Monday, May 31, 2010

பாடம் 063: பரமன் தொடக்கமற்றவன் (பிரம்ம சூத்திரம் 2.3.9)

பரமன் நித்தியமாக இருப்பவன். வெளி, காற்று போல பரமன் தோற்றம்-மறைவு என்ற சுழற்சிக்கு உட்படாதவன் என்ற கருத்தை விளக்குவதுடன் ‘பரமன் இருக்கிறான்’ என்பதன் பொருளை இந்த பாடம் ஆராய்கிறது.

இருத்தல் என்றால் என்ன?

இருத்தல் என்றால் என்ன என்ற கேள்விக்கு பதில் கண்டுபிடிக்க உள்ளியல் (Ontology) என்ற துறை அரிஸ்டாடில் காலத்தில் துவக்கப்பட்டு அன்றிலிருந்து இன்றுவரை பல ஆராய்ச்சிகளும் விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னும் 'இருத்தல் என்றால் என்ன?' என்ற கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவில்லை என்று நம்மால் இந்த துறையை சேர்ந்த அறிஞர்களை குறை கூற முடியாது. ஏனெனில் அவர்கள் இந்த கேள்விக்கு தெளிவான பதில் கூறிய ஆதி சங்கரரை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு அவருக்கும் மற்ற அறிஞர்களின் வரிசையில் இடம் கொடுத்துள்ளார்கள். ஆனால் சங்கரரின் சரியான பதிலை மற்றவர்களின் தவறான பதில்களைப்போல் ஒரு தனிமனிதரின் கருத்து என்று முடிவு செய்துவிட்டு சரியான பதிலை யாராலும் என்றும் கொடுக்க முடியாது என்ற பிடிவாதத்துடன் இருக்கிறார்கள்.

‘இருக்கிறது’ என்ற சொல்லுக்கு சரியான பொருள் தெரியாமல் அதை உபயோகிக்கும் சாதாரண மனிதர்களைப்போல உள்ளியல், உளவியல் மற்றும் அறிவியல் ஆகிய அனைத்து துறைகளை சேர்ந்த அறிஞர்களும் தொடர்ந்து அஸ்திவாரம் இல்லாத கட்டடங்களை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ‘இருத்தல்’ என்பதன் பொருளை கண்டுபிடிப்பது தற்போதைய உள்ளியல் துறை மாணவர்களுக்கு ஒரு பொழுதுபோக்காய் இருக்கிறது. ஆளுக்கு ஆள் தமக்கு தோன்றியதை கூறி சரியான பதிலை தெரிந்துகொள்ள மறுத்துவருகிறார்கள்.

இருத்தல் என்பது ஒரு பொருளின் குணமா, அனைத்து பொருள்களின் இருப்பிற்கும் ஆதாரமாக ஏதேனும் இருக்கிறதா என்பது போன்ற சரியான கேள்விகளை முன்வைக்கும் உள்ளியல் துறை, சரியான பதிலை புரிந்து கொள்ள திறனின்றி தொடர்ந்து அதே கேள்விகளை மட்டும் கேட்டு வருகிறார்கள்.

எனக்கு கேள்விகளை கேட்கத்தான் தெரியும்’ என்று கூறிய திருவிளையாடல் தருமியாவது ஆண்டவன் கூறிய பதில்களை புரிந்துகொள்ளும் சக்தி கொண்டிருந்தான். ஆனால் உள்ளியல் துறை அறிஞர்களுக்கு வேதத்தில் உள்ள சரியான பதிலை எடுத்துரைத்த ஆதிசங்கரரை ஒரு அறிஞர் என்று ஏற்றுக்கொள்ளும் அளவுதான் திறமை உள்ளதே தவிர அவர் கூறிய சரியான பதிலை புரிந்து கொள்ளும் சக்தி இல்லை.

இருத்தல் பொருள்களின் குணமல்ல

'நாற்காலி இருக்கிறது' என்ற சொற்றொடரில் உள்ள 'இருக்கிறது' என்ற வார்த்தை நாற்காலியின் ஒரு குணமல்ல. நாற்காலியை நெருப்பிலிட்டு கொளுத்திவிட்டபின் நாற்காலி சாம்பலாக மாறிவிடும். இப்பொழுது நாற்காலி சாம்பலாக இருக்கிறது. உலகில் உள்ள அனைத்து பொருள்களும் ஒன்றிலிருந்து ஒன்றாக மாறுமே தவிர முழுவதும் அழிவதில்லை. இந்த உண்மையை அறிவியல் அறிஞர்கள் முற்றிலும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எல்லா பொருள்களும் ஏதாவது ஒரு உருவத்தில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. பொருள்களாக இல்லாவிட்டாலும் சக்தியாக மாறி தொடர்ந்து அவை இருக்கின்றன. எனவே இருத்தல் பொருள்களின் குணமல்ல என்றும் அது என்றும் இருக்கும் ஒரு தனிப்பட்ட அடிப்படை தத்துவம் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த தத்துவம்தான் பரமன். பரமன் இருக்கிறான். இதில் இருத்தல் என்பது பரமனின் இயல்பு.

பரமன் நித்தியமானவன் என்பதன் விளக்கம்

இருத்தல் என்பதை இயல்பாக கொண்டு இப்பிரபஞ்சம் முழுவதுமுள்ள அனைத்து பொருள்களின் இருப்பிற்கு ஆதாரமாக இருக்கும் பரமன் எந்த ஒருகாலத்திலும் இல்லாமலிருக்க முடியாது.

பரமன் தோன்றி மறைபவன் எனில் அவன் தோற்றத்தை அறிய வேறு ஒருவன் இருக்க வேண்டும். அவ்வாறு யாருமில்லாத காரணத்தால் பரமன் தோற்றமற்றவன் என்பதை அறியலாம்.

