Thursday, February 25, 2010

பாடம் 021: அழியாதவன் பரமன் (பிரம்ம சூத்திரம் 1.3.10-12)

தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் இந்த உலகம் தோற்றம்-மறைவு என்ற காலக்கட்டுப்பாட்டுக்குட்பட்டது. 'உலகம் பரமன்' என்ற விளக்கம் பரமனும் அழிவுக்குட்பட்டவன் என்ற தவறான கருத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக வேதம், 'அழியாதவன் பரமன்' என்ற விளக்கத்தை தருகிறது.

எல்லாம் எப்பொழுதும் மாற்றமடைந்து கொண்டிருந்தாலும் எதோ ஒரு நிலையான உலகம் இருப்பது போல நமக்கு ஏற்படும் தோற்றத்திலிருந்து நாம் பரமனின் மாயாசக்தியை தெரிந்து கொள்ளலாம். நமது உடல் மனம் மற்றும் நாம் காணும் பொருள்களனைத்தும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. அனைத்தும் ஒன்றிலிருந்து ஒன்றாக தோன்றி பின் மறைந்து மற்றொன்றாக உருமாறிக்கொண்டிருக்கின்றன. இந்த மாறும் உலகம் ஒரு நாள் முற்றிலும் அழிந்து விடும். அறிவியலும் இந்த உண்மையை நமக்கு அறிவிக்கிறது.

ஒரு பாடகன் பாடுவதை நிறுத்திவிட்டால் எப்படி பாடல் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறதோ அதே போல பரமனின் மாயா சக்தி ஒடுக்க நிலையை அடைந்து விட்டால் நாம் வாழும் இந்த பேரண்டம் முழுவதும் அழிந்து விடும். பாடகனால் எப்படி எப்பொழுது வேண்டுமானாலும் மறுபடியும் பாட்டைத் துவங்க முடியுமோ அதே போல மறுபடியும் இந்த உலகத்தை தோற்றுவிக்க பரமன் எந்த வித முயற்சியும் எடுக்க வேண்டிய அவசியமில்லை.

மேடையில் பாடகன் பாடுவது பாடலை கேட்பவர்களின் விருப்பத்திற்கேற்றபடி தொடரும் அல்லது முடியும். அனைத்து உயிரினங்களின் பாப புண்ணியத்திற்கேற்றவாறு அமையும் இந்த உலகம் அவர்களின் ஒட்டு மொத்த நிலைக்கேற்ப ஒரு முடிவுக்கும் வரும்.

அழியும் உலகமும் அழியா பரமனும்

ஒரு பெரிய விளையாட்டுத்திடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தின் நிழல் காலை முதல் மாலை வரை மாறிக்கொண்டேயிருக்கும். காலையில் பெரியதாகத் தெரியும் நிழல் தொடர்ந்து சிறியதாக மாறி உச்சிப்பொழுதில் முற்றிலும் இல்லாமல் போய்விடுகிறது. பிறகு அது மறுபடியும் தோன்றி மாலையில் வளர்ந்து பின் இரவில் மறைகிறது. நிழலின் இந்த தொடர்ந்த மாற்றங்களும் தோற்றமும் மறைவும் கொடிக்கம்பத்தை எந்த விதத்திலும் பாதிப்பது இல்லை. கொடிக்கம்பத்தின் உயரம் கூடுவதோ குறைவதோ இல்லை. ஆனாலும் நிழலின் நீளத்தில் தொடர்ந்து மாற்றம் காணப்படுகிறது. நிழல் முற்றிலும் இல்லாமல் போனாலும் கொடிக்கம்பம் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.

அதே போல பரமன் என்றும் மாறாதவன். அழியாதவன். உலகம் கொடிக்கம்பத்தின் நிழல் போல தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும்.

நிழலும் நிஜமும்

நிழலின் இருப்புக்கும் மாற்றத்திற்கும் காரணம் நிஜமாக இருக்கும் கொடிக்கம்பமும் சூரிய ஒளியும். அதுபோல உண்மையில் இருக்கும் பரமனின் வடிவாக இந்த உலகத்தை மாயாசக்தி உருவாக்குகிறது. சூரிய ஒளி நிஜமான கொடிக்கம்பத்தின் சாயலில் தற்காலிகமாக ஒரு நிழலை உருவாக்குவது போல இந்த இருத்தல் என்ற பரமனின் இயல்பை தற்காலிகமாக உபயோகித்து மாயை இந்த உலகம் இருப்பதாக காண்பிக்கிறது.

முடிவுரை :

பரமன் அழிவில்லாதவன். பரமனின் மாயாசக்தி இவ்வுலகத்தை இருப்பது போல சிலகாலம் காண்பித்து பின் அதை ஒடுக்கிவிடுகிறது. இந்த மாற்றங்கள் அனைத்திற்கும் பரமன் வெறும் சாட்சியாக மட்டும் இருக்கிறான். அவற்றால் பரமனுக்கு எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை.

