Tuesday, November 30, 2010

பாடம் 111: தியானத்தையும் வேலையையும் சேர்க்க கூடாது ( பிரம்மசூத்திரம் 3.3.20-22 )

வேலை செய்வதற்கு பதில் தியானம் செய்து மனத்தூய்மை அடையலாம் என்று எண்ணுவது தவறு என்ற கருத்தை வலியுறுத்திய பின் வேலையும் தியானமும் ஒன்றுடன் ஒன்று சேராது என்ற உண்மையை விளக்கி வேலை செய்பவர்கள் தியானம் செய்யகூடாது என்ற அறிவுரையை இந்த பாடம் தருகிறது.

வாழ்வின் அட்டவணை

பள்ளிக்கூடத்தில் எந்த பாடத்தை எப்பொழுது படிக்கவேண்டும் என்பதற்கு ஒரு அட்டவணை இருப்பது போல மனிதன் தன் நூறு வருட வாழ்வை எப்படி வாழவேண்டும் என்பதற்கு வேதம் ஒரு அட்டவணையை கொடுத்துள்ளது. முதல் இருபத்தி ஐந்து வருடங்கள் கல்வி கற்க வேண்டும். இரண்டாவது இருபத்தி ஐந்து வருடங்களில் குடும்ப வாழ்வில் ஈடுபட்டு பொருள் ஈட்ட வேண்டும். ஐம்பது வயதிற்கு பிறகு ஓய்வெடுத்துக்கொண்டு ஆன்மிக துறையில் நேரத்தை செலவிட வேண்டும். கடைசி இருபத்தி ஐந்து வருடங்கள் துறவு நிலையில் வாழவேண்டும்.

இருபத்தி ஐந்து வருடங்கள் என்பது ஒரு எடுத்துக்காட்டு. ஒவ்வொருவர் வாழ்விலும் இந்த நான்கு கட்டங்கள் வெவ்வேறு காலங்களை எடுத்துக்கொள்ளலாம். இருபது வயதில் படித்து முடிக்கலாம். அறுபது வயதில் ஓய்வு பெறலாம். ஆனால் தற்போது நாம் எந்த கட்டத்தில் இருக்கிறோம் என்பதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும்.

மாணவ பருவம், இல்வாழ் பருவம், ஓய்வு நிலை, துறவு நிலை என்ற இந்த நான்கு கட்டங்கள் மனித உடல் பிறந்து வளர்ந்து தேய்ந்து மறையும் என்ற அடிப்படையில் வகுக்கபட்டிருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்தில் இருக்கும்பொழுதும் என்னென்ன செயல்களை செய்யலாம் மற்றும் எவற்றை செய்யக்கூடாது என்று வேதம் வகுத்திருக்கும் திட்டவட்டமான கட்டளைகளை நாம் பின்பற்றவேண்டும்.

வாழ்வின் நோக்கம்

வாழ்வை நான்கு பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் செய்ய வேண்டிய செயல்களை வேதம் தந்திருப்பதற்கு காரணம் வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக. என்றும் குறையாத இன்பத்துடன் வாழவேண்டும் என்பதுதான் அனைத்து மனிதர்களின் ஒரே குறிக்கோள். இதுதான் முக்தி அல்லது மோக்ஷ்ம். ஆனால் இது பெரும்பாலோருக்கு புரிவதில்லை. குறிக்கோள் என்ன என்று தெரியாவிட்டாலும் அனைவரையும் அவர்களது இந்த ஒரே குறிக்கோளை அடைய உதவி செய்யும் நோக்கத்தோடு வேதம் வாழ்வின் அட்டவணையை நான்காக பிரித்து வழங்கியிருக்கிறது.

என்ன வேலை செய்யவேண்டும் என்றும் அதை எப்படி செய்யவேண்டும் என்று கற்றுக்கொள்வது முதல் கட்டமான மாணவ பருவத்தில் வாழ்வின் நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்.  இரண்டாவது கட்டத்தில் பணம் சம்பாதித்து தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதை வாழ்வின் நோக்கமாக வேதம் தருகிறது. உலகில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இந்த முதல் இரண்டு கட்டத்தையும் வேதம் சொல்வதுபோல் செய்துவருகிறார்கள்.

எப்போழுது வாழ்வின் உண்மையான நோக்கம் இன்பமாக இருப்பது என்பது மக்களுக்கு புரிகிறதோ அப்பொழுது பணம் சம்பாதிப்பதற்கு முக்கியத்துவத்தை குறைத்துகொண்டு வேதம் படிப்பதற்கு நேரத்தை ஒதுக்க துவங்க வேண்டும். இது வாழ்வின் மூன்றாவது கட்டம்.

குடும்ப பொறுப்புகளை ஏற்றுகொண்டு இரண்டாவது கட்டத்தில் வாழத்துவங்கிய பின் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை முற்றிலும் நிறைவேற்றாமல் மூன்றாவது கட்டத்திற்கு செல்லக்கூடாது. பெற்ற பிள்ளைகள் முதல் கட்டத்தை முடித்து இரண்டாம் கட்டத்தில் நுழையும் தகுதி பெற்ற பின்தான் நாம் நம் பொறுப்புகளை குறைத்துக்கொள்ளலாம்.

உலகத்தை முற்றும் துறந்து விட்டு வேதம் படிப்பதற்காக முழுநேரத்தையும் செலவிடுவது நான்காவது கட்டம்.

வாழ்வின் ஒரே நோக்கம் முக்தி என்பதை புரிந்து அதை அடைவது எல்லோருக்கும் ஒரே பிறப்பில் சாத்தியமாகாது. வாழ்வின் அட்டவணையின் நான்கு கட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக கடப்பதை திரும்ப திரும்ப அனைத்து பிறவிகளிலும் தொடர்ந்து செய்வதால் மட்டுமே முக்தியை அடைய முடியும்.

வாழ்வு என்னும் செயல் முறைக்கல்வியை தொடர்ந்து கற்று கற்ற அறிவுடன் அடுத்த பிறவிக்கு சென்று நம் பயணங்கள் தொடருகின்றன. ஒவ்வொரு முறை பிறக்கும்பொழுதும் பள்ளிக்கு சென்று அ, , , ஈ என்றுதான் படிக்க ஆரம்பிக்கிறோம். ஆனால் எவ்வளவு விரைவாக கற்றுக்கொள்கிறோம் என்பது சென்ற பிறவிகளில் எவ்வளவு அறிவை சேர்த்து வைத்திருக்கிறோம் என்பதை பொருத்தது. எனவேதான் ஒரு சிலர் வேதம் கூறும் உண்மைகளை எளிதில் கற்றுக்கொண்டு இந்த பிறவியிலேயே முக்தியை அடைகிறார்கள். அந்த ஒரு சிலருள் நம் பெயரும் இருக்க வாய்ப்புகள் மிக அதிகம் என்ற நம்பிக்கையுடன் நாம் முயற்சி செய்தால் கூடிய விரைவில் முக்தியடைவோம்.