காரண காரிய வரிசையில் முதலில் இருக்கும் பரமனுக்கு காரணம் என்று யாரேனும் இருந்தால் அவன்தான் பரமன். பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு காரணமானவன் பரமன். அவன் தோற்றபட்டவனல்ல. தோற்றுவிப்பவன் மட்டுமே.

ஒளி என்பது எப்படி இருட்டிலிருந்து உற்பத்தி ஆகாதோ அது போல இருத்தல் என்பது இல்லாமையிலிருந்து உருவாவது சாத்தியமில்லை.

களிமண் என்ற பொதுவான பொருளிலிருந்து குடம், ஜாடி, மூடி போன்ற குறிப்பிட்ட பொருள்கள் தோன்றும். குறிப்பிட்ட பொருள்களிலிருந்து ஒரு பொதுவான பொருள் தோன்றும் என்பது நமது தர்க்க அறிவிற்கும் அனுபவ அறிவிற்கும் ஒத்துப் போவதில்லை. எனவே அனைத்து வேறுபட்ட பொருள்களும் பரமனிடமிருந்து உருவாகியிருக்க, பரமன் எந்த ஒரு குறிப்பிட்ட பொருளிலிருந்தும் உருவாகும் வாய்ப்பேயில்லை.

பரமன் என்றும் இருப்பவனல்ல, தோற்றுவிக்கப்பட்டவன் என்று கூறினால் அவனை தோற்றுவித்தது யார் என்ற கேள்வியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பிரபஞ்சம் என்பது தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பதும் அது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குமுன் தோற்றுவிக்கப்பட்டது என்றும் நமக்கு அறிவியல் உலகம் தெளிவாக தெரிவிப்பதால் தோற்றுவித்தவன் என்று ஒருவன் இருக்க வேண்டுமென்றும் அவன் நித்தியமானவனாகத்தான் இருக்க வேண்டும் என்பதையும் நாம் தர்க்கத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். இருத்தல் என்பதை இயல்பாக கொண்ட பரமன் என்றும் இருப்பவன் என்ற இதே கருத்தை வேதமும் தெளிவாக சொல்கிறது.

முடிவுரை :

பரமன் மட்டுமே நித்தியமாக என்றும் இருப்பவன். அவன் தோற்றம் மறைவு போன்ற மாறுதல்களுக்கு அப்பாற்பட்டவன். இருத்தல் என்ற தனிபட்ட தத்துவத்தை அடிப்படையாக கொண்டே இப்பிரபஞ்சம் இருந்து வருகிறது. பிரளயத்துக்கு பின் இருத்தலை பரமனிடம் மட்டும் விட்டுவிட்டு பிரபஞ்சம் மறைந்து விடும்.

பயிற்சிக்காக :

1. பரமன் நித்தியமானவன் என்பதற்கு கூறப்பட்ட காரணங்கள் யாவை?

சுயசிந்தனைக்காக: :

1. உள்ளியல் (Ontology) துறை பற்றி அறிந்து கொள்க.


Monday, May 24, 2010

பாடம் 062: காற்று வெளியிலிருந்து தோன்றியது (பிரம்ம சூத்திரம் 2.3.8)

காற்று நித்தியமானதல்ல. பிரபஞ்சம் உருவானபொழுது முதல் பொருளாக உருவானது வெளி. அதிலிருந்து தோன்றியதுதான் காற்று என்ற கருத்தை இந்த பாடம் தெளிவு படுத்துகிறது.

காற்று என்றால் என்ன?

அறிவியல் அறிஞர்கள் காற்று என்ற சொல் பாமர மக்கள் உபயோகபடுத்தும் ஒரு சொல்லாக கருதி அதற்கு நைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்ற வாயுக்களின் கலவை என்ற விளக்கத்தை மட்டும் தருகிறார்கள். மேலும் காற்று என்பது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தனிப்பொருளாகவும் அவர்கள் கருதுவதில்லை.

ஆனால் வேதத்தின் பார்வையில் காற்று என்பது இந்த பிரபஞ்சத்தை உருவாக்க பயன்படுத்தப்பட்ட ஐந்து மூலப்பொருள்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது. எனவே காற்றை பற்றிய பின் வரும் கருத்துக்களை நாம் வேதத்திலிருந்து பெறலாம்.

1. காற்று வெளியிலிருந்து உண்டானது. நித்தியமானது அல்ல.

2. வெளியில் உள்ள ஒலி என்ற உணர்வுடன் தொட்டுணரும் தன்மையையும் சேர்த்து உருவானதுதான் காற்று.

3. எனவே காற்று ஒலியுடன் கூடியது. காற்றின் சப்தத்தை நம்மால் கேட்க முடியும்.

4. மேலும் காற்று நம் மேல் படுவதை நம்மால் உணர முடியும்.

5. காற்று மெதுவாகவும் வேகமாகவும் செல்லும் சக்திபடைத்தது.

6. காற்றுக்கு ஈரத்தை உலர்த்தும் சக்தி உள்ளது.

7. பொருள்களை நகர்த்தும் சக்தி வாய்ந்தது.

8. நம் கைகளின் பலத்துக்கு ஆதாரம் காற்று.

9. காற்றை பெரும் பகுதியாக கொண்டு உருவானவை நம் நுண்ணிய உடலின் உறுப்புக்களான தோலும் கைகளும்.

பஞ்சபூதங்களிலிருந்துதான் பிரபஞ்சம் உருவாகியிருக்கிறது என்பதையோ நுண்ணிய உடல்களின் இருப்பையோ விஞ்ஞான உலகம் அறிவதில்லை. வேதங்கள் மட்டுமே இக்கருத்துக்களை தெளிவாக நமக்கு தந்துள்ளன.