பயிற்சிக்காக :

1. இந்த உலகத்தின் தோற்றத்திற்கும் மறைவுக்கும் காரணமாக இருப்பது யார்?

2. பரமனிடம் மாயா சக்தி இருப்பதை நாம் எவ்வாறு அறிந்து கொள்ளலாம்?


சுயசிந்தனைக்காக



1. மாயா சக்தியின் செயல்களை பரமனின் செயல் என்று ஏன் சொல்ல முடியாது?

Tuesday, February 23, 2010

பாடம் 020: உலகம் பரமன் (பிரம்ம சூத்திரம் 1.3.8-9)

பரமன்தான் இந்த உலகமாக தோற்றமளிக்கிறான் எனில் ஏன் இந்த உலகம் இன்ப துன்பங்களின் கலவையாக இருக்கிறது? உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி வறுமைக் கொடுமையால் வதைக்கப்படும் மக்கள் ஒரு பக்கம், போர், உள்நாட்டு கலவரம், பயங்கரவாதிகளின் தாக்குதல் போன்ற சமூக தீவினைகளால் வாடும் மக்கள் மறுபக்கம் என்று ஒரு நரகமாக இருக்கும் உலகத்திற்கு பதிலாக எங்கும் செழுமையும் அமைதியும் தவழும் ஒரு சொர்க்கலோகமாக இவ்வுலகத்தை ஏன் இறைவன் படைக்கவில்லை?

பசுமை புரட்சி, தொழில் துறையில் வியக்கத்தகு முன்னேற்றம் மற்றும் மருத்துவத்துறையில் நம்ப முடியாத சாதனைகள் என்று மனிதன் பல்வேறு முயற்சிகள் செய்தும் உலகம் தொடர்ந்து வறுமை, நோய், கல்வியின்மை என்ற கொடுமைகளின் பிடியிலிருந்து தப்ப முடியவில்லை. மக்கள் நலம் விரும்பி, உறுதியுடனும் திறமையுடனும் செயல்பட்ட பல அரசியல் தலைவர்களின், 'புதியதோர் உலகம் செய்வோம்' என்ற கனவு கனவாகவே தொடர்கிறது. இவ்வுலகத்திலிருந்து வன்முறையையும் வறுமையையும் அகற்ற முடியாது என்பது ஆண்டவன் கட்டளையா?

உலகத்தின் இந்த நிலைமைக்கு மனிதன் மட்டும்தான் காரணம். இறைவன் குற்றமற்ற நிரபராதி என்று வேதம் கூறுகிறது. பரமன் இந்த உலகமாக தோன்றுவதில் இறைவனுக்கும் மனிதனுக்கும் தனித்தனி பங்குகள் உள்ளன. இவற்றை வேதம் விரிவாக விளக்குகிறது.

படைப்பில் மனிதனின் பங்கும் இறைவனின் பங்கும்

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் புரியும் இறைவன், இந்த படைப்புக்கு அறிவுக்காரணமாகவும் (Intelligent cause) பொருட்காரணமாகவும் (Material cause) இருக்கிறான். இந்த உலகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை மனிதன் தன் செயல்கள் மூலமும் விருப்பத்திற்கிணங்கவும் தீர்மானிக்கிறான். இறைவன் இந்த உலகத்தை தன் விருப்பபடி மாற்றியமைக்க சக்தியற்றவன்.

மனிதனுக்கும் இறைவனுக்கும் இருக்கும் இந்த உறவை ஒரு வீடு கட்டும் சொந்தக்காரருக்கும் ஒப்பந்தக்காரருக்கும் உள்ள உறவுடன் ஒப்பிட்டு புரிந்து கொள்ளலாம்.

இறைவன் ஒரு ஒப்பந்தக்காரர்(Contractor).

ஒரு வீட்டை கட்டும் அறிவுத்திறனும் செயல்பாட்டுத்திறனும் எல்லோருக்கும் இருப்பதில்லை. வீடு கட்டுவதில் பல வருட அனுபவம் பெற்று, வீடு கட்ட தேவைப்படும் பொருள்களின் அறிவும், வரைபடத்தில் காட்டப்பட்ட வீட்டை உண்மையில் நிர்மாணிக்கும் திறமையும் ஒரு சிலருக்கே இருக்கும். இவர்கள் மற்றவர்களுக்காக வீடு கட்டித்தரும் ஒப்பந்தக்காரர்களாவார்கள். கடவுள் இந்த உலகை நிர்மாணிக்கும் திறன் கொண்ட ஒரு ஒப்பந்தகாரர்.