வாழ்வின் அட்டவணை என்பது வாழ்வின் நோக்கமான முக்தியை அடைவதற்காக வேதத்தால் வகுக்கபட்டது. முக்தியடைந்த பின் வேதம் நம்மை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. நம் வாழ்வை எவ்விதத்திலும் வாழலாம். ஆனால் வாழ்வின் அட்டவணை உடலின் மாற்றத்தின் அடிப்படையில் கொடுக்கபட்டுள்ளது என்பதாலும் உடலின் மாற்றம் என்பது ஒருவர் முக்தியடைந்தவரா இல்லையா என்பதை பொருத்து மாறாது என்பதாலும் முக்தியடைந்தவர்களும் இந்த ட்டவணையை தானாக பின்பற்றுவார்கள்.

வாழ்க்கை அட்டவணையின் நான்கு கட்டங்களையும் வேதம் சொல்லும் முறைப்படி கடந்தால் வாழ்வின் நோக்கத்தை நாம் விரைவில் அடையலாம். அவ்வாறு அடைந்தபின் நமது உடல் வலிமைக்கும் மனவிருப்பத்திற்கும் ஏற்ற செயல்களில் ஈடுபட்டு வாழ்வை இன்பமாக கழிக்கலாம்.

உலகியல் வாழ்வும் ஆன்மிக வாழ்வும் (Material life and Spiritual life)

வாழ்க்கை அட்டவணையின் முதல் இரு கட்டங்களும் அடுத்த இருகட்டங்களுக்கு படிகட்டுகள். பொருள் சம்பாதித்து ஆசைகளை பூர்த்தி செய்துகொள்வது என்பது உலகியல் வாழ்வு என்றும் அது ஆன்மிக வாழ்விலிருந்து வேறானது என்றும் பரவலாக நம்பபட்டு வருகிறது.  குடும்பவாழ்வின் பொறுப்புகளை சரிவர செய்ய முடியவில்லை என்பதற்காக அதை உதறிவிட்டு ஆன்மிக வாழ்க்கைக்கு செல்கிறேன் என்பது பள்ளியில் சரியாக படிக்க முடியவில்லை என்பதற்காக கல்லூரிக்கு போகிறேன் என்பதற்கு சமம்.

உலகத்தில் நாம் ஏற்றுக்கொண்ட கடமைகளை சரிவர செய்தால்தான் வாழ்வின் குறிக்கோளை அடைய நம்மால் முடியும். இது தெரியாமல் பலர் ஆன்மிக வாழ்வு என்பது குடும்ப வாழ்விலிருந்து வேறுபட்டது என்ற எண்ணத்தில் இதிலிருந்து அதற்கு தாவ முயற்சிகள் செய்கிறார்கள். தியானம் என்பது ஆன்மிக சாதனையாக கருதப்பட்டு குடும்பவாழ்வில் துன்பம் அதிகரிக்கும்பொழுது மக்கள் தியானம் செய்ய முயற்சிக்கிறார்கள். இது முற்றிலும் தவறு.

முடிவுரை :

வாழ்வை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வேதம் விதித்த அட்டவணையின் படி நான்கு கட்டங்களையும் முறையே கடந்தால்தான் வாழ்வின் குறிக்கோளை அடைய முடியும். ஒவ்வொரு பிறவியிலும் நாம் செய்த முயற்சியின் பலனாக இந்த பிறவியில் நம்மால் வேகமாக முன்னேற முடியும். ஆயினும் ஏற்றுக்கொண்ட கடமைகளை முறைப்படி முடித்தபின்தான் அடுத்த கட்டத்துக்குள் நுழைய வேண்டும். ஒரு வகுப்பில் நன்றாக படித்து தேர்வில் தேறியபின்தான் அடுத்த வகுப்புக்கு செல்ல முடிவதுபோல இல்வாழ் பருவத்தில் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றிய பின்தான் ஓய்வு நிலைக்கோ துறவு நிலைக்கோ செல்ல முடியும்.

துரோணரையும் பீஷ்மரையும் கொல்வதை தவிர்க்க அர்ஜுனன் காட்டுக்கு தவம் செய்ய சென்றிருந்தால் அவனால் அங்கு ஒரு சில நாட்கள் கூட தியானத்தில் அமர்ந்திருக்க முடியாது. அவன் மனம் போரில் என்ன நடந்ததோ என்ற எண்ணத்தில் அலைக்கழிக்கப்பட்டு மறுபடியும் போர்க்களத்திற்கு திரும்பியிருப்பான். வாழ்வு அட்டவணை என்பது ஒரு வழிப்பாதை. ஓய்வு நிலைக்கு சென்ற பின் அல்லது துறவு நிலைக்கு சென்ற பின் மீண்டும் மாணவப்பருவத்திற்கோ இல்வாழ் பருவத்திற்கோ திரும்பமுடியாது. தொட்டில் முதல் சுடுகாடுவரை நடக்கும் வாழ்வு ஒருவழிப்பாதை என்பதால் ஒவ்வொரு கட்டத்திலும் செய்ய வேண்டிய கடமைகளை முறையாக செய்து முடித்தபின்தான் அடுத்த கட்டத்தின் கடமைகளை செய்ய ஆரம்பிக்க வேண்டும். 

வேலை செய்து பணம் சம்பாதித்து குடும்ப பொறுப்புகளை ஏற்று நடத்தும் இரண்டாம் கட்டத்தில் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் முறையே செய்து முடிக்காமல் மூன்றாம் கட்டத்தில் செய்ய வேண்டிய தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடக்கூடாது.

பயிற்சிக்காக :

1.வாழ்வின் அட்டவணையின் உள்ள நான்கு கட்டங்கள் யாவை?

2.இந்த அட்டவணை எதன் அடிப்படையில் வேதத்தால் கொடுக்க பட்டுள்ளது?

3.இந்த அட்டவணையை கொடுக்கும் நோக்கம் என்ன?

4.முக்தி என்றால் என்ன?

5.இல்வாழ் பருவத்தில் இருப்பவர்கள் ஏன் தியானம் செய்யக்கூடாது?

சுயசிந்தனைக்காக :

1.வாழ்வின் அட்டவணையை பின்பற்றாவிட்டால் ஏற்படும் விளைவுகள் யாவை?

2.ஒவ்வொரு கட்டத்திலும் செய்யவேண்டிய கடமைகள் யாவை?

3.அட்டவணையில் இரண்டாவது கட்டத்தில் உள்ளவர்களைத்தவிர மற்ற மூன்று கட்டங்களில் உள்ளவர்கள் தியானம் செய்யலாமா?

4. மனம் ஒருமைப்படவும் மனதை அமைதிபடுத்தவும் தியானம் செய்யக்கூடாதா?

5. மாணவப்பருவம் முடிந்ததும் இல்லறத்தின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் துறவறம் மேற்கொள்ளலாமா?

6. உலகியல் வாழ்வு என்றும் ஆன்மிக வாழ்வு என்றும் வாழ்வை இரு பகுதிகளாக பிரிப்பது ஏன் தவறு?

