்றின் வெவ்வேறு கலவைகளால் உருவாக்கப்பட்ட இந்த பிரபஞ்சத்தில் ஏற்படும் அனைத்து ஆக்கல் அழித்தல் போன்ற செயல்பாடுகளுக்கும் பரமனின் அறிவு மட்டுமே காரணம். இந்த உண்மை மனிதர்களுக்கும் பொருந்தும்.

ஒரு தாஜ்மஹாலை கட்டியது ஷாஜஹானோ கொத்தனார்களோ அல்ல. பரமனின் அறிவின் செயல்பாட்டால் மட்டுமே அது உருவாகியது. மக்களின் மனதை செயல்படுத்துவது பரமனின் அறிவே. அவனன்றி ஒரு அணுவும் அசையாது. நாம் அசைப்பதாக எண்ணிக்கொண்டிருப்பது அறிவீனம்.

யார் காரணம்?

விண்வெளி அறிஞர்கள் மற்ற கிரகங்களை ஆராய்ச்சிசெய்து அவற்றை கிரமமாக புகைபடம் எடுத்து வருகிறார்கள். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நம் கண்ணில் தென்படும் உபகிரகம் ஒன்றில் சென்ற வருடம் எடுத்த புகைபடத்தில் இல்லாத புதிய ஒரு செவ்வக வடிவம் தற்பொழுது தென்பட்டால் அங்கே அறிவுஜீவிகள் யாராவது இருக்க வேண்டுமென்பதே அனைவரது முதல் எண்ணமாயிருக்கும். ஏனெனில் முறையான படைப்பு உருவாக அறிவாற்றல் அவசியமென்றும் ஜடப்பொருள்களால் தாமாக எதையும் கிரமமாக உருவாக்க முடியாதென்பதும் அனைவருக்கும் தெரியும்.

வெளி, காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகிய பஞ்சபூதங்களும் ஜடப்பொருள்கள். அவற்றால் எதையும் தாமாக உருவாக்க முடியாது. எனவே அனைத்து பூதங்களுக்குள்ளிருந்து செயல்படுவது அறிவுமயமான பரமனே.

உபகிரகங்கள் கிரமமாக கிரகங்களை சுற்றுவதற்கும் கிரகங்கள் பல சேர்ந்து ஒரு சூரியகுடும்பமாக செயல்படுவதற்கும் யார் காரணம்? இவை தானாக ஏற்பட்டது என்றால் ஏன் ஒரு அடையாளம் தெரியாத செவ்வகமோ உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹாலோ தானாக உருவாகியிருக்க கூடாது.

ஜடப்பொருள்களால் எதையும் உருவாக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. மனிதனைத்தவிர மற்ற உயிரினங்களால் எதையும் உருவாக்க முடியாது என்பது சிறிது ஆராய்ச்சிக்கு பின் அறிந்து கொள்ள கூடிய ஒன்று. சிலந்தி வலையை உருவாக்குகிறதே என்றால் அது இயற்கையின் விளைவு. பரமனின் அறிவே சிலந்தியை செயல்படுத்தி வலையை தோற்றுவிக்கிறது.

மனிதனாலும் எதையும் உருவாக்கமுடியாது என்பதை சார்ல்ஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சி தத்துவத்தையும் (theory of evolution) இயற்கையின் செயல்பாட்டு கோட்பாட்டையும் (principle of natural selection) முறையாக பயின்றால் தெரியவரும். விலங்குகள் தாங்கள் செய்யும் காரியங்களை 'நான் செய்தேன்' என்று நினைக்காததால் இயற்கையோடு ஒன்றி வாழ்கின்றன. ஆனால் மனிதர்களோ தாங்கள் செய்யாத செயல்களை செய்ததாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். எப்படி குரங்கிலிருந்து மனிதன் தானாக தோன்றினானோ அது போல மனிதனின் வளர்ச்சியும் பரிணாம வளர்ச்சி தத்துவத்தின் கட்டுப்பாட்டிற்குள்தான் இன்றும் இருந்து வருகிறது.

