Wednesday, April 28, 2010

பாடம் 054: படைப்பிற்கு உணர்வுதான் காரணம் (பிரம்ம சூத்திரம் 2.2.11)

உலகம் உருவானதற்கு உயிரற்ற ஜடம் காரணமாக இருக்க முடியாது என்றால் எஞ்சியுள்ள உணர்வுதான் காரணமா என்பதை இந்த பாடம் தர்க்கத்தின் மூலமும் காரண காரிய அறிவின் மூலமும் ஆராய்கிறது.

அணுவினால் ஆன உலகம்

வேதத்தின் துணையில்லாமல் உலகின் துவக்கத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால் தற்போதுள்ள தடயங்களை கொண்டுதான் நமது ஆராய்ச்சியை தொடங்க வேண்டும்.

அறிவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் நாம் காணும் அனைத்து பொருள்களும் அணுவினால் செய்யப்பட்டவை என்று தெரியவரும். நுண்ணிய அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து நமக்கு இந்த பிரபஞ்சமாக காட்சியளிக்கின்றன.

அணுவைத்தவிர இவ்வுலகில் வேறு ஏதேனும் இருக்கின்றனவா? ஒளி, வெப்பம், புவியீர்ப்பு விசை போன்ற சக்திகள் அணுவின் வெளிப்பாடே. பொருளும் (mass) சக்தியும் (energy) அடிப்படையில் ஒன்று என்பதால் அணுவினால் ஆக்கப்படாதது எது என்ற நம் தேடல் தொடர்கிறது.

உயிர் இருக்கும் வரை செயல்படும் அணுக்களின் தொகுப்பான உடல், உயிர்பிரிந்ததும் பிணமாகிவிடுகிறது. உயிர் என்பது எவ்வித அறிவியல் கருவிகளுக்கும் புலனாகாத ஒன்று. உடல் செயல்பட்டால் உயிர் இருக்கிறது என்றும் நாடித்துடிப்பும் சுவாசமும் நின்றுவிட்டால் உயிர் இல்லை என்றும் அறியலாமே தவிர உயிர் என்றால் என்ன, அதன் தன்மைகள் என்ன, அதற்கு உருவம் இருக்கிறதா, அது ஒரு சக்தியா என்பது போன்ற கேள்விகளுக்கு அறிவியல் இன்னும் பதில் கண்டுபிடிக்கவில்லை.

கொடியசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததால் கொடியசைந்ததா? என்பது போன்ற தொடர் கேள்விகளை கேட்டு அணுதான் உயிரை உண்டாக்கியது என்ற தவறான முடிவுக்கு வருபவர்கள் பலர். விளக்கில் எண்ணை தீர்ந்துவிட்டவுடன் சுடர் அணைந்து விடுவதுபோல உடலின் ஆரோக்கியம் குறைந்தவுடன் உயிர் காணாமல் போய்விடுகிறது என்பது தவறான முடிவு. ஆரோக்கியமானவர்கள் மரணமடைவதில்லையா அல்லது மருத்துவர்களால் சில நாட்களுக்கு மேல் தேறாது என கைவிடப்பட்டவர்கள் பல வருடங்கள் வாழ்வதில்லையா?

மரணத்தின் காரணம் என்ன?

இயற்கை மரணத்திற்கு காரணம் கண்டுபிடிப்பது என்பது ஒரு வேடிக்கைக்குரிய செயல். தங்கள் வேலையை தொடர்ந்து செய்து வரும் உடலில் உள்ள பல்வேறு உறுப்புகள், உயிர் பிரியும் வேளை வரும்பொழுது ஒவ்வொன்றாக வேலை செய்வதை முழுவதும் நிறுத்தி கொள்கின்றன. யார் முதலில் வேலைநிறுத்தம் செய்தது என்று கண்டுபிடித்து குற்றவாளிகூண்டில் நிறுத்துவது அறிவீனம். இயற்கை மரணத்தின் ஒரே காரணம் உயிர் பிரிவதுதான்! உயிர் பிரிய காரணம் என்ன என்பது அறிவியல் அறிவுக்கு அப்பாற்பட்டது. உயிர் பிரிவதால்தான் உடலின் செயல்பாடு நிற்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ஊசிப்போன மசால் வடையை சாப்பிட்டதால்தான் உயிர் பிரிந்தது என்று உயிரைபற்றி எவ்வித அறிவும் இல்லாத மருத்துவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையை சிறுபிள்ளைத்தனமாக நம்புவது தவறு.