Sunday, November 28, 2010

பாடம் 110: தியானத்தின் மூலம் மனத்தூய்மை (பிரம்மசூத்திரம் 3.3.19)

முறையாக வேலை செய்வதற்கு பதில் தியானம் செய்து மனத்தூய்மை அடையலாம் என்று எண்ணுவது தவறு என்ற கருத்தை தியானத்தை பற்றிய சில அடிப்படை உண்மைகளை கொடுத்து இந்த பாடம் விளக்குகிறது.

தியானம் என்றால் என்ன?

ஒரு காரியத்தை செய்ய ஆரம்பிக்கும் முன் கண்ணை மூடிக்கொண்டு பிரார்த்திப்பது தியானம் இல்லை. அதேபோல் வேலையை சரியாக செய்யவேண்டும் என்று தனக்கு தானே மனதுக்குள் சொல்லிக்கொள்வதும் (auto suggestion) தியானம் அல்ல. தியானம் என்பதை முறைப்படி ஆசிரியரிடம் கற்காமல் நாமாக ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை தொடர்ந்து ஜெபிப்பதையும் மனதில் எவ்வித எண்ணங்களும் இல்லாமல் மனதை காலியாக வைத்துக்கொள்ள முயல்வதையும் தவிர்ப்பது நல்லது.

மனதை மனதால் தூய்மை படுத்த செய்யப்படும் செயல் தியானம்.  பொதுவாக நாம் மனம், வாக்கு, உடல் என்ற மூன்றின் அடிப்படையில் செயல்களை செய்கிறோம். தியானம் செய்யும்பொழுது உடலாலும் வாக்காலும் எவ்வித செயல்களும் செய்யக்கூடாது. பார்த்தல், கேட்டல், நுகருதல், சுவைத்தல், தொட்டுணர்தல், பேசுதல், கை கால்களை அசைத்தல் ஆகிய செயல்களை முற்றிலும் தவிர்த்து மனதில் தோன்றும் எண்ணங்களை முறைப்படுத்தி ஒரு கட்டுக்குள் கொண்டுவருவது தியானம்.

தியானம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன் எதற்காக தியானம் செய்கிறோம் என்பதை பற்றிய தெளிவு அவசியம். ஓயாமல் வேலை செய்வதால் ஏற்படும் அலுப்பையும் களைப்பையும் நீக்கி கொள்வதற்காக தியானம் செய்வதற்கு பதில் ஒரு குட்டி தூக்கம் போடுவது அதிக பலனை கொடுக்கும்.

தியானம் செய்வதால் நமது செயல்திறன் அதிகமாகும் என்றாலும் செயல்திறனை அதிகபடுத்தும் நோக்கில் மனதை தயார் செய்துகொள்வது தியானம் ஆகாது. பரமனை பற்றிய ஞானத்தை பெற மனதை தகுதியுடைதாக்கி கொள்ளவும் பெற்ற ஞானம் நிலைபெறவும் செய்யும் செயல்கள் மட்டுமே தியானம் ஆகும்.

எண்ணங்களின் உற்பத்தி

கண், காது, நுகரும் மூக்கு, சுவைக்கும் நாக்கு மற்றும் தொட்டுணரும் தோல் ஆகிய ஐந்து புலன்கள்தான் எண்ணங்கள் உற்பத்தியாகும் இடம். இந்த ஐந்து புலன்கள் சுற்றியிருக்கும் உலகை படம் பிடித்து மனதிற்கு அனுப்ப அங்கு அவை எண்ணங்களாக பதிவு செய்யப்படுகின்றன.

பார்த்தல், கேட்டல், நுகருதல், சுவைத்தல், தொட்டுணர்தல் போன்ற செயல்களை செய்யா விட்டால் நம் மனதில் புதிய எண்ணங்கள் எதுவும் தோன்றவே தோன்றாது. ஏற்கனவே நம் சித்தத்தில் பதிந்துள்ள எண்ணங்கள் மட்டும்தான் மனதில் அவ்வப்பொழுது தோன்றி மறையும். ஆலோசனை, சிந்தனை, யோசித்தல், பகல் கனவு காணுதல், பழைய நினைவுகளை அசை போடுதல், நாளை என்ன நடக்குமோ என்று கவலை படுதல் போன்றவை மனதில் நடக்கும் செயல்கள்.

பொதுவாக மனதில் தோன்றும் எண்ணங்களை தீர்மானிப்பது வெளியுலகம். ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கும்பொழுது அதில் உள்ள கருத்துக்கள் எண்ணங்களாக மனதில் உருவாகிக்கொண்டிருக்கும். அந்த நேரத்தில் சமையலறையிலிருந்து காபியின் மணம் வந்தால் காபி பற்றிய எண்ணம் தோன்றும். உலகில் வாழ இதுபோன்று உலகை பற்றிய எண்ணங்கள் ஏற்படுவது அவசியம். சுற்றியிருக்கும் உலகத்துடன் சம்பந்தபடாமல் எப்பொழுதும் ஏதாவது விநோதமான எண்ணங்கள் மனதில் ஏற்பட்டுகொண்டிருந்தால் நாம் பைத்தியம் என்று அர்த்தம். ஐந்து புலன்கள் மூலமாக வெளிஉலகில் இருந்து மட்டுமே அனைத்து எண்ணங்களும் நமக்கு வருகின்றன. தியானம் எவ்வித புதிய எண்ணங்களையோ அறிவையோ உற்பத்தி செய்யாது.

தியானமும் எண்ணஓட்டங்களும்

ஏதாவது சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்பொழுது ஐந்து புலன்கள் மூலம் உலகத்தை உணர்வதை தற்காலிகமாக நம்மையறியாமல் நிறுத்திவைப்பது எல்லோரும் சாதரணமாக செய்யும் காரியம். இந்த சமையங்களில் நாம் உடலாலும் வாக்காலும் எவ்வித செயல்களையும் செய்வதில்லையாகையால் இது ஒருவகை தியானம் எனலாம். ஆனால் நான் இப்பொழுது தியானம் செய்யப்போகிறேன் என்று கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்தவுடன் மனதில் ஏற்படும் தொடர் எண்ண ஓட்டங்கள் தியானம் ஆகாது.

மனதில் ஏற்படும் எண்ண ஓட்டங்களை வெளியுலகம்தான் தீர்மானிக்கவேண்டுமே தவிர தியானம் செய்வதன் மூலம் மனதை எப்பொழுதும் அமைதியாக வைத்துக் கொள்ள முடியாது. வெளியுலகிலிருந்து விலகி தியானம் செய்வதற்காக சில நிமிடங்கள்தான் நம்மால் மனதில் ஓடும் எண்ண ஓட்டங்களை கட்டுபடுத்த முடியும்.   

எண்ணங்களும் செயல்களும்

செயல்களுக்கு அடிப்படை எண்ணம் என்பது எளிமையாக புரியக்கூடிய விஷயம். ஆனால் எண்ணங்களுக்கு அடிப்படை செயல் என்பதை புரிந்து கொள்வது சிறிது கடினம். கோவிலுக்கு போகவேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றினால்தான் கோவிலுக்கு செல்வோம். அடிக்கடி கோவிலுக்கு சென்றால்தான் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றும். இதுபோல் நம் அனைத்து எண்ணங்களும் நம் செயல்களை ஆதாரமாக கொண்டும் நம் அனைத்து செயல்களும் நம் எண்ணங்களை ஆதாரமாக கொண்டும் இருக்கின்றன.