நாளை உலகபோர் மூண்டு அணுகுண்டுகள் வெடித்துசிதறி உலகம் முழுவதும் அழிந்து போனாலும் அல்லது நாடுகளின் எல்லைகள் வரைபடங்களிலிருந்து நீக்கப்பட்டு அனைத்து மக்களும் ஒரே குடும்பத்தைப்போல் வாழத்தொடங்கினாலும் காரணம் பரமனின் லீலையே தவிர மனித முயற்சி அல்ல. ஏனெனில் எந்த ஒரு தனி மனிதனுக்கும் சுயமாக தன் விரலை அசைப்பதற்குகூட அறிவோ சக்தியோ கிடையாது. ஆக்கல் அழித்தல் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளுக்கும் ஒரே காரணம் பரமனே.

முடிவுரை :

தோற்றம் - வளர்ச்சி - மறைவு என்பது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் துண்டு துண்டாக நடக்கும் நிகழ்வுகள் அல்ல. நாம் பிறந்து வளர்ந்து மறைவது எப்படி ஒரே ஒரு தொடர் நிகழ்வாக அமைந்திருக்கிறதோ அதுபோலவே இந்த பிரபஞ்சம் மறையும் வரை தோற்றம் என்பது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். மனிதனின் அனைத்து செயல்பாடுகளும் இந்த தொடர்ந்த மாற்றத்தின் ஒரு அங்கமே.

முதலில் தோன்றிய பஞ்சபூதங்கள் ஒன்றிலிருந்து ஒன்றாக தோன்றின. அவற்றை ஒன்றிலிருந்து ஒன்றாக தோற்றுவித்தவன் பரமனே. பஞ்சபூதங்களுக்கு தோற்றுவிக்கும் சக்தி கிடையாது.

பஞ்சபூதங்களின் வெவ்வேறு கலவைகளாக இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்து சூரிய குடும்பங்களையும் அவற்றிலுள்ள ஜடப்பொருள்களையும் தோற்றுவித்தது பரமனே. ஜடப்பொருள்களுக்கு தோற்றுவிக்கும் சக்தி கிடையாது.

ஜடப்பொருள்களின் குறிப்பிட்ட மாறுபாடுகளுக்குபின் அவற்றிலிருந்து ஓரறிவுள்ள நீர் வாழ்வன, ஈரறிவுள்ள தாவரம், மூன்றிவுள்ள ஊர்வன/நீந்துவன, நான்கறிவுள்ள பறப்பன, ஐந்தறிவு உள்ள விலங்குகள் ஆகிய அனைத்து உயிரினங்களை உருவக்கியதும் பரமனே. உயிரினங்களுக்கு ஒன்றிலிருந்து மற்றொன்றாக உருவாகும் அறிவு கிடையாது.

இந்த பரிணாம வளர்ச்சியில் கடைசியாக தோன்றியிருப்பவன் ஆறறிவுள்ள மனிதன். மனிதனின் வளர்ச்சிக்கும் அனைத்து செயல்பாடுகளுக்கும் பரமன் மட்டுமே காரணம். ஏனெனில் அறிவு என்பது பரமனின் இயல்பு. மனிதனிடமும் மற்ற உயிரினங்களிடமும் பரமனின் இயல்பான அறிவு பிரதிபலித்து அவர்கள் மூலம் பூமியில் மாறுதல்கள் ஏற்படுத்தபட்டு வருகின்றன.

எனவே பஞ்சபூதங்களை உருவாக்கி அவற்றிலிருந்து மனிதன் உள்ளிட்ட அனைத்தையும் படைத்து இப்பிரபஞ்சத்தின் இயல்பான மாற்றமாக நடைபெறும் அனைத்து செயல்பாடுகளுக்கும் பரமன் மட்டுமே காரணம்.

பயிற்சிக்காக :

1. யார் யாரால் தங்கள் சுய அறிவாலும் முயற்சியாலும் செயல்பட முடியாது என்று இந்த பாடம் விவரிக்கிறது?

2. சார்ல்ஸ் டார்வினின் (Charles Darwin) பரிணாம வளர்ச்சி தத்துவம் எவ்வாறு வேதத்தில் விளக்கப்பட்ட உண்மைகளை நிரூபிக்கிறது?


சுயசிந்தனைக்காக :

1. நம் வாழ்வில் இதுவரை ஏற்பட்ட வெற்றி தோல்விகளுக்கு முழுமுதற்காரணம் யார் என்று ஆராய்க.