வீடு கட்டித்தரும் ஒப்பந்தக்காரர் தான்தோன்றித்தனமாக ஒரு வீட்டை கட்டுவதில்லை. ஒரு வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையோ அதற்கு வேண்டிய பணமோ அவரிடம் இருக்க வேண்டிய அவசியமில்லை. சொந்தமாக வீடு வேண்டும் என்று விரும்புபவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வது மட்டுமே அவரது தொழில். அதே போல இந்த உலகத்தை படைக்க வேண்டும் என்றோ அழிக்க வேண்டும் என்றோ கடவுளுக்கு எப்பொழுதும் விருப்பம் ஏற்படுவது கிடையாது. எந்த மாதிரி வடிவமைப்பில் உலகம் அமைய வேண்டும் என்ற வரைபடமும் கடவுளால் நிர்ணயம் செய்யப்படுவதில்லை. இவ்விரண்டு வேலைகளும் மனிதனின் பங்கு.

மனிதன் வீட்டுச்சொந்தக்காரன் (Owner).

மனிதன் தான் செய்யும் நன்மை தீமைகளின் பலனை அனுபவித்தே தீரவேண்டும். மனிதனாகப்பிறப்பதற்கே அவன் புண்ணியம் செய்திருக்க வேண்டும். வீடு கட்ட வேண்டிய பணம் இந்த புண்ணியமாகும். உயிரினங்கள் எண்ணிலடங்கா பிறவிகள்தோறும் சேர்த்து வைத்த பாவபுண்ணியங்களின் விளைவே இந்த உலகத்தின் நிலமைக்கு காரணமாகும். எல்லோரும் எப்பொழுதும் அமைதியான சூழ்நிலையைத்தான் விரும்புவார்கள். ஆனால் அதற்கு தேவையான அளவு புண்ணியம் செய்யாதபொழுது இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றாதது கடவுளின் குற்றமில்லை. வீட்டுக்குள் ஒரு நீச்சல் குளம் வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் முன்வைத்து அதற்குத்தேவையான பணத்தை கொடுக்காமல் 'என் விருப்பத்திற்கேற்றாற்போல் அமையவில்லை' என்று ஒப்பந்தக் காரரை குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம்?

ஒவ்வொரு மனிதனின் விருப்பதிற்கும் சக்திக்கும் (பாவ புண்ணியங்கள்) ஏற்றவிதத்தில் கடவுள் இந்த உலகத்தை மிகச்சரியாக உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு உயிரினமும் அதன் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்றாற்போல எந்த சூழ்நிலையில் வளர வேண்டும் என்ற அதன் சொந்த விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்றும் விதத்தில் இந்த உலகம் கடவுளால் அமைக்கப்பட்டுள்ளது.

ஆக்கலும் அழித்தலும்

மொத்த உயிரினங்களின் கூட்டு தொகையான பாவபுண்ணியங்கள் ஒரு முடிவுக்கு வரும்பொழுது இந்த உலகம் கடவுளால் அழிக்கப்படுகிறது. எப்பொழுது மறுபடியும் அவை பருவமடைகிறதோ அப்பொழுது கடவுள் மீண்டும் உலகத்தை தோற்றுவிக்கிறார். சொல்வதை சரியாக செய்யும் ஒரு பணியாளை நாம் எப்படி குறை சொல்ல முடியாதோ அது போல தன் தொழிலை மிகச்சரியாக செய்யும் கடவுளை நாம் இந்த உலகத்தின் நிலமைக்கு காரணம் என்று கூறமுடியாது.

முடிவுரை :

நமது பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்து உறவினர்கள், நம் நண்பர்கள், சகத்தொழிலார்கள் மற்றும் நாம் நம் வாழ்வில் சந்திக்கும் அனைத்து சந்தர்ப்பங்கள், எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலைகள் இவையாவும் நமது விருப்பபடியும் நமது முன்வினைப்பலனாகவும்தான் அமைகின்றன. நமது பாவங்களுக்கு சரியான தண்டனையாக நமக்கு கஷ்ட நஷ்டங்களை ஏற்படுத்துவது கடவுளே. ஒரு சிலருக்கு செல்வத்தையும் மற்றவருக்கு ஏழ்மையையும் அவரவர் செயல்களுக்கேற்றவாரு வழங்குவதும் கடவுளே. பாவ புண்ணியங்களுக்கு சரியான பலனளித்தல் என்ற தனது ஒரு முக்கியமான வேலையை கடவுள் மிகச்சரியாக செய்கிறார். எனவே இன்பமும் துன்பமும் கலந்த இந்த உலகின் நிலைக்கு கடவுளை பொறுப்பாளியென்று நினைப்பது அறிவீனம்.