முடிவுரை :

பரமன் மட்டுமே நித்தியமாக என்றும் இருப்பவன். பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து பொருள்களும் இருத்தல் என்ற தன்மையை பரமனிடமிருந்து கடன் வாங்கியுள்ளன. வெளி இருத்தல் என்ற தன்மையுடன் ஒலி என்ற உணர்வை சேர்த்து உருவாக்கப்பட்டது. இந்த கலவையுடன் தொட்டு உணரும் சக்தியை சேர்த்து தோற்றுவிக்கப்பட்டது காற்று.

பிரளயத்தின் பொழுது எல்லா பொருள்களும் காற்றாக மாற்றபட்டு அதன்பின் காற்று வெளியினுள் மறையும்.

பயிற்சிக்காக :

1. காற்றின் தன்மைகள் என்று வேதம் கூறும் கருத்துக்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. உலகின் மற்ற பழங்கலாசாரங்கள் காற்றை பற்றி என்ன கருத்துக்கள் கொண்டிருந்தன?

Tuesday, May 18, 2010

பாடம் 061: வெளி நித்தியமானது அல்ல (பிரம்ம சூத்திரம் 2.3.1-7)


தொடர்ந்து மாறும் பிரபஞ்சம் தோற்றம்-மறைவு என்ற கட்டுகோப்புக்கு உட்பட்டது என்பதில் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் வெளி (space) என்பது எப்பொழுதும் இருப்பது என்ற தவறான கொள்கையிலிருந்து அறிவியல் உலகம் முற்றிலும் வெளிவரவில்லை. பிக் பேங்க் (Big Bang)ற்கு முன் வெளி இருந்திருக்கவில்லை என்ற சமீபத்திய கண்டுபிடிப்பில் இன்னும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. ஆனால் வெளி என்பது பரமனிடமிருந்து தோற்றுவிக்கப்பட்ட ஒரு பொருள் என்ற உண்மையை வேதம் தெளிவாக எவ்வித முரண்பாடுமில்லாமல் குறிப்பிடுவதை இப்பாடம் விளக்குகிறது.

வெளி என்ற பொருளின் தோற்றம்

பரமன் மட்டும்தான் நித்தியமானவன். பிரபஞ்சம் தோன்றி மறைவது. நடராஜனின் கையில் உள்ள உடுக்கையை சொடுக்கிவிட்டவுடன் ஏற்பட்ட ஓம் என்ற பிரணவ மந்திரத்திலிருந்து பிரபஞ்சத்தின் முதல் அம்சமாக வெளி தோற்றுவிக்கப்பட்டது என்கிறது வேதம். ஒலியிலிருந்து வெளி உருவானது என்பது பௌதீக ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பிக் பேங்க் (Big Bang) ன் பொழுது தோன்றி இன்று வரை வான வெளியில் தொடர்ந்து கேட்டுகொண்டிருக்கும் இந்த ஒலியை பற்றிய முழு அறிவை பெற அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டிருக்கின்றன.

வெளி என்பது ஒன்றுமில்லாத வெற்றிடம் (void) என்ற தவறான கருத்திலிருந்து அது ஒரு பொருள் (substance) என்ற வேதம் கூறும் உண்மையை தீவிர ஆராய்ச்சிக்கு பின் அறிவியல் வழிமொழிந்துள்ளது.

நீளம், அகலம், உயரம் மற்றும் நேரம் என்ற நான்கு பரிமாணங்களை உள்ளடக்கியது வெளி. நேரம் என்பது வெளியின் ஒரு பரிமாணம் என்பதால் வெளி-நேரம் (space-time) என்பது பிரிக்க முடியாத ஒரே பொருள். ஐன்ஸ்டினின் ஆராய்ச்சி முடிவு வேதத்தின் இந்த தத்துவத்தை நிரூபித்துள்ளது.

ஆக இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை உள்ளடக்கிய வெளி என்ற பொருள் முதலில் படைக்கப்பட்டது.

பிரபஞ்சத்தின் ஆதாரம் வெளி

பிரபஞ்சம் என்பதை ஒரு உருளைக்கிழங்கு மூட்டைக்கு ஒப்பிடலாம். எப்படி ஒரு சாக்கு பை அனைத்து கிழங்குகளையும் ஒரிடத்தில் சேர்த்து வைத்திருக்கிறதோ அதேபோல் வெளி அனைத்து சூரிய குடும்பங்களையும் (galaxies) தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது. சாக்கு பை போல வெளியும் ஒரு பொருள். உருளைக்கிழங்கு மூட்டையை உருவாக்க கூலியாள் முதலில் கையாளும் பொருள் கிழங்குகள் அல்ல. சாக்கு பைதான். அதுபோல பிரபஞ்சத்தை உருவாக்க முதல் பொருளாக வெளி உருவாகி அது மற்ற அனைத்து பொருள்களுக்கும் நிகழ்வுகளுக்கும் இடம் அளித்துக்கொண்டிருக்கிறது.

முதலில் வெகு சிறியதாக இருந்த வெளி தொடர்ந்து கடந்த பதினான்கு பில்லியன் வருடங்களாக விரிவடைந்து வருகிறது. தற்போது அதன் விட்டம் 280 கோடி ஒளி-வருடம் (light-year) என்று அறிவியல் உலகம் கணித்திருக்கிறது. தொடக்கம் முதல் இன்று வரை தொடர்ந்து விரிவடைந்து அனைத்து பொருள்களுக்கும் காலத்துக்கும் இடமளித்துக் கொண்டிருக்கும் வெளி, பிரளய காலத்தில் சுருங்கி பிரபஞ்சம் மறையும் பொழுது கடைசி பொருளாக மறைந்து இறைவனிடம் ஐக்கியமாகிவிடும்.