எப்படி திரி, எண்ணை போன்ற அனைத்து உபகரணங்களை சேர்த்து வைத்தவுடன் நெருப்பு தானாக தோன்றுவதில்லையோ அது போல ஜடமான அணுகூட்டத்தின் சரியான தொகுப்பில் உயிர் தானாக உருவாவதில்லை. உடலில் உள்ள அனைத்து பாகங்களும் ஆரோக்கியமாக இருந்தாலும் உயிர் பிரிவது சாத்தியம் என்ற தொட்டில் சாவு (cradle death) பற்றிய மருத்துவ ஆய்வுகள் காட்டும் முடிவை ஏற்றுக்கொண்டு அனைத்து இயற்கை மரணங்களுக்கும் ஒரே காரணம் விதி முடிந்து விட்டது என்பது மட்டும்தான் என புரிந்து கொள்ள வேண்டும்.

நெய்க்கு தொன்னை ஆதாரம் என்பது வெளிப்பார்வைக்கு தெரிவதை வைத்து எடுக்கும் அவசர முடிவு. நெய் இல்லையென்றால் தொன்னை குப்பைத்தொட்டிக்கு போய்விடுவதைப்போல உயிரற்ற உடல் எரிக்கப்பட்டுவிடும். நெய் தொன்னையினால் உற்பத்தி பட்டதல்ல. அது போல உணர்வு அணுவினால் செய்யப்படாதது.

உணர்வு என்றால் என்ன?

நான் என்ற சொல்லின் உண்மையான பொருள் உணர்வு. நான் இருக்கிறேன் என்பதற்கு எவ்வித நிரூபணமும் தேவையில்லை. இதை ஒரு சிறிய சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். நிசப்தமான ஒரு இடத்தில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டு நாம் குருடாகவும், செவிடாகவும், தொட்டுணரும் சக்தியற்றவராகவும் இருப்பதாக கற்பனை செய்து கொண்டால் இந்த உலகம் மறைந்து விடும். உண்மையிலேயே நமக்கு இந்த ஐந்து புலன்களும் செயலிழந்துவிட்டால் நம்மால் உலகம் என்று ஒன்று இருப்பதை அறிந்து கொள்ளவே முடியாது. ஆயினும் நான் இருக்கிறேன் என்பதை மறுக்க முடியாது.

ஒருவேளை நம் மனம் செயல்பட்டு கொண்டிருப்பதால்தான் நம்மால் நான் இருக்கிறேன் என்று உறுதியாக சொல்ல முடிகிறதா என்பதை அறிய நாம் நம் தினசரி உறக்க அனுபவத்தை ஆராய வேண்டும். ஆழ்ந்த உறக்கத்தின்போது ஐந்து புலன்களைத்தவிர நம் மனதும் முழுவதுமாக செயல்படுவதில்லை. ஆயினும் நான் தொடர்ந்து இருக்கிறேன் என்பது 'நான் ஒன்றும் அறியாமல் சுகமாக தூங்கினேன்' என்று விழித்ததும் கூறுவதிலிருந்து தெளிவாகிறது. ஒன்றையும் அறியவில்லை என்பதை நாம் எப்படி அறிகிறோம்?

நான் என்பதற்கு உணர்வு என்ற பொருள் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

எனக்குள் இருவர்

ஆக என்னை ஆராய்ந்தால் என் உடல் என்கிற ஜடப்பொருள் ஒன்றும், உணர்வு என்கிற ஜடமல்லாத ஒன்றும் சேர்ந்த இருவர் இருப்பது தெரியவரும். என் உடலின் தோற்றம் எப்பொழுது என்பது தெரியும். தோன்றிய உடல் ஒரு நாள் மறையும் என்பதும் தெரியும். உணர்வு தோன்றியது எப்போது? உண்மையில் இந்த கேள்விக்கு 'எனக்கு தெரியாது' என்பதை தவிர நம்மால் வேறு பதில் சொல்ல முடியாது.

நாம் பிறந்து வளர்ந்த ஊரில் நாம் ஒரு வெளிநாட்டுக்காரரை சந்திக்கும்பொழுது நீங்கள் எப்பொழுது வந்தீர்கள் என்ற கேள்வி கேட்டால் அவரால் பதில் சொல்ல முடியும். ஆனால் அவர் நம்மை பார்த்து 'நீங்கள் எப்பொழுது இங்கு வந்தீர்கள்?' என்று கேட்டால் நாம் என்ன பதில் சொல்லுவோம்? நான் எப்போதுமே இங்குதான் இருக்கிறேன் என்பதுதான் சரியான பதில். அதுபோல என்னுள் இருக்கும் உணர்வு என்று வந்தது என்று தெரியாவிட்டால் அது வரவேண்டிய அவசியமில்லை, அது என்றும் இருப்பது என்ற முடிவுக்கு வரலாம்.