நாம் நமது செயல்களின் சரியான பலனை அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். நமது நிலைமை இப்பொழுது இருப்பதைவிட இன்னும் சிறப்பாக அமைவது நமது கையில்தான் இருக்கிறது. நம்மால் நமது சொந்த வாழ்க்கையின் தரத்தைதான் நிர்ணயிக்க முடியுமே தவிர உலகம் முழுவதையும் சீரமைக்க முடியாது. உலகம் என்பது பல்வேறு மனிதர்களின் வேறுபட்ட அனுபவத்திற்காக ஏற்படுத்தபட்ட ஒரு இடம். அவரவர்களின் சுயமுயற்சியால் மட்டுமே அவர்களால் தங்கள் வாழ்க்கையின் தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும்.

தனி மனிதர்களின் சுயநலபோக்கினாலும் வல்லரசுகளின் ஆதிக்க கொள்கையாலும் இந்த உலகத்தை பீடித்திருக்கும் ஏழ்மை, வன்முறை போன்ற கொடுமைகளை முற்றிலும் நம்மால் மாற்ற முடிந்தாலும் நிலநடுக்கம், வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கை கருவிகளின் மூலம் எப்படியாவது அனைத்து உயிரினங்களின் அனுபவத்திற்கு ஏற்றவாறு இந்த உலகத்தை மாற்றிவிடுவது இறைவனின் கடமை.

எனவே இன்பமும் துன்பமும் கலந்து இருக்கும் இந்த உலகம் பரமனின் இயல்பான தோற்றம்தான் என்று நாம் உணர வேண்டும்.

பயிற்சிக்காக :

1. இந்த உலகத்தை வடிவமைப்பதில் கடவுளின் பங்கு என்ன? மனிதனின் பங்கு என்ன?

2. என்றேனும் ஒரு நாள் இந்த உலகம் முழுதும் உள்ள மக்கள் இன்பமாக வாழும் சூழல் ஏற்படுமா?

3. மக்கள் வறுமை மற்றும் வன்முறையால் வாட காரணம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. உலகத்தை நிர்மாணிப்பதில் இறைவனுக்கு அனுபவம் உள்ளதா?

2. ஒரு சமூக நலம் விரும்பும் தொண்டு நிறுவனம் மக்களின் ஏழ்மையை மாற்ற முடியுமா?

3. தருமத்திற்கு சோதனை ஏற்படும்பொழுதெல்லாம் அவதரிக்கும் இறைவன், உலகம் முழுவதிலும் தர்மம் நிலை நாட்டப்பட்டால், அதர்மத்திற்கு துணையாக அவதரிப்பானா?

பாடம் 019: விண்ணும் மண்ணும் பரமன் (பிரம்ம சூத்திரம் 1.3.1-7)

பரமனின் மாயா சக்தியின் வெளிப்பாடுதான் இந்த உலகம். ஒளி, சக்தி மற்றும் ஜடம் என்ற மூன்று தனிமங்களின் (elements) கூட்டுப்பொருளான மாயை இந்த பேரண்டத்தின் ஆதாரம் என்பதை விண்ணும் மண்ணும் பரமன் என வேதம் விளக்குகிறது.

பெண்களின் கூந்தல் எப்படி மூன்றாக பிரிக்கப்பட்டு பின் ஒரே பின்னல்லாக பின்னப்படுகிறதோ அதே போல பரமனிடமிருந்து வெளிப்படும் ஒன்றான மாயா சக்தி ஒளி, சக்தி மற்றும் ஜடம் ஆகிய மூன்றின் சேர்மமாக (compound) இயங்குகிறது.இந்த மூன்று தனிமங்களுக்கு தனித்திருக்கும் திறன் இல்லை. இத்தனிமங்களை வெவ்வேறு விகிதங்களில் (ratio) கலப்பதினால் கிடைக்கும் மூன்று வகைபட்ட கலவைகள் இந்த அண்டத்தை வியாபிக்கின்றன.

1. ஜடம் ஓங்கிய சேர்மம் (Matter dominant compound)

கல், மண் போன்ற அனைத்து அஃறிணை பொருள்களும் இந்த வகையை சேர்ந்தவை. இவற்றில் சக்தியும் ஒளியும் மிகக்குறைந்த அளவில் கலந்து இருப்பதால் இவை ஜடப்பொருள்களாக இருக்கின்றன. 'உணர்வு', 'ஆனந்தம்' மற்றும் 'இருத்தல்' ஆகிய மூன்றின் உருவாக இருக்கும் பரமனின் 'இருத்தல்' என்ற இயல்பை மட்டும் இந்த ஜடப்பொருள்கள் பிரதிபலிக்கின்றன.

சக்தியும் ஜடமும் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறலாம் என்ற அறிவியல் கோட்பாட்டின் படி நட்சத்திரங்கள் தம்மிடமுள்ள ஜடப்பொருளை தொடர்ந்து சக்தியாக மாற்றி செயல் படுவதுபோல் தோற்றமளிக்கின்றன. அதே போல் நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் வெளி என்ற ஐந்து அடிப்படை பொருள்களும் உணர்வின்றி செயல் படுகின்றன.