எனவே செயல்களை செய்ய நமக்கு இருப்பதாக தோன்றும் சுதந்திரம் ஒரு மாயை. என்ன தோன்றுகிறதோ அதை செய்கிறோம். என்ன செய்கிறோம் என்பதை பொறுத்தே மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றன. இந்த சுழற்சியின் ஆரம்பம் நம் சுற்றுபுற சூழ்நிலை. எனவேதான் கெட்டதை பார்க்காதே, கெட்டதை கேட்காதே, கெட்டதை பேசாதே என்ற உபதேசத்தை கடைபிடிப்பது அவசியம்.

தியானம் செய்யலாமா?

இதுபோல் நாம் சூழ்நிலையின் கைதியாக இருக்கும்வரை மனதில் உள்ள அழுக்குகள் தொடர்ந்து அதிகரிக்குமே தவிர குறையாது. இந்த நிலையில் மனதை தூய்மைபடுத்த தியானம் சிறிதும் உதவாது. சாலையிலிருக்கும் புழுதி தொடர்ந்து வீட்டுக்குள் வந்தவண்ணம் கதவை திறந்து வைத்துக்கொண்டு வீட்டை எப்படி பெருக்கி சுத்தம் செய்ய முடியதோ அது போல வாழும் வாழ்க்கையின் தரம் தொடர்ந்து கோபம், பொறாமை போன்ற உணர்ச்சிகளை மனதில் ஏற்படுத்திக்கொண்டிருக்கும்பொழுது தியானம் மூலம் மனதை தூய்மைபடுத்தவே முடியாது.

மனம் ஒன்றாமல் பணத்திற்காக வேலை செய்வது, அதிக பணம் சம்பாதிப்பதன் மூலம் இன்பத்தை பெறலாம் என்று எண்ணுவது, நம்மிடம் உள்ள பொருள்கள் மீதும் நம்மைச்சேர்ந்த மக்களிடமும் பற்று வைப்பது போன்ற செயல்களை நாம் செய்யும் வரை நமக்கு தியானம் ஒரு பலனையும் தராது. 

பதினைந்து நிமிடங்கள் செய்யும் தியானத்தின் வெற்றி, தூங்கும் நேரம் உட்பட்ட எஞ்சியுள்ள இருபத்திநாலேமுக்கால் மணிநேரத்தை நாம் எவ்வாறு செலவிடுகிறோம் என்பதை பொறுத்தே அமையும். அலுவலகத்தில் அதிக வேலையிருப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும் வீட்டில் உள்ள பிரச்சனைகளை மறப்பதற்காகவும் தியானம் செய்ய அமர்ந்தால் தியானம் என்ற பெயரில் தூக்கம் வரலாமே தவிர மனக்கட்டுப்பாட்டையோ அமைதியையோ அடையவே முடியாது.

முடிவுரை :

செயல்கள் மூலமாகத்தான் மனதை தூய்மை படுத்தவேண்டும். மனம்போன போக்கில் வாழ்வை அமைத்துக்கொண்டு நிம்மதிக்கும் இன்பத்திற்கும் தியானம் செய்ய முயல்வது சரியல்ல. தியானம் பற்றிய ஆழ்ந்த அறிவு இல்லாமல் மனதை தூய்மை படுத்த அதை ஒரு குறுக்கு வழியாக உபயோகித்தால் நாம் நிச்சயம் தோல்வியடைவோம்.

அஷ்டாங்க யோகம் என்னும் தனது யோக சூத்திரத்தில் பதஞ்சலி முனிவர் தியானம் செய்வது எப்படி என்று விவரித்திருக்கிறார். அதில் வரும் முதல் கருத்து, செய்யக்கூடாத செயல்களை தவிர்த்து செய்யவேண்டிய செயல்களை செய்யும் வழியில் நம் வாழ்வு முறையை சரிசெய்யவேண்டும் என்பதாகும். இவற்றை முறையாக அறிந்து கொள்ளாமல் தியானம் செய்வது தவறு.

எனவே வேலைகளை முறையாக முழு கவனத்தையும் செலவிடுதல் அவசியம்.

பயிற்சிக்காக :

1. தியானம் என்றால் என்ன?

2.எண்ணங்கள் எவ்வாறு உறுவாகின்றன?

3.எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

4.மனதில் நடக்கும் செயல்கள் யாவை?

5.எவை தியானம் அல்ல?

6.தியானம் மூலம் புதிய அறிவை அடைய முடியுமா?

சுயசிந்தனைக்காக :

1. மனதில் தோன்றும் எண்ணங்களை நம்மால் கட்டுபடுத்த முடியுமா முடியாதா?

2. ஆழ்ந்து சிந்திப்பதற்கும் தியானத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன?

3.கோபம், பொறாமை போன்ற உணர்ச்சிகளுக்கும் எண்ணங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

Thursday, November 25, 2010

பாடம் 109: வேலையின் நோக்கம் மனத்தூய்மை (பிரம்மசூத்திரம்3.3.18)

வேலை செய்வதன் உள்நோக்கம் நமது மனதை தூய்மை படுத்துவது என்ற கருத்தை விளக்கி வேலை செய்யும் பொழுது அவசரம் இருக்க கூடாது என்று இந்த பாடம் உபதேசிக்கிறது.

மனதில் உள்ள அழுக்கு

அழுக்காறு, அகந்தை,அதிருப்திஅருவருப்புஅசூயைஆணவம்ஆத்திரம்இறுமாப்புஎரிச்சல்ஏக்கம்ஏமாற்றம்கவலை,  கலக்கம்கர்வம்,கோபம்குரோதம்குற்ற உணர்வுசந்தேகம்சஞ்சலம்தவிப்பு, தற்பெருமை, துன்பம்துக்கம்துயரம் பயம்பகைமைபழிவாங்கும் உணர்வுபொறாமைபேராசைவருத்தம்விரக்தி, விரோதம், வெட்கம் போன்றவை மனதில் உள்ள அழுக்குகள்இந்த அழுக்குகளுக்கு அடிப்படை காரணம் நமது ஆசைகள்நமக்கு எவ்வித ஆசையும் இல்லாமல் இருந்தால் மேற்குறிப்பிட்ட எந்த அழுக்குகளும் மனதில் தோன்றாது.

ஆனால் மனதில் தோன்றும் ஆசைகளை அகற்றுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆசைகள் தோன்ற காரணமான விருப்பு வெறுப்புகளின் பிடியிலிருந்து முதலில் நமது மனதை விடுவிக்க வேண்டும்.

சாதரணமாக நம் செயல்கள் அனைத்தும் நமது விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் தான் அமைகிறது. எனக்கு இது பிடித்திருக்கிறது, எனவே செய்கிறேன். எனக்கு அது பிடிக்கவில்லை அதனால் செய்யவில்லை. இதுபோல் விருப்பு வெறுப்புகளின் பிடியில் தொடர்ந்து செயல் பட்டால் அவை மேலும் பலம் பெற்று நம்மை அடிமைபடுத்திவிடும். முதல் சிகரெட்டை பிடிக்கலாம் அல்லது பிடிக்காமலும் இருக்கலாம் என்று இளைஞனுக்கு இருந்த சுதந்திரம் சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டதும் பறிபோய்விடும்.