வெளியின் தொடக்கமும் மறைவும்

கடவுள்தான் பிரபஞ்சத்தை தோற்றுவிக்கும் முதல் படியாக வெளியை உருவாக்கினார் என்பதை அறிவியல் உலகம் ஒத்துக்கொள்ளாவிடினும் வெளியின் தோற்றத்திற்கு முன் என்ன இருந்தது என்பது பற்றி விஞ்ஞானிகள் தரும் விளக்கம் கடவுளை தெளிவாக சித்தரிக்கிறது.

பரமனை நாம் எல்லோரும் எப்பொழுதும் அனுபவித்தாலும் பரமன் இருக்கின்றான் என்ற அறிவு முறையாக வேதத்தை படித்தாலன்றி நமக்கு ஏற்படுவதில்லை. எனவே அறிவியல் ஆய்வுகள் பரமனின் இருப்பை தெளிவாக காட்டிய பின்னும் விஞ்ஞானிகள் பரமனை தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். பிரபஞ்சத்தின் தோற்றத்தை பற்றிய ஆய்வுகள் பல பிக்பேங்க்(Big Bang)ற்கு முன் இருந்ததை புலன்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு பரிமாணமற்ற புள்ளி (dimensionless singularity) என்கிறார்கள். அது தான் பரமன். ஆனால் அறிவியல் அறிஞர்கள் அதை அறிவற்ற ஜடப்பொருளாக உருவகம் செய்து தங்களது அறிவின் ஆதாரத்தை மறுத்து வருகிறார்கள்.

எனவே அவர்கள் ஆகாயத்தின் அளவற்ற அளவை தங்களோடு ஒப்பிட்டு தாம் இந்த பிரபஞ்சத்தில் வசிக்கும் ஒரு அற்பமான சிறுதுளி என்ற தவறான தாழ்வு மனப்பான்மை கொண்டுள்ளார்கள். உண்மையில் நான்தான் அறிவு மயமான பரமன். இந்த பரந்த வெளி என்னால் என்னிடமிருந்து உருவாக்கப்பட்டது என்ற சரியான விளக்கத்தை வேதம் நமக்களிக்கிறது.

இன்னும் ஆயிரம் கோடி வருடங்களுக்கு பின் இந்த பிரபஞ்சம் விரிவடைவது நின்று சுருங்க ஆரம்பித்து அனைத்து சூரிய குடும்பங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி அழிவடைந்து இறுதியில் பரிமாணமற்ற புள்ளி (dimensionless singularity)யில் முடிவடையும் என்பது ஒரு அறிவியல் கருத்து. பிரளயத்தின் பொழுது கடைசியில் அழிக்கப்படவிருப்பது நீளம், அகலம், உயரம் மற்றும் நேரம் ஆகிய நான்கு பரிமாணங்கள் கொண்ட வெளி என்ற கருத்தை வேதம் தெளிவாக கூறுகிறது.

தோற்றத்திற்கு முன் அல்லது மறைவுக்கு பின் என்ற வார்த்தைகள் வெளி என்ற சொல்லுடன் பொருந்தா. ஏனெனில் காலம் என்பது வெளியின் ஒரு பரிமாணம். எனவே வெளியின் தோற்றத்திற்கு 'முன்' என்றோ 'பின்' என்றோ குறிப்பிட முடியாது.

வெளி ஒரு மாயை

பிரபஞ்சம் முழுவதும் இருப்பது போல் தோற்றமளிக்கும் ஒரு மாயை என்ற உண்மையை வேதம் விளக்கியிருப்பதால் பிரபஞ்சத்தின் முதல் அங்கமான வெளியும் மாயை என்று புரிந்து கொள்ளலாம்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein) வெளியின் விளிம்புக்கு மனிதனால் செல்லவே முடியாது என்பதை நிரூபித்திருக்கிறார். வெளி தொடர்ந்து விரிவடைவதால் ஐன்ஸ்டின் இந்த முடிவுக்கு வந்திருந்தாலும் வெளி ஒரு மாயத்தோற்றம் என்பதுதான் இதன் சரியான விளக்கம்.

வெளி என்பது இரண்டு பொருள்களுக்கிடையே இருக்கும் தொலைவு என்ற தவறான அறிவியல் விளக்கத்தை திறுத்தியவர் ஐஸக் நியூட்டன் (Isaac Newton). பொருள்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வெளி என்பதன் இருப்பு பாதிக்கப்படுவதில்லை என்று அவர் நிறுவினார்.

இம்மானுவேல் கான்ட் (Emmanuel Kant) என்ற ஜெர்மானிய விஞ்ஞானி மேலும் ஒரு படி சென்று காலம் என்பது இரண்டு நிகழ்வுகளுக்கிடையே இருக்கும் இடைவெளி என்ற கருத்தை திருத்தி அது நமது வாழ்வின் அனுபவங்களை சித்தரிக்க நம்மால் உருவாக்கப்பட்ட ஒரு அவசியமான கருவி என்கிறார்.

இவ்விரு அறிஞர்களின் கருத்து வெளி என்பதை பற்றி வேதம் கூறும் கருத்துடன் மிக ஒத்துப்போகின்றது. வெளி-நேரம் (space-time) என்பது மனித மனதின் கற்பனை. நமது ஐந்து புலன்களும் இல்லாத உலகை இருப்பது போல் காண்பிப்பதை நமது மனது ஏற்றுகொள்வதால் ஏற்பட்ட விளைவுகளில் வெளியும் (நேரமும்) ஒன்று.

எனவே அனைத்து பொருள்களையும் நிகழ்வுகளையும் தனித்தனி இடத்திலும் காலத்திலும் சித்தரித்து இல்லாத உலகை இருப்பது போல் காட்டும் மாயா சக்தியின் முதல் வெளிப்பாடு வெளி என்பதாகும்.