2. சக்தி ஓங்கிய சேர்மம் (Energy dominant compound)

மனிதனை தவிர அனைத்து உயிரினங்களும் இந்த வகையை சேர்ந்தவை. இவற்றின் உடல்கள் ஜடப்பொருளாயிருந்தாலும் மனம் என்ற சக்தி ஓங்கிய சேர்மம், இவற்றை உயிரற்ற ஜடப்பொருள்களிலிருந்து வேறுபடுத்துகிறது. இவை செயல் பட காரணமாயிருப்பது சக்தி என்கிற தனிமம். 'உணர்வு', 'ஆனந்தம்' மற்றும் 'இருத்தல்' ஆகிய மூன்றின் உருவாக இருக்கும் பரமனின் 'இருத்தல்' மற்றும் 'உணர்வு' ஆகிய இரண்டு இயல்புகளை இந்த உயிரினங்கள் பிரதிபலிக்கின்றன.

உயிரினங்கள் யாவையும் அஃறிணை பொருள்களோடு ஒப்பிடும்போது அதிக அளவில் சக்தியை பெற்றிருப்பினும் சக்தியின் அளவு உயிரினங்களுக்குள் மாறுபடுகிறது. உதாரணமாக தாவரங்களில் உள்ள சக்தியின் அளவு மிருகங்களை ஒப்பிடும்போது குறைவு. இது போல ஒவ்வொரு உயிரின வகைகளும் சக்தியின் அளவுக்கேற்றாற்போல ஒன்றுக்கொன்று மாறுபடுகின்றன.

3. ஒளி ஓங்கிய சேர்மம் (Aura dominant compound)

மனிதன் மற்ற உயிரினங்களிலிருந்து வேறு படுவதற்கு முக்கிய காரணம் அவன் ஒளி மேலோங்கிய சேர்மமாக இருப்பதால்தான். கல் மண் போன்ற அஃறிணை பொருள்களுக்கு உணர்வு கிடையாது. எல்லா உயிரினங்களுக்கும் உணர்வு உண்டு. ஆனால் மனிதனுக்கு மட்டும்தான் தன்னுணர்வு உள்ளது. அதனாலேயே மனிதன் மற்ற விலங்குகளை போலன்றி எப்பொழுதும் ஆனந்தமாக இருக்க பல முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறான். என்றும் இன்பமாக இருக்க வேண்டும் என்பது எல்லா உயிரினங்களின் விருப்பமாக இருந்தாலும் அந்த விருப்பதை செயலாக்கும் திறன் படைத்தவன் மனிதன் மட்டுமே.

மனிதனின் உடல் ஜடம் ஓங்கிய சேர்மமே. ஆனால் அவனுக்கு ஒளி ஓங்கிய மனதின் துணையிருப்பதால் பரமனின் 'இருத்தல்', 'உணர்வு' மற்றும் 'ஆனந்தம்' ஆகிய மூன்று தன்மைகளையும் ஒரு சேர பிரதிபலிக்கும் சக்தியுள்ளது.

ஒளி ஓங்கிய சேர்மம் எல்லா மனிதர்களுக்கும் பொதுவாக இருந்தாலும் தனிமங்களின் அளவு மனிதருக்கு மனிதர் பெரிதும் வேறுபடுகிறது. ஜடத்தனிமம் அதிகமாகவுள்ள மனிதர்கள் சோம்பலாகவும் சக்தி தனிமம் அதிக அளவில் உள்ளவர்கள் சுறுசுறுப்பாக எப்பொழுதும் ஏதேனும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டும் இருப்பார்கள். ஒளித்தனிமம் அதிகமுள்ள மனிதர்கள் பரமனை அறிந்து கொள்ளும் செயல்களில் ஈடுபட்டு தான் பரமன் என்ற பரம ரகசியத்தை அறிந்து எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

முடிவுரை :

ஒளி, சக்தி மற்றும் ஜடம் ஆகிய மூன்று தனிமங்களின் கூட்டுப்பொருளான பரமனின் மாயை இந்த அண்டத்தின் பல்வேறு பொருள்களாக தோற்றமளிக்கிறது. ஒளி அதிக அளவில் இருக்கும் ஒரு சில மனிதர்கள் பரமனாகவே செயல்படுவார்கள். இவர்கள் பரமனின் முற்றிலுமான வெளிப்பாடுகள். தன்னுணர்வுள்ள அனைத்து மக்களும் இந்த உண்மையை அறிய தகுதி வாய்ந்தவர்களென்றாலும், பெரும்பாலோர் சக்தி தனிமத்தின் தூண்டுதலால் பணம் பதவி போன்ற உலக சுகங்களை தேடுவதில் தங்கள் முழு முயற்சி மற்றும் நேரத்தை செலவிட்டுக்கொண்டு இருப்பார்கள். ஆயினும் எப்பொழுதெல்லாம் அவர்கள் தன்னை மறந்து ஆனந்தமாக இருக்கிறார்களோ அந்த கணங்களில் அவர்கள் பரமனை முழுதாக பிரதிபலிக்கிறார்கள்.