மனதில் உள்ள அழுக்குகளை தூய்மை படுத்த வேலை செய்வது அவசியம்.  

வேலைக்கும் மனத்தூய்மைக்கும் உள்ள உறவு

ஒரு வேலையை இப்படித்தான் செய்யவேண்டும் என்று ஒரு முறை இருக்கும். நம் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் அந்த முறையை பின்பற்றினால் நாளடைவில் மனம் விருப்பு-வெறுப்புகளின் பிடியிலிருந்து விடுபடும். இதனால் நமக்கு எது பிடிக்குமோ அதில் ஆசை கொள்ளாமல் எது நல்லதோ அதில் ஆசைகொள்ள நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

தெருவில் குப்பை போடக்கூடாதுஎன்று சொன்னால் யாரும் அதற்கு மறுப்பு சொல்ல மாட்டார்கள். ஆனால் ஏன் தெருவில் குப்பை போடகூடாது என்ற கேள்விக்கு சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருக்கவேண்டும், ஒரு பொறுப்புள்ள குடிமகனாக நடந்து கொள்ள வேண்டும் என்று வாயளவில் பதில் சொன்னாலும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் எல்லா இடமும் தூய்மையாய் இருப்பதால் அங்கு குப்பை போடகூடாது என்று சொன்னால் நியாயமிருக்கிறது, இங்கு ஏற்கனவே குப்பைத்தொட்டி போல் இருக்கும் தெருவில் நான் ஒரு காகிதத்தை தூக்கி போட்டால் என்ன என்று மனதளவில் நினைத்துக்கொண்டு யாரும் பார்க்காதபோது தொடர்ந்து குப்பைகளை பொது இடங்களில் தூக்கி எறிந்து கொண்டுதான் இருப்பார்கள்.

ஏன் தெருவில் குப்பை போடக்கூடாது என்பதற்குமனதை தூய்மைபடுத்தஎன்பதுதான் சரியான பதில். தெருவில் நாம் குப்பை போட்டாலும் போடாவிட்டாலும் பெரிய வித்தியாசம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் தெருவில் குப்பை போடக்கூடாது என்ற சுயகட்டுபாடு நமது மனதை தூய்மை படுத்த பெரிதும் உதவும்.

இதுபோல எல்லா செயல்களையும்  செய்ய வேண்டிய முறைப்படி செய்வது நம் மனதை விருப்பு-வெறுப்புகளின் பிடியிலிருந்து விடுவிக்கும். அவ்வாறில்லாமல் மனம் போனபடி நடப்பது நமக்கு மட்டும்தான் நஷ்டம். அதனால் மற்றவர்களுக்கோ சூழ்நிலைக்கோ எவ்வித பாதிப்பும் இல்லை.

வேலையில் வேகம்

சுறுசுறுப்பாக வேலை செய்வது மிக முக்கியம். ஆனால் அவசரமாக வேலை செய்வது தவறு. ஒரு வேலையை முறைப்படி திருத்தமாக செய்ய ஆகும் நேரத்தை செலவிட்டு கவனமாக வேலையில் ஈடுபாட்டுடன் செயல்களை செய்யவேண்டும். வேலையை அனுபவித்து செய்வது வேலை செய்து முடிப்பதை விட முக்கியமானது.

ஆனால் எல்லோரும் வேலையை முடித்து விட்டு வீடு திரும்ப வேண்டும் என்பதில் தான் குறியாய் இருப்பார்கள். இதற்கு இரண்டு காரணங்கள்.

முதல் காரணம்: படித்து முடித்தால் விளையாடப்போகலாம் என்று மனதில் விளையாட்டை பற்றி நினைத்துக்கொண்டு கையில் உள்ள புத்தகத்தின் பக்கங்களை வேகமாக புரட்டிகொண்டிருக்கும் சிறுவனைப்போல பணம் சம்பாதிப்பதற்காக பலரும் வேலை செய்து கொண்டிருத்தல்.

இரண்டாம் காரணம்: பணத்தை கொடுத்து நிம்மதியை வாங்க முடியாது என்ற உண்மையை உணராமல் பணம் சம்பாதிப்பதற்காக வேலை செய்தல்.

வேலை செய்வதன் முக்கிய நோக்கம் மனத்தூய்மை என்பதையும் பணம், புகழ் போன்றவை வேலை செய்வதால் கிடைக்கும் துணை பொருள்கள் (by-products) என்பதையும் புரிந்து கொண்டவர்கள் அவசரம் ஏதுமில்லாமல் அதே சமயத்தில் துடிப்புடனும் சுறுசுறுப்பாகவும் திறம்பட வேலை செய்வார்கள்.

வேலை செய்வதன் முதல் காரணம்: அக சீர்திருத்தம்

சுறுசுறுப்பாகவும், முழு திறமையை உபயோகித்தும், ஈடுபாட்டுடனும் வேலையை செய்யவேண்டிய முறைப்படி சரியாக செய்வதன் மூலம் நமது மனதில் உள்ள அழுக்குகளை படிப்படியாக நீக்கி மனத்தூய்மை பெறலாம். இதுதான் வேலை செய்வதன் முக்கியமான நோக்கம் என்பது புரிந்தால் வேலை செய்யும்பொழுது பொதுவாக காணப்படும் அவசரம் மறையும்.

வேலை செய்வதன் உப காரணம்புற உலக சீர்திருத்தம்

வேலை செய்வதால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுகிறது. இதனால் வாழ்வில் வசதிகள் கூடுகின்றன. வேகமாக வேலை செய்தால் முன்னேற்றங்கள் விரைவில் ஏற்படும் என்பது உண்மை. ஆனால் உண்மையிலேயே இது முன்னேற்றமா என்பது சிந்திக்கப்படவேண்டிய விஷயம்.

காந்தி காலத்தில் இங்கிலாந்திற்கு செல்ல பதினைந்து நாட்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இப்பொழுது பதினைந்து மணிநேரத்தில் லண்டன் சென்று விடலாம். இந்த முன்னேற்றத்தினால் யாருக்கும் எவ்வித பயனும் இருப்பதாக தெரியவில்லை. பொழுதுபோக்கிற்காக சுற்றுலா செல்பவர்கள் கூட நேரம் போதவில்லை என்று அவசர அவசரமாக அருங்காட்சியகத்துக்குள் நடக்கிறார்கள்.