மேற்கத்திய உலகம் வெளி என்பதை ஒரு பொருள் என்று கண்டுபிடித்து அதன் தன்மைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற அனைத்து பொருள்களைப்போல வெளியும் உண்மையில் இல்லாமல் ஆனால் இருப்பது போன்ற மாயத்தோற்றமளிக்கும் ஒரு பொருள் என்ற தத்துவத்தை வேதம் தருகிறது.

முடிவுரை :

பரமனின் மாயாசக்தியின் முதல் வெளிப்பாடான வெளி என்ற பொருள் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி பெற்று காற்று, நெருப்பு, பின் நீர் மற்றும் நிலம் என்ற பஞ்சபூதங்களாக உருவாகியுள்ளது. இந்த பஞ்சபூதங்களை அடிப்படையாக கொண்டு உருவானது தான் அனைத்து உயிரினங்களையும் ஜடப்பொருள்களையும் உள்ளடக்கிய இந்த பரந்த பிரபஞ்சம்.

பிரபஞ்சம் தொடர்ந்து மாற்றமடையும் ஒரு நிலையில்லாத மாயை. பிரபஞ்சத்தின் ஒரு பகுதியான நமது உடலும் மனதும் மாயைதான். ஆனால் ஐம்புலன்கள் சேகரித்து தரும் தகவல்களை ஆதாரமாக கொண்டு இல்லாத உலகத்தை இருப்பதாக நம்புவதற்கு பரமனை பற்றிய நமது அறியாமைதான் காரணம்.

தொடர்ந்து நிகழும் மாற்றத்தில் காலம், இடம், பொருள் என்ற பிரிவுகளை நமது மனம் கற்பனை செய்துகொண்டுள்ளது.

வேதத்தின் இந்த முரண்பாடற்ற தத்துவங்களை வெவ்வேறு அறிவியல் ஆய்வுகளும் தத்துவ ஞானிகளும் சந்தேகமற நிரூபித்திருந்தாலும் தவறான கருத்துக்களுடன் அவை கலந்து உண்மை எது பொய் எது என்று கண்டுபிடிக்க முடியாமல், திக்குத்தெரியாத காட்டில் தொலைந்து போனவர்கள் இங்கும் அங்கும் அலைபாய்வது போல், பொதுமக்கள் தொடர்ந்து தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பயிற்சிக்காக :

1. வெளி பற்றிய இரண்டு கண்டுபிடிப்புகளை விவரி.

2. வெளியில் அடங்கியுள்ள நான்கு பரிமாணங்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. வெளியை பற்றி அறிந்து கொள்ள கடவுள் நம்பிக்கை அவசியமா?

Friday, May 14, 2010

பாடம் 060: கடவுள் நம்பிக்கையின்மை தவறு (பிரம்ம சூத்திரம் 2.2.42-45)


மனித குலத்தின் துவக்கத்திலிருந்தே பெரும்பாலான மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக கடவுள் இருந்து வருகிறார். ஆனால் அதேசமயத்தில் கடவுள் இல்லை என்ற கொள்கையுடைய ஒரு சிலரும் ஆரம்பகாலத்திலிருந்தே இருந்து வருகிறார்கள். கடவுளை பிரார்த்தித்து கேட்டது கிடைக்காத காரணத்தால் கடவுள் இல்லை’ என்ற கட்சிக்கு கட்சித்தாவல்கள் நடப்பது போல கடவுள் நம்பிக்கை இல்லாத பலர் வாழ்வில் பல சாதனைகள் நிகழ்த்திய பின் தங்கள் வெற்றி தோல்விகளின் காரணங்களை ஆராய்ந்து ‘கடவுள் இருக்கிறார்’ என்ற முடிவுக்கு வருவதும் உண்டு.

இந்த பரந்த பிரபஞ்சம் நம் முன் காட்சியளித்து கொண்டிருப்பதால் இதை நிர்மாணித்தவன் ஒருவன் இருக்க வேண்டும் என்பவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். உலகம் எப்படி உருவானது என்று நமக்கு தெரியாத காரணத்தால் மனிதன் கடவுளை உருவாக்க தேவையில்லை, அறிவியல் மூலம் நாம் அனைத்தையும் ஒரு நாள் அறிந்து கொள்ளாலாம் என்போர் கடவுள் இல்லை என்று நம்புபவர்கள். இரு தரப்பினரும் எவ்வித தீவிர ஆராய்ச்சியும் செய்யாமல் உண்டு என்றும் இல்லை என்றும் மூட நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள். இதனாலேயே வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளுக்கேற்றாற்போல் கட்சித்தாவல்கள் நடந்து வருகின்றன.

'கடவுள் உண்டு' என்ற மூட நம்பிக்கையை ஒப்பிடும்பொழுது 'கடவுள் இல்லை' என்ற மூட நம்பிக்கை தவறானது என்றும் கடவுள் மறுப்பு கொள்கையை (Atheism) பின்பற்றுபவர்களால் எவ்வாறு வாழ்வின் குறிக்கோளை அடைய முடியாது என்பதையும் இப்பாடம் விளக்குக்கிறது.

கடவுளின் அவசியம்

நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை. மனிதன் எப்பொழுதும் இன்பமாக இருக்கவும் துன்பங்களை முழுதும் தவிர்க்கவும் விழைகிறான். இதுதான் அனைத்து மனிதர்களின் முடிவான குறிக்கோள். ஆனால் இந்த ஆசை எல்லா சமயங்களிலும் நிறைவேறுவதில்லை. எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் பல சமயங்களில் துன்பத்தை தவிர்க்க முடிவதில்லை. அம்மாதிரி நேரங்களில் இறைவன் இருக்கின்றானா என்ற சந்தேகம் கடவுளை நம்புபவர்களுக்கும் என்னுடைய முயற்சிகளுக்கு பலனில்லாமல் போவதற்கு கடவுள் நம்பிக்கையில்லாததுதான் காரணமா என்று கடவுளை மறுப்பவருக்கும் தோன்றுவது இயற்கை.