மனிதனை தவிர மற்ற உயிரினங்களுக்கு பரமனை அறிந்து கொள்ளும் தகுதியில்லை. அவை சக்தி தனிமத்தின் தூண்டுதலால் உணர்வுடன் செயல் படுகின்றன. அஃறிணை பொருள்கள் ஜடத்தனிமத்தின் உதவியால் இருக்கின்றன.

ஒரு இருட்டு அறையில் உள்ள பொருள்களின் இருப்பை ஒரு மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம். அதே போல் இவ்வுலகில் இருக்கும் அனைத்து பொருள்களின் இருப்பை காட்டிக்கொடுப்பது பரமன். அறையிலிருக்கும் ஒரு கண்ணாடி மெழுகுவர்த்தியின் ஒளியை பிரதிபலிப்பது போல இந்த உலகில் இருக்கும் அனைத்து உயிரினங்களும் பரமனின் உணர்வை பிரதிபலிக்கின்றன. மெழுகுவர்த்தியின் சுடர் மற்றொரு மெழுகுவர்த்தியை பற்றவைத்தால் அதுவும் முதல் மெழுகுவர்த்திக்கு இணையாக செயல்படும். அது போல பரமனை அறிந்து கொள்பவர்கள் பரமனாகவே மாறி 'இருத்தல்', 'உணர்வு' ஆகிய இரண்டு இயல்புகளுடன் 'ஆனந்தம்' என்ற மூன்றாவது இயல்பையும் முழுமையாக பிரதிபலிக்கிறார்கள்.

பயிற்சிக்காக :

1. மாயை எந்த மூன்று தனிமங்களின் கூட்டுப்பொருள்?

2. இவ்வுலகம் எந்த மூன்று வகையான சேர்மங்களால் உருவாக்கப்பட்டுள்ளது?

3. அஃறிணை பொருள்கள், மற்ற உயிரினங்கள் மற்றும் மனிதர்கள் பரமனின் எந்தெந்த இயல்புகளை பிரதிபலிக்கிறார்கள்?

4. மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உள்ள முக்கியமான இரண்டு வேறுபாடுகள் என்னென்ன?

5. உயிரினங்கள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுவதற்கு காரணம் என்ன?

6. மனிதர்களுக்குள் காணப்படும் வேறுபாடுகள் யாவை? அவற்றிற்கு காரணம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. ஜடம் ஓங்கிய சேர்மங்களைத்தவிர வேறு எதையும் நாம் கண்ணால் பார்க்கவோ மற்ற புலன்களால் அறியவோ முடியாது. இது உண்மையா?

2. அஃறிணை பொருள்களிலும் ஒளி தனிமம் உள்ளது. இது சரியா?

Friday, February 19, 2010

பாடம் 018: கடவுள் பரமன் (பிரம்ம சூத்திரம் 1.2.24-32)

கடவுளை தெரிந்து கொள்வது என்பது ஒரு மனிதரை தெரிந்து கொள்வது போல்தான். அவர் யார், அவர் செய்யும் தொழில் என்ன, அவர் எப்படிப்பட்டவர் என்ற தகவல்களை கொடுத்து கடவுளை நமக்கு வேதம் அறிமுகம் செய்து வைக்கிறது.

கடவுள் யார்?

நீதான் பரமன் என்று கூறிய வேதம் இப்பொழுது கடவுளை பரமன் என்கிறது.

நானும் பரமன். கடவுளும் பரமன். ஆகவே நானும் கடவுளும் ஒன்றா என்றால், நிச்சயமாக இல்லை. கடவுள் ஆளுபவர். நாம் அவரது ஆட்சிக்குட்பட்டவர்கள். கடவுள் சர்வ வல்லமை பொருந்தியவர். நாம் அற்பமானவர்கள். இது போல் கடவுளுக்கும் நமக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. பிறகு ஏன் வேதம் இருவரையும் பரமன் என்று கூறுகிறது? காரணம் இருப்பது பரமன் மட்டுமே. கடவுளும் நாமும் பரமனின் பிரதிபிம்பங்கள்.