ஆறு மாதங்களில் கட்ட வேண்டிய மேம்பாலத்தை ஒரே வாரத்தில் கட்டுவது மற்றும் பத்து பேர் செய்யும் வேலையை கணிப்பொறி உதவியுடன் ஒரே ஆள் செய்வது  போன்ற மாற்றங்கள் புறவுலகை வேகமாக மாற்றி வருகின்றன. ஆனால் அதனால் மக்களுக்கு ஏற்படும் பயன் அதே விகிதத்தில் அதிகரிப்பதில்லை (Law of diminishing returns).  சொல்லப்போனால் ஒவ்வொரு முன்னற்றமும் வாழ்வில் நெருக்கடியையும் மனஉளைச்சலையும் அதிக படுத்துகின்றன. பேருந்தில் ஒரு மணி நேரம் பயணம் செய்வதற்கு பதில் இருசக்கர வாகனம் வாங்கி இருபது நிமிடங்களில் அலுவலகத்தை அடைந்தாலும் முன்னை விட தற்பொழுது நேரம் போதவில்லை என்றுதான் தோன்றுகிறது. மாட்டு வண்டி வேகத்தில் வாழ்க்கை நகர்ந்தபோது ஓய்வெடுக்க கிடைத்த நேரம் மோட்டர் கார் யுகத்தில் கிடைப்பதில்லை.

காலம் பொன் போன்றது என்றால் நமக்கு கிடைத்த வாழ்நாட்களை இன்பமாகவும் நிம்மதியாகவும் வாழவேண்டும் என்று பொருள். ஆனால் காலத்தை விரயம் செய்யாமல் நிறைய உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இதை தவறாக புரிந்து கொண்டு மக்கள் ஓயாமல் பணத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

மரத்தினடியே நிம்மதியாக உட்கார்ந்திருந்த விவசாயியிடம் நீ ஏன் இன்னொரு போகம் விளைவிக்க கூடாது என்று கேட்டதற்கு அவன் இருக்கும் உணவு எனக்கு போதும் இன்னும் விளைத்து என்ன செய்ய என்று பதிலளித்தான். இன்னும் விளைத்து அதிகப்படியாக கிடைத்த நெல்லை விற்று பணமாக்கி சேர்த்து வைத்து இன்னும் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி பெரிய பணக்காரனாகி பிறகு நிம்மதியாக இருக்கலாம் என்று அவனுக்கு உபதேசம் செய்தால் அவன் நான் இப்பொழுதே நிம்மதியாகத்தான் இருக்கிறேன், எதற்கு இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று பதில் கேள்வி கேட்டால் நம்மால் எவ்வித மறுமொழியும் சொல்ல முடியாது.

விரைவில் வேலைகளை செய்து முடிப்பதால் எவ்வித பயனும் இல்லை.

புற உலக முன்னேற்றமும்  அக உலக சீர்திருத்தமும்

வேலை செய்வதால் நமது மனம் செம்மையாகிறது. இரண்டு அடி குழி வெட்டிய பின் அதை பழையபடி மூடு என்று சொன்னால் உழைப்பை வீணடிப்பதுபோல் தோன்றும். உண்மையில் மனதை தூய்மை படுத்தவே வேலை செய்கிறோம். வேலை செய்வதால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுகிறதா என்று கவனிப்பது அனாவசியம். ஏனெனில் அந்த முன்னேற்றம் நம் நிம்மதிக்கும் இன்பத்திற்கும் எவ்வகையிலும் துணை செய்வதில்லை.

கிடைத்த ஒரே ஊசிப்பட்டாசை ஒரேயடியாக கொளுத்தாமல் அதை பிரித்து ஒவ்வொரு வெடியையும் தனித்தனியாக கையில் பிடித்து கொளுத்தி தீபாவளியை கொண்டாடும் ஏழை சிறுவனையும் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கின பட்டாசுகளை பத்து நிமிடத்தில் கொளுத்தி முடித்துவிட்டு நாள் முழுவதும்போர் அடிக்கிறதுஎன்று புகார் செய்யும் பணக்கார சிறுவனையும் ஒப்பிட்டால் அவசரபடும் தவறை நாம் செய்யமாட்டோம்.

பூமியை நாம் காப்பாற்ற வேண்டிய தாயாக கருதாமல் கொள்ளையடிக்கபட வேண்டிய பகைவனின் சொத்தாக கருதி இயற்கை வளங்களை தொடர்ந்து சூறையாடி வருவதன் காரணம் நாம் எதற்கு வேலை செய்கிறோம் என்பதில் ஒரு தெளிவு இல்லாமல் இருப்பதுதான்.   

பத்து பேர் செய்யும் வேலையை ஒருவன் செய்வதால் உற்பத்தி திறன் மிக அதிகமாகிவிட்டது என்று மகிழும் அதே நேரத்தில் பத்து பேருக்கு பதில் ஒரே ஒருவனின் மனம் மட்டும்தான் தூய்மையடைய வாய்ப்பு கிடைத்தது என்ற உண்மையையும் உணர வேண்டும்.

வேலை செய்து அதன் பலனை அனுபவிப்பதற்கு பதில் வேலை செய்வதையே இனிமையான அனுபவமாக செய்தால் மனம் தூய்மைப்படும் அதே நேரத்தில் வாழ்க்கைத்தரமும் தேவையான அளவு உயரும். இதனால்தான் நெசவாலைகளுக்கு பதில் கைத்தறி ஆடைகளை பிரபலபடுத்தவேண்டும் என்று காந்தி மகான் முயன்றார். தொழில் துறையில் உண்மையான முன்னேற்றம் அவரவர்களால் தங்கள் தேவைகளை தானே பூர்த்தி செய்து கொண்டு வாழ்வதற்கு துணை செய்வதாய் இருக்க வேண்டும். உதாரணமாக கைத்தறியில் உருவாகும் துணியின் தரம் ஆலைகளில் செய்யப்படும் துணியின் தரத்தைவிட நன்றாக இருக்கும் வகையில் கைத்தறியை வடிவமைப்பதுதான் உண்மையான விஞ்ஞான முன்னேற்றம்.

முடிவுரை :

அவசரமில்லாமல் சுறுசுறுப்பாக ஒரு வேலையை செய்வது அவசியம். போக வேண்டிய இடத்தை சீக்கிரம் சென்றடைய வேண்டும் என்று காரை வேகமாக ஒட்டுவது அவசரம். ‘நான் ஒரு ரவுண்டு போய்வருகிறேன்என்று தந்தையின் காரை மகன் எடுத்துக்கொண்டு அவரைவிட வேகமாக கார் ஓட்டினாலும் அதில் அவசரம் எதுவும் இல்லை. கார் செல்லும் வேகத்தை அனுபவிப்பவனுக்கு சீக்கிரம் போய் சேர்ந்து விடுவோமே என்ற வருத்தம் கூட இருக்கும். அதுபோல வேலையை எப்பொழுது முடிப்போம் என்று நினைத்து செய்தால் அது அவசரம். வெகுவேகமாக வேலையை அனுபவித்து செய்தால் அது சுறுசுறுப்பு.

கஷ்டபட்டு வேலை செய்வது பிறகு சந்தோஷமாய் இருப்பதற்காக என்ற எண்ணம் தவறானது. நம் வாழ்வில் பெரும்பகுதியை வேலை செய்வதற்காகத்தான் செலவிடுகிறோம். எனவே சந்தோஷமாக வேலை செய்தாலே போதும்.

பயிற்சிக்காக :

1. மனதில் உள்ள அழுக்குகளாக குறிப்பிடப்பட்டவை யாவை?