கடவுள் மீது ஆழ்ந்த பக்தியும் நம்பிக்கையும் கொண்டவர்கள் என்ன கஷ்டம் வந்தாலும் கடவுள் காட்டிய வழி என்று வாழ்வு பயணத்தை தொடருவார்கள். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்பது அவர்களின் நம்பிக்கை. பகுத்தறிவும் அறிவியல் ஞானமும் உள்ளவர்களால் இவ்வாறு இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு நிம்மதியாக வாழ முடியாது. காரண காரிய அறிவால் ஆராய்ந்து அனைத்து நிகழ்வுகளுக்கும் முழுமுதற்காரணம் என்ன என்று தெரிந்து கொள்ளும் துடிப்பு அவர்களிடம் அடங்குவதேயில்லை.

முப்பத்தெட்டு வயதில் எவ்வித கெட்டபழக்கங்களுமில்லாத ஆரோக்கியமான குடும்பத்தலைவன் ஒருவன் காலை உடற்பயிற்சி செய்யும்பொழுது மரணமடைந்தால் ஏன் எப்படி என்ற கேள்விகள் அனைவரையும் ஆட்டுவிக்கும். மருத்துவர் பரிசோதித்து மாரடைப்பால் மரணம் ஏற்பட்டது என்று கூறினாலும் ஏன் மாரடைப்பு ஏற்பட்டது என்ற கேள்வி தொடர்கிறது. இந்த தொடர்கேள்விகளுக்கு விதியென்றோ, கர்ம பலன் என்றோ, ஆண்டவன் கட்டளையென்றோ ஏதாவது ஒரு மதச்சார்புடைய விளக்கம் மட்டும்தான் இறுதி பதிலாக இருக்க முடியும். இவற்றிலெல்லாம் நம்பிக்கையில்லாமல் அவன் தினமும் உணவில் நெய் சேர்த்து கொண்டதாலேயே மரணமடைந்தான், எனவே நாம் இனிமேல் நெய் சாப்பிடகூடாது என்று முடிவெடுப்பது அறிவீனம்.

படைத்தவன் யார்?

கடவுள் மனிதனை படைத்தானா அல்லது மனிதன் கடவுளை படைத்தானா என்ற கேள்விக்கு சரியான பதில் தெரியவேண்டுமென்றால் முதலில் கடவுள் இருக்கிறான் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். கடவுளை இல்லை என்று மறுத்துவிட்டால் வாழ்வின் நிகழ்வுகளுக்கு முடிவான காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பை நாம் இழந்து விடுவோம்.

ஒரு கூடைக்குள் இருக்கும் மொத்த மாம்பழங்களில் பாதியை முதல் மகனுக்கும் மீதியில் பாதியை இரண்டாம் மகனுக்கும் கொடுத்து விட்ட பிறகு மீதி இருப்பது பத்து மாம்பழங்கள் என்றால் மொத்தம் இருந்தது எத்தனை என்பது போன்ற கணக்குகளுக்கு எளிதாக விடை கண்டுபிடிக்க மொத்த மாம்பழங்களின் எண்ணிக்கையை X என்று வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் சொல்லி கொடுக்க ஆரம்பிக்கும்பொழுது அது எப்படி X ஆக இருக்க முடியும் என்ற குறுக்கு கேள்விகளை கேட்டால் கணித அறிவை பெற முடியாது. X என்பது உண்மையில் இல்லாமல் இருந்தாலும் அது கொடுக்கப்பட்ட கேள்விக்கு பதிலை பெற உதவுகிறது. 'மொத்த மாம்பழங்களின் எண்ணிக்கை = X' என்று ஆசிரியர் கரும்பலகையில் எழுத ஆரம்பித்ததும் X என்பது ஒரு எண் அல்ல, இல்லாத எண்ணை இருப்பதாக நான் நம்பமாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பது போல்தான் இறைவன் இல்லை என்பதும்.

கண்ணுக்கு தெரியாத பரமனை நமக்கு அறிவிக்க புலன்களால் அறியக்கூடிய உலகத்தை படைத்தவன் ஆண்டவன் என்று வேதம் நமக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கிறது. கடவுளை மறுத்துவிட்டால் நம்மால் தொடர்ந்து பாடங்களை படிக்க முடியாது.

கணித கேள்விக்கு பதில் கண்டுபிடிக்க Xன் உதவி அவசியமாயிருப்பது போல வாழ்க்கையின் புதிர்களை விடுவிக்க கடவுள் அவசியம். இதை அறியாதவர்கள் கடவுளை ஒரு புரியாத புதிர் என்று எண்ணி கடவுளே இல்லை என பிரகடனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் கடவுள் மறுப்பு கொள்கையால் பாதிக்கப்படுவது இவர்கள் மட்டுமே. படைத்தவன் யார் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களாலேயே என்றும் குறையாத இன்பத்தை பெற முடியும்.

முடிவுரை :

இறைவன் இருக்கின்றானா இல்லையா என்பதை முறையாக ஆராய்ந்து முடிவு செய்யாமல் இல்லை என்று கூறுவது தவறு. இறைவன் இருக்கிறான் என்பதை எப்படி அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியாதோ அதே போல் இறைவன் இல்லை என்பதையும் அறிவியலால் நிரூபிக்க முடியாது. நீருபணம் இல்லாமல் கடவுள் நம்பிக்கையின்மை என்ற கொள்கையை பின்பற்றுவது தவறு.

கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் அவர் யார், எங்கிருக்கிறார் என்ற கேள்விகளை கேட்பதில் தவறு இல்லை. முறையாகவும் தொடர்ச்சியாகவும் இறைவனை பற்றி ஆராய்ந்தால் அவர் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு தெளிவான பதில் நமக்கு கிடைக்கும்.

பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஓவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. வேதத்திற்கு மாறாக இன்றைய வழக்கில் இருந்து வரும் மற்ற கருத்துக்களும் மதங்களும் ஏன் தவறானவை என்று அவற்றில் உள்ள குறைபாடுகளையும் முரண்பாடுகளையும் சுட்டிக்காட்டியபின் வேதம் மட்டுமே முறையான விளக்கத்தை கொடுத்து முக்தியை தரவல்லது என்ற நிரூபணத்துடன் இரண்டாம் அத்தியாயத்தின் இந்த இரண்டாம் பகுதி இவ்வளவில் முற்று பெறுகிறது.

பயிற்சிக்காக :

1. கடவுளை நம்புவதற்கும் நம்பாமல் இருப்பதற்கும் என்ன வித்தியாசம்?

2. கடவுள் நம்பிக்கையின்மை ஏன் தவறானது?

சுயசிந்தனைக்காக :

1. கடவுள் நம்பிக்கையில்லாமல் இருப்பவர்களால் குறையாத இன்பம் என்ற குறிக்கோளை அடைய முடியுமா?

Monday, May 10, 2010

பாடம் 059: அறிய முடியாதென்பது தவறு (பிரம்ம சூத்திரம் 2.2.37-41)

பல்வேறு மதங்களின் தத்துவுங்களை பயின்றோ அறிவியலின் துணையுடனோ கடவுள் யார், இவ்வுலகம் எவ்வாறு உருவானது என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலை தெரிந்து கொள்ளும் முயற்சியில் பலர் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மைகள் மனித மனதின் அறியும் சக்திக்கு அப்பாற்பட்டது என்ற தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி என்ற தனிமனிதரின் கருத்தை அடிப்படையாக கொண்டு 'உண்மை அறியமுடியாதது' (Agnosticism) என்ற ஒரு கொள்கை பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மக்களிடையே பிரபலமாக ஆரம்பித்தது.

அறிவியல் ஆதாரமற்ற எதையும் மறுப்பது, மதங்களின் முடிவுகளை சந்தேகிப்பது, எதிலும் நம்பிக்கை கொள்ளாமல் பிரபஞ்சத்தின் இரகசியங்களை 'யாராலும் தெரிந்து கொள்ள முடியாது' என்ற கொள்கையை பின்பற்றும் அறிய முடியாதென்போரின் (Agnostics) எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. அறிவியலின் ஆதிக்கம் அதிகமாக அதிகமாக மதங்களின் தத்துவங்களை நம்பிக்கையின் பெயரில் ஏற்றுக்கொள்வதென்பது குறைந்து கொண்டு வருகிறது. சிறுவயதிலிருந்து பெற்றோரின் வழிபாட்டு முறைகளை பின்பற்றினாலும் கல்வியறிவும் சுயமாக சிந்திக்கும் சக்தியும் அதிகரித்த பின் மத தத்துவங்களில் உள்ள முரண்பாடுகளை காரணம் காட்டி இளைஞர்கள் பலர் அறியமுடியாதென்போர் (Agnostics) பட்டியலில் சேர்ந்து வருகிறார்கள்.

இவர்களின் கொள்கை தவறு என்பதை இந்த பாடம் விளக்குகிறது.

பரமன் வாக்குக்கும் மனதுக்கும் அப்பாற்பட்டவன் என்ற வேதத்தின் கூற்றையும், ஒன்றுமேயில்லை என்ற புத்தமதத்தின் கொள்கையையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் தவறாக மேற்கோள் காட்டி கிருத்துவமதம், இஸ்லாமிய மதம் போன்றவை சித்தரிக்கும் கடவுளை மறுப்பது தவறு. மதங்களையும் மறுப்பதால் மதங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படபோவதில்லை. சர்வ வல்லமை பொருந்திய கடவுளை கிருத்துவமதமும் உருவமற்ற பரமனை இஸ்லாமிய மதமும் மிக சரியாக விளக்குவதை புரிந்துகொள்ள முயலாமல் எல்லாவற்றையும் மறுப்பதால் நஷ்டமடைவது மறுப்பவர்கள் மட்டுமே.

நம்பிக்கை என்பது அறிவின் முதல் படி. ஆசிரியர் மீதும் அவர் சொல்லித்தரும் பாடங்கள் மீதும் ஆரம்பத்தில் நம்பிக்கை இருந்தால் மட்டுமே முடிவில் அந்த நம்பிக்கை அறிவாக மலரும். வகுப்பின் கடைசி வரிசையில் அமர்ந்து கொண்டு ஆசிரியரை கிண்டல் செய்து காலத்தை கழிக்கும் பணக்கார மாணவர்கள் தங்கள் அரைகுறை அறிவையும் செல்வாக்கையும் பயன்படுத்தி படிப்பு என்பதே அனாவசியம் என்ற மனோபாவத்தை அனைவரிடமும் ஏற்படுத்த முனைவது போல எந்த ஒரு மதத்தின் தத்துவத்தையும் முழுமையாக கற்றுத்தேறாமல் அனைத்தையும் நிராகரிப்பது அவர்களுக்கும் அவர்களை பின்பற்றுபவர்களுக்கும் பேரிழைப்பை ஏற்படுத்தும்.

பொருளாதாரம் மற்றும் அறிவியல் வளர்ச்சி ஆகியவை மனிதனுக்கு குறையாத இன்பத்தையும் தடையில்லாத நிம்மதியையும் தர முடியாது என்ற நிலையில் மதங்களின் துணையையும் இழப்பதால் 'அறியமுடியாது' என்ற கொள்கையை பின்பற்றுவோர்களுக்கு விடிவுகாலமே கிடையாது.