நமக்கு முன்னால் ஒரு உட்குவிந்த கண்ணாடியும் (Concave mirror) ஒரு புரம்குவிந்த கண்ணாடியும் (Convex mirror) இருந்தால் நமது இரு பிம்பங்கள் ஒரேமாதிரி தெரிவதில்லை. ஒன்று மிகப்பெரியதாகவும் மற்றொன்று மிகச்சிறியதாகவும் தெரியும். இரண்டு பிம்பங்களில் எந்த ஒன்றை சுட்டிக்காட்டி இது யார் என்று கேட்டாலும் அது நான்தான் என்று பதில் சொல்வோம். ஏனெனில் அங்கு இருப்பது நான் மட்டுமே. அது போல இருப்பது பரமன் மட்டுமே. உபாதியின் (medium) அடிப்படையில் மனிதர்களாகவும் கடவுளாகவும் பரமனே தோற்றம் அளிக்கிறான்.

பரமன் உண்மையில் எந்த காரியமும் செய்வதில்லை. பரமனிடமிருக்கும் மாயா சக்தியால் இந்த உலகம் இருப்பது போல் தோன்றுகிறது. பாட்டு பாடும் சக்தியுள்ள ஒரு மனிதரை பாடகர் என்று குறிப்பிடுவது போல மாயா சக்தியுடன் கூடியுள்ள பரமனை நாம் கடவுள் என்று அழைக்கிறோம்.

கடவுளுக்கும் பரமனுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன?

கடவுள் பரமனின் பிரதிபிம்பம் என்றாலும் கடவுளுக்கும் பரமனுக்கும் பின்வரும் வித்தியாசங்கள் உள்ளன.

1. பரமனுக்கு ஒரு குறிப்பிட்ட உருவமோ பெயரோ குணமோ கிடையாது. கடவுள் எந்த உருவத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளும் சக்தியுடையவர். எனவே அவருக்கு எண்ணிலடங்கா பெயர்களும் உருவங்களும் உள்ளன. அனைத்து குணங்களுடன் கூடியவர் கடவுள்.

2. பரமன் எந்த மாற்றத்தையும் அடையாமல் எப்பொழுதும் இருப்பவன். கடவுள் தொடர்ந்து மாற்றத்தை அடைந்துகொண்டு எப்பொழுதும் இருப்பவர்.

3. பரமன் பகுதிகளோ பாகங்களோ இல்லாமல் என்றும் முழுமையானவன். கடவுள் ஒளி (Aura / ஸத்வம்), சக்தி (Energy / ரஜஸ்) மற்றும் ஜடம் (Matter / தமஸ்) என்ற மூன்று பொருள்களின் கலவை. சூரியனுடைய ஒளியிலிருந்து சக்தியும் ஜடமும் (Energy and Matter) தோன்றுவது போல பரமனிடமிருந்து இந்த மூன்றும் கடவுளாக வெளிப்படுகின்றன.

4. பரமன் முக்கால உண்மை (Absolute reality). கடவுள் பொது உண்மை (Relative reality).

கடவுள் எப்படி பட்டவர்?

1. கடவுள் மூன்று உடல்கள் கொண்டவர்.

நமக்கு பருவுடல் (Physical body), நுண்ணிய உடல் (Subtle body) மற்றும் காரண உடல் (Causal body) என்று மூன்று உடல்கள் இருப்பது போல் கடவுளுக்கும் மூன்று உடல்கள் உண்டு. எல்லா உயிரினங்களின் காரண உடலின் தொகுப்புதான் கடவுளின் காரண உடல். அதேபோல எல்லா நுண்ணிய உடல்களின் கூட்டமைப்பு கடவுளின் நுண்ணிய உடல். நாம் நமது ஐந்து புலன்களாலும் பார்த்து அனுபவிக்கும் இந்த பேரண்டம்தான் கடவுளின் பருவுடல். ஆகவே நாம் எப்பொழுதும் கடவுளை தொடர்ந்து பார்த்து அனுபவித்து கொண்டுதான் இருக்கிறோம்.

2. கடவுள் அனைத்தையும் உள்ளடக்கியவர்.

ஒரு காடு என்பது பல்வேறு மரங்கள் சேர்ந்த ஒரு இடம். அது போல கடவுள் என்பது அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தொகுப்பிற்கு பெயர். எப்படி ஒரு கூட்டதிற்கு அதிலடங்கியுள்ள தனி மனிதர்களின் கூட்டுச்சக்தியை விட அதிக சக்தியிருக்கிறதோ, ஒரு தனித்தன்மை இருக்கிறதோ அது போல கடவுளுக்கு கடவுளில் உள்ளடங்கியுள்ள அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களின் கூட்டுத்தொகையை விட அதிக சக்தியும் தனித்தன்மையும் உண்டு.

3. கடவுள் சர்வ சக்திமான்.

எல்லாம் வல்லவர் கடவுள். கடவுளின் கட்டளை படியே இந்த உலகம் முழுதும் இயங்கிவருகிறது. அனைத்து பௌதீக விதிகளையும் வகுத்தவர் அவர். அறிவியல் என்பது அவர் வகுத்த விதிகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்காக மனிதன் செய்யும் முயற்சி. தான் வகுத்த விதிகளை தேவைப்பட்டால் அவரால் மீறவும் முடியும்.