2.விருப்பு-வெறுப்புகளின் பிடியிலிருந்து விடுபட நாம் என்ன செய்யவேண்டும்?

3.ஏன் தெருவில் குப்பை போடக்கூடாது?

4.சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கும் அவசரமாக செய்வதற்கும் என்ன வித்தியாசம்?

5.வேலையில் வேகமிருந்தால் அதன் விளைவுகள் யாவை?

6.உண்மையான விஞ்ஞான முன்னேற்றம் யாது?

7.இந்த பாடத்திலிருந்து கிடைத்த முக்கியமான கருத்து என்ன?

சுயசிந்தனைக்காக :

1. விருப்பமானதை செய்தால்தானே சந்தோஷம்? வெறுக்கும் வேலைகளை செய்வதால் என்ன பலன்?

2. ஹோமம் வளர்க்கும்பொழுது நெய் ஊற்றுவதற்கு பதில் டால்டா ஊற்றலாமா?

3.ஒரு பூஜை செய்யும்பொழுது இப்படித்தான் செய்யவேண்டும் என்று வெவ்வேறு சம்பிரதாயங்கள் இருந்தால் எதை பின்பற்றுவது?

4. சிங்கபூர் போன்ற நகரங்களில் எல்லோரும் நகரை சுத்தமாக வைத்திருப்பதால் அவர்கள் மனமும் தூய்மையாகிவிட்டதா?

5. பொருளாதார முன்னேற்றம் அவசியம் இல்லையா?

பாடம் 108:நீயே அது (பிரம்மசூத்திரம்3.3.16-17)


அயித்ரேய உபநிஷதம் உன்னைத்தவிர வேறு ஒன்றுமில்லைஎன்ற மந்திரத்துடன் ஆரம்பிக்கிறது.  அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று கூறிய அதே வேதம் உன் வாழ்வுக்கு நீ மட்டும்தான் பொறுப்பு என்று கூறுவது முன்னுக்கு பின் முரணாக தெரிந்தாலும் இவ்விரு வாக்கியங்களும் எவ்வாறு ஒரே சமயத்தில் உண்மையாக இருக்க முடியும் என்பதை இந்த பாடம் விளக்கி நம்மை செயல் செய்ய தூண்டுகிறது.

விதியை மதியால் வெல்லலாம்

நமக்கு ஏற்படும் நன்மை தீமைகளுக்கு நாம் செய்த பாவ புண்ணியங்கள் மட்டுமே காரணம் என்றும் கடவுளாலோ ஜோதிடர்கள் போன்ற வல்லுனர்களாலோ இதை மாற்றியமைக்க முடியாது என்றும் படித்தோம். இது உண்மையானால் விதியை மதியால் வெல்லலாம் என்ற கூற்று பொய்யாய் இருக்க வேண்டும். ஆனால் அதுவும் உண்மையே.

நமது பாவ புண்ணியங்களுக்கு நாம் எவ்வித மனிதர்களையும் சூழ்நிலைகளையும் சந்திக்கிறோம் என்பதை தீர்மானிக்கும் சக்தி மட்டும்தான் இருக்கிறது. வாழ்வில் நிகழும் நிகழ்வுகளால் நாம் இன்பமடைகிறோமா அல்லது துன்பமடைகிறோமா என்பது நம் அறிவின் முதிர்ச்சியை பொருத்து நிர்ணயம் செய்யப்படும்.

உதாரணமாக நாம் ஒரு பணக்காரவீட்டில் பிறந்ததற்கு காரணம் நாம் செய்த புண்ணியம். ஆனால் பணம் இருப்பதால் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயமில்லாமல் வேண்டாத கெட்ட பழக்கங்களை ஏற்படுத்திக்கொண்டு துன்பபடுவது நமது அறிவின் குறைவால் ஏற்படும் விளைவு. புண்ணியத்திற்கு நம்மை இன்பத்தில் ஆழ்த்தும் சக்தி கிடையாது. அதே போல் நாம் செய்த பாவம் நமது வேலையை பறிக்கலாமே தவிர அதனால் நாம் துன்பபடவேண்டும் என்று நம்மை கட்டாயபடுத்த முடியாது.

ஒரு நிகழ்ச்சியை நாம் எப்படி பார்க்கிறோம் என்பது நமது அறிவின் திறத்தை பொருத்தது. அறிவில் குறைந்தவர்கள் அதிகமாக துன்பபடுவர். அறிவு அதிகமாக அதிகமாக துன்பம் தரும் நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றை வெற்றியின் படிக்கட்டுகளாக ஏற்றுக்கொண்டு வாழ்வில் முன்னேற முடியும். வேதம் கூறும் பரமனை பற்றிய அறிவை பெற்று விட்டால் நமது விதிவசத்தால் வாழ்வில் நேரும் ஏற்ற இறக்கங்களை பொருட்படுத்தாமல் வாழ்நாழ் முழுவதும் இன்பமாக இருக்கலாம். எனவே விதியை மதியால் வெல்லலாம் என்பது முற்றிலும் உண்மை.

பிரம்மன் என் தலையில் இதை அனுபவிக்க வேண்டும் என்று எழுதியதை அழிக்கவே முடியாது என்பது உண்மை. ஆனால் என்ன எழுத வேண்டும் என்று தீர்மானித்தது பிரம்மன் அல்ல, நாம்தான். எனவே நமது எதிர்காலத்தில் நடக்கப்போகிற நிகழ்வுகள் எப்படியிருக்க வேண்டும் என்று தீர்மானித்து அதற்கேற்றவாறு நமது விதியை பொறுப்பாக நாம் எழுதவேண்டும். அதே சமயத்தில் தொடர்ந்து செயல்கள் செய்வதன் மூலம் அறிவை வளர்த்துக்கொண்டு பரமனை அறிந்து கொண்டால் அனைத்து கர்ம வினைகளையும் அழித்துவிட்டு இனி பிறவா வரத்தை பெறலாம்.

எனவே நம் எதிர்காலத்துக்கு நாம் மட்டும்தான் பொறுப்பு.

எல்லாம் அவன் செயல் என்பதன் பொருள் என்ன?

செய்யும் செயல்களுக்கு நான் காரணமா அல்லது கடவுள் காரணமா என்ற கேள்விக்கு பதில் அவரவரின் அறியும் திறனை பொருத்து மாறும். உதாரணமாக பௌர்ணமி இரவில் பூமிக்கு வெளிச்சம் சந்திரனிடமிருந்து வருகிறதா அல்லது சூரியனிடமிருந்து வருகிறதா என்று கேட்டால் அதற்கு பதில் யார் இந்த கேள்வியை கேட்கிறார்கள் என்பதை பொருத்து மாறுபடும். இருப்பது சூரிய வெளிச்சம் ஒன்றுதான். அதுதான் நிலவில் பிரதிபலிக்கப்பட்டு பௌர்ணமி இரவை பிரகாசபடுத்துகிறது. ஆனால் இரவில் இருக்கும் வெளிச்சம் சூரியனின் வெளிச்சம் என்று கூறி சிறுவர்களை குழப்பக்கூடாது.