அறியமுடியாதென்பது ஏன் தவறு என்பதை பின்வரும் காரணங்கள் விளக்குகின்றன.

1. அறிய முடியாதென்பது ஒரு மூடநம்பிக்கை: அறிய முடியாது என்று இவர்கள் கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எனக்கு புரியாவிட்டால் யாருக்கும் புரியாது என்பது முட்டாள்தனத்தின் எல்லை. யாராலும் அறிய முடியாது என்ற கொள்கையை முன் வைக்க முறையான ஆராய்ச்சி அவசியம். அதை விடுத்து ஒரு துறையைப்பற்றி எதையும் தெரிந்து கொள்ளாமல் அதை மறுப்பது அறிவியல் அறிவுக்கு பொருந்தாத செயல்.

2. அறிய முடியாதென்பது தவறான முடிவு: அறிவு என்பது யாது, அறிவை பெறும் கருவிகள் யாவை, அவற்றை பயன்படுத்தி தாமாக அறிவை பெற முடியுமா அல்லது ஆசிரியரின் தேவை உள்ளதா என்பது போன்ற அனைத்து கேள்விகளையும் முறையாக ஆராய்ந்து அந்த ஆராய்ச்சியின் விளைவாக அறிய முடியாது என்று கூறாமால் எந்த முயற்சியும் எடுக்காமல் அறியமுடியாது என்று முடிவுகட்டுவது தவறான முடிவு.


வேதம் கூறும் மனதுக்கும் வாக்குக்கும் எட்டாதவன் என்ற தத்துவத்தை முறையாக கற்று தேர்ந்தால் அறிய முடியாததை அறிய முடியாது என்று அறிவது அதை அறிந்து கொள்வதற்கு ஒப்பாகும் என்பது விளங்கும். முறையான கல்வியின் துணையில்லாமல் அறியமுடியாது என்று கூறுவது தவறு.

3. அறிய முடியாதென்பது அறிவுக்கு எதிர்பதம்: அறியவே முடியாது என்பதை உண்மையில் நாம் ஒப்புக்கொண்டால் அந்த நிமிடம் முதல் நமது தேடல் முழுவதுமாக நிற்க வேண்டும். தங்களை அறியமுடியாதோர் பட்டியலில் இணைத்துக்கொண்டு அதேநேரத்தில் என்னால் முடிந்த அளவு அறிந்து கொள்ள முயற்சிப்பேன் என்பது ‘இங்கு புதையல் எதுவும் இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஆனாலும் என்னால் முடிந்த அளவு தோண்டி ஏதாவது கிடைக்கிறதா என்று பார்ப்பதில் எவ்வித தவறுமில்லை’ என்று சொல்வதற்கு சமம்.

4. அறிய முடியாதென்பது அஸ்திவாரம் இல்லாத கட்டிடம்: கிருத்துவ மதம் ஏசுநாதர் காட்டிய வழியிலும் இஸ்லாமிய மதம் குரானை பின்பற்றியும் வளர்ந்து வருகின்றன. அறியமுடியாதென்போருக்கு இது போல எவ்வித ஆதாரமுமில்லை. தன்னுடைய சொந்த கருத்தை வெளியிட ஹக்ஸ்லி உருவாக்கிய ஒரு சொல்லுக்கு 'கொள்கை' என்ற பெயரிட்டு அதை பின்பற்ற முயல்வது அஸ்திவாரம் இல்லாமல் பல மாடி கட்டிடம் கட்ட முனைவதற்கு ஈடாகும்.

5. மேலும், மதங்கள் கூறிய கருத்துக்களை முற்றிலும் உணர்ந்து கொண்டு 'முற்றுணர்ந்தோன்' என்ற நிலையில் இருக்கும் பல்வேறு ஞானிகளும் அவதாரங்களும் அறியமுடியாது என்ற கொள்கை தவறு என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெள்ளத் தெளிவாக காண்பிக்கின்றனர்.

தேறியவர்கள் பலர் இருக்கும்பொழுது, தேர்வில் தோற்றவர்கள் தேர்வில் கேட்ட கேள்விகளுக்கு விடைகளே இல்லை என்று கூறுவது எப்படி தவறோ அதுபோலவே அறியமுடியாதோர் என்பவர்களின் கொள்கையும் தவறு.

முடிவுரை :

வேதியியல் பாடங்கள் தவறாக புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை ஒரு வேதியியல் வல்லுனரால் மட்டுமே சுட்டிக்காட்ட முடியும். வேதியியல் பற்றிய அரைகுறை ஞானம் உள்ள ஒருவருக்கு இத்தகைய மறுப்பு அறிக்கையை முன்மொழிய எவ்வித தகுதியுமில்லை. அதே போல் மத தத்துவங்களை முறையாக ஒரு ஆசிரியரின் துணையுடன் முழுவதும் கற்ற பின்னரே அதை பற்றி அபிப்பிராயம் கூற ஒருவருக்கு அருகதை ஏற்படும். மதங்கள் கூறும் தத்துவங்களை மேலெழுந்தவாரியாக படித்துவிட்டு தவறாக அர்த்தம் செய்து கொண்டு பிரபஞ்சம் உருவானது எப்படி என்பதை யாராலுமே எப்பொழுதுமே தெரிந்து கொள்ள முடியாது என்று கூறுவது முற்றிலும் தவறு.

பயிற்சிக்காக :

1. அறியமுடியாதென்பவர்களின் கொள்கை என்ன?

2. அவர்களின் கொள்கை தவறு என்பதற்கு கூறப்பட்ட காரணங்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. அறியமுடியாது என்று சரியாக கற்று தேர்ந்தால் வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்களை ஏன் என்று கேள்வி கேட்காமல் சமபுத்தியுடன் ஏற்றுக்கொள்வது சாத்தியம்.‐ இது சரியா?