4. கடவுள் அனைத்தையும் அறிபவர்.

மனிதர்கள் மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களின் மனதில் இருக்கும் எண்ண ஓட்டங்கள் முழுவதையும் கடவுள் அறிவார். இறந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்ற மூன்றுகாலங்களையும் முற்றும் உணர்பவர் கடவுள்.

கடவுளின் தொழில் யாது?

1. உலகத்துக்கு காரணம் கடவுள்.

இந்த உலகத்தை படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் என்பது கடவுளின் செயல். ஒரு பானையை செய்ய அறிவுள்ள ஒரு குயவனும் ஜடமான களிமண்ணும் தேவை. அதே போல பரமனின் அறிவை பிரதிபலித்து தன்னிடமுள்ள ஒளி/சக்தி/ஜடம் ஆகிய பொருட்களால் இந்த உலகத்தை கடவுள் உருவாக்கினார். எனவே இந்த உலகத்திற்கு அறிவுக்காரணமும் (Intelligent cause) பொருட்காரணமும் (Material cause) கடவுளே.

2. பாவ புண்ணியங்களுக்கு பலன் அளிப்பவர்.

நாம் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் உண்டான பாவ புண்ணியங்களின் பலன்களை சரியாக நிர்ணயித்து அதை தவறாமல் நாம் அனுபவிக்கும் படி அதற்கேற்ற சூழ்நிலைகளையும் சந்தர்ப்பங்களையும் உருவாக்குவது கடவுளின் வேலை.

முடிவுரை :

மாயா சக்தியுடன் கூடிய பரமனை கடவுள் என அறிமுகப்படுத்திய வேதம், பின்வரும் உதாரணத்தின் மூலம் அனைத்தையும் விளக்குகிறது.

நாம் கடற்கரையில் நின்று பார்க்கும்பொழுது பல்வேறு அலைகள் கடலில் தோன்றி சில மணித்துளிகள் ஆரவாரத்துடன் செயலாற்றி பின் மறைகின்றன. எல்லா அலைகளும் கடலை சார்ந்து இருப்பவை. அலைகள் மிகச்சிறியவனவாகவும் கடல் மிகப்பெரியதாகவும் நமக்கு காட்சியளிக்கின்றன. ஆனால் கடலும் அலைகளும் வெறும் தோற்றங்களே. உண்மையில் இருப்பது நீர் மட்டும்தான்.

இந்த உதாரணத்தில் அலைகளை வெவ்வேறு மனிதர்களுக்கும் கடலை கடவுளுக்கும் ஒப்பிட்டால் இருப்பது நீர் என்கிற பரமன் மட்டும்தான்.

மாற்றமில்லாமல் எந்த வித செயலிலும் ஈடுபடாமலும் எப்பொழுதும் எதனுடனும் எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பவன் பரமன். பரமனின் மாயா சக்தியிலிருந்து ஒளி, சக்தி, ஜடம் ஆகியவற்றின் கூட்டமைப்பாக தோன்றும் இறைவன் இந்த உலகத்தை பல்வேறு உயிரினங்களின் அனுபவத்திற்காக தோற்றுவித்து காத்து அழிக்கும் வேலையை செய்து வருகிறார்.

பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஓவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. 'நீதான் பரமன்' என்பதன் முழுமையான விளக்கத்துடன் கடவுளை பற்றிய அறிமுகத்தையும் செய்ததுடன் முதல் அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி இத்துடன் முற்று பெறுகிறது.



பயிற்சிக்காக :

1. கடவுளுக்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை வரிசை படுத்துக.

2. பரமனுக்கும் கடவுளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன?

3. கடவுள் எந்த மூன்று பொருள்களின் கூட்டமைப்பால் செய்யப்பட்டவர்?

4. கடவுள் எப்படி பட்டவர்?

5. கடவுளின் தொழில் யாது?

சுயசிந்தனைக்காக :

1. கடவுளை தெரிந்து கொள்பவர்களை விட கடவுளை நம்புபவர்களும் நம்பாதாவர்களும் அதிகமாக இருப்பதன் காரணம் யாது?

2. பரமனும் கடவுளும் என்றுமிருப்பவர்களென்றால் உயிரினங்களும் என்றுமிருப்பவையா?

3. கடவுளுக்கு இந்த உலகத்தை எப்படி உருவாக்குவது என்பதில் முழுச்சுதந்திரம் உள்ளதா அல்லது இந்த மாதிரிதான் இருக்க வேண்டும் என்ற வேறு யாரவது அவருக்கு அறிவுருத்தி அதற்கேற்றாற்போல் உலகத்தை அவர் படைக்கிறாரா