முதல் நிலைநீ மட்டும்தான் காரணம்

எல்லாம் என்னால்தான் என்ற மனநிலை ஆரம்பத்தில் இல்லாவிட்டால் மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்று உணவுகிடைக்கும்பொழுது உண்டு வேலை செய்ய யாரேனும் கட்டாயபடுத்தினால் வேண்டா வெறுப்பாக வேலை செய்து விட்டு மற்ற நேரங்களில் தூங்கும் சர்க்கஸில் இருக்கும் மிருகங்கள் போல் மனிதர்கள் வாழ்வார்கள்.

தன் கையே தனக்கு உதவி என்று நம்பி இவர்கள் தானாக வேலைகளை எடுத்துக்கொண்டு செய்யாவிட்டால் இவர்களுக்கு விமோசனமே கிடையாது. தொடர்ந்து வேலை செய்வதன் மூலம் தான் இவர்களது அறிவுத்திறன் வளரும். வேலை செய்யாமல் எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான் என்று சோம்பித்திரிந்தால் வாழ்வில் மாறி மாறி ஏற்படும் இன்ப துன்பங்களில் அலைக்கழிக்கப்பட்டு வாழ்வே இவர்களுக்கு ஒரு சுமையாக மாறிவிடும்.

எனவே இவர்களை பொருத்தவரைஉன் வாழ்வுக்கு நீ மட்டும் தான் பொறுப்புஎன்பது மட்டுமே சரியான பதில்.

இரண்டாம் நிலைகடவுள் மட்டும்தான் காரணம்

முதல் நிலையை கடந்து எப்பொழுதும் எறும்பு போல் சுறுசுறுப்பாக உழைத்து நாளில் உள்ள இருபத்திநாலு மணி நேரம் போதவில்லை என்பவர்களுக்கு வேதம் சொல்லும் உண்மை உன்னால் ஒன்றும் செய்துவிடமுடியாது. அனைத்தும் அவன் செயல் என்பது இவர்களுக்கு தரவேண்டிய சரியான பதில்.

ஏதோ ஒரு ஐந்து நிமிடம் தாமதமாகிவிட்டால் உலகம் நின்றுபோய்விடும் என்று கால் தரையில் படாமல் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டு ஓயாமல் காதில் ஒட்டிக்கொண்டிருக்கும் தொலைபேசி கருவியில் பேசிக்கொண்டு இருப்பவர்களுக்கு தாம் எதற்காக இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம் என்று யோசிக்க நேரம் இருக்காது. இவர்கள் தாங்கள் என்றும் இன்பமாக இருக்கவே வேலை செய்ய ஆரம்பித்தோம் என்பதை சுத்தமாக மறந்திருப்பார்கள்.

இவர்களுக்கு அனைத்து செயல்களும் அவன் அருளால் மட்டுமே நிகழ்கிறது என்று கடவுளை வேதம் அறிமுக படுத்துகிறது. எப்பொழுது இயந்திர மயமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு வேதத்தின் இந்த அறிவுரையை மக்கள் கேட்கிறார்களோ அப்பொழுது பொருள் சம்பாதிக்கும் வேகத்தை சற்று குறைத்துக் கொண்டு வேதம் படிக்க சில நேரத்தை ஒதுக்குவார்கள்.

மூன்றாம் நிலைநீயே அது

வேதத்தை குருவிடம் முறையாக கற்றுத்தேர்ந்தவர்கள் வெளிச்சம் சூரியனிடமிருந்து வருகிறதா சந்திரனிடமிருந்து வருகிறதா என்ற பட்டி மன்றத்தில் என்ன தீர்ப்பு சொல்லப்போகிறார்கள் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். ஏனெனில் கடவுள் யார் மனிதன் யார் என்பதன் அடிப்படைகளை கற்றுத்தேர்ந்ததால் இரண்டும் ஒன்று என்பதை இவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.

நான் வேறு என் உடைமைகள் வேறு என்பது இவர்களுக்கு தெரியும். உடைமைகள் என்றும் மாறிக்கொண்டே இருக்கும். மாறத நான் என்றும் இருக்கும் இன்ப மயமான பரமன் என்பதை இவர்கள் உணர்வார்கள். கடவுள் என்பவன் பிரபஞ்சமுழுவதையும் தன் உடலாக கொண்டிருப்பவன்.கடவுளின் உடைமைகளை களைந்தால் அவனும் பரமனிடமிருந்து வேறுபட்டவனல்ல என்பதால் நீயே அது என்று வேதம் சொல்லும் உண்மையை புரிந்து கொள்ள முடியும்.

முடிவுரை :

செயல் தவிர்க்கப்பட முடியாதது. அறிவின் திறன் எப்படியிருந்தாலும் யார் எந்த நிலையில் இருந்தாலும் அனைவரும் எப்பொழுதும் ஏதாவது வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். என்ன வேலை செய்கிறார்கள் என்பதும் அதை எப்படி செய்கிறார்கள் என்பதும் அவரவரின் அறிவின் தரத்தை பொருத்து அமையும்.

முதல் நிலையில் இருப்பவர்கள் என்னால் தான் எல்லாம் நடக்கிறது என்று அதிகமாக உழைக்க வேண்டும்.

இரண்டாம் நிலையில் இருப்பவர்கள் தங்களின் நேரத்தில் ஒரு பகுதியை கடவுளை பற்றி வேதம் கூறும் உண்மைகளை அறிந்து கொள்ள செலவிடவேண்டும்.

மூன்றாம் நிலையில் இருப்பவர்கள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் காற்று நுழைந்து கானமாக வெளிவரும் புல்லாங்குழல் போல இறைவனின் கையில் உள்ள உபகரணங்களாக கடவுளின் செயல்களை செய்து கொண்டிருப்பார்கள்.

பயிற்சிக்காக :

1. விதியை மதியால் வெல்லலாம் என்பதன் பொருள் என்ன?

2. மீண்டும் பிறவா வரத்தை பெறுவது எப்படி?

3. செயல் செய்வது மனிதனா கடவுளா என்பதற்கு மூன்று நிலைகளில் பதில் அளிக்கவும்.

சுயசிந்தனைக்காக :

1.நாம் செய்யும் செயல்களை எவ்வாறு கடவுள் செய்யும் செயலாக சொல்ல முடியும்? நான் கத்தியை எடுத்து பக்கத்துவீட்டுக்காரனை குத்தினால் அதற்கு கடவுள் எப்படி காரணமாவார்?

2. உற்பத்தி திறனை அதிகபடுத்தி செய்யும் அனைத்து செயல்களையும் வேகமாக செய்ய வேண்டும் என்று வாழ்வில் முன்னேற உழைக்கும் அனைவரிடமும் உள்ள துடிப்பு தவறானதா?

3. சூரியன் சந்திரன் என்று இரண்டு பொருள்கள் இருக்கும்பொழுது சூரியனே சந்திரன் என்று எப்படி கூற முடியாதோ அதுபோல கடவுள் மனிதன் என்று இருவர் இருக்கும்பொழுது நீயே அதுஎன்று எப்படி கூற முடியும்?