உடலும் உணர்வும்

உணர்வு என்பது உடலினால் உற்பத்தி செய்யபட்டதோ, ஆரோக்கியமான உடலின் விளைவோ அல்லது உடலின் ஒரு உறுப்போ அல்ல. அது உடலுக்கு அப்பாற்பட்டு இருந்து உடல் முழுவதும் வியாபித்து அதற்கு உயிரூட்டும் ஒரு தனிப்பட்ட தத்துவம். உடலின் மறைவிற்கு பின் உணர்வின் இருப்பை அறிந்து கொள்ள முடிவில்லை என்பதனால் உணர்வு இல்லை என்று முடிவு செய்து விட முடியாது. உணர்வை வெளிபடுத்தும் சாதனம் மறைந்து விட்டதே தவிர என்றும் நிரந்தரமாக மாற்றமடையாமல் இருக்கும் உணர்வு இல்லாமல் மறைந்துவிட்டது என்று முடிவெடுப்பது தவறு.

முடிவுரை :

பிரபஞ்சத்தை ஆய்ந்தறிந்த அறிவியல் அறிஞர்கள் அனைத்தும் அணுவினால் ஆனவை என்று தெளிவான முடிவுக்கு வந்துள்ளனர். உணர்வு (consciousness) என்பது அணுத்தொகுப்புகளின் ஒரு குறிப்பிட்ட கூட்டமைப்பின் விளைவு என்பது எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லாமல் பொதுமக்களிடையே நிலவி வரும் ஒரு வதந்தி.

உடல் தானாக உருவாகவில்லை. உணர்வே உடலுக்கு உயிர்கொடுக்கிறது. தோற்றம்-மறைவு என்ற கட்டுபாட்டுக்குட்படாத உணர்வு என்றும் இருப்பது.

என்றும் இருக்கும் உணர்வு இவ்வுலகின் தொடக்கத்திற்கு ஏன் காரணமாயிருக்க முடியாது? ஜடமான அணு தன்னை தானே உருவாக்கிக்கொண்டிருக்க முடியாது. எனவே அணுவிலிருந்து உற்பத்தி செய்யப்படாத என்றும் உள்ள உணர்வுதான் படைப்புக்கு காரணமாக இருந்திருக்க வேண்டும்.

பயிற்சிக்காக :

1. இயற்கை மரணத்திற்கு காரணம் கற்பிப்பது தவறு என்று குறிப்பிடப்பட்டது ஏன்?

2. எனக்குள் இருக்கும் இருவர் யார்?

3. உணர்வு என்றால் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. உணர்வைத்தவிர அணுவினால் செய்யப்படாத வேறு பொருள்கள் எதுவும் கிடையாதா?

2. உயிருக்கும் உணர்வுக்கும் உள்ள தொடர்பு என்ன?.

3. இயற்கை மரணம் எதனால் நிகழ்கிறது?

4. மரணம் என்றால் என்ன?

Friday, April 23, 2010

பாடம் 053: படைப்பிற்கு ஜடம் காரணமாயிருக்க முடியாது (பிரம்ம சூத்திரம் 2.2.1-10)

பாடம் 053: படைப்பிற்கு ஜடம் காரணமாக இருக்க முடியாது

பாடல்:172 - 181 (II.2.1-10)

இந்த உலகம் எப்படி தோன்றியது என்ற கேள்விக்கு சரியான பதிலை வேதம் நமக்கு தந்துள்ளது. வேதத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் வெவ்வேறு கருத்துக்களை உண்மை என்று நிரூபிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். உணர்வில்லாத ஜடப்பொருள்தான் இந்த படைப்பிற்கு ஆதாரம் என்று பரவலாக நிலவிவரும் ஒரு கருத்தை தர்க்க ரீதியாகவும் பகுத்தறிவின் துணையுடனும் ஆராய்ந்து அது அர்த்தமற்றது என்று இந்த பாடம் விளக்குகிறது.

உணர்வும் ஜடமும்

நம்மை சுற்றியுள்ள உலகில் மனிதர்கள், மிருகங்கள் போன்ற அறிவுடன் கூடிய உயிரினங்களை பார்க்கிறோம். கல், மண், கடல் போன்ற உணர்வற்ற ஜடப்பொருள்களையும் பார்க்கிறோம். முதலில் தோன்றியது ஜடப்பொருள்களா இல்லை உயிரினங்களா என்ற கேள்விக்கு பதில் சொல்வது மிகவும் எளிது. உடலுடன் கூடிய உயிரினங்கள் முதலில் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் அவைகளால் ஜடப்பொருள்கள் எதுவுமில்லாமல் தனித்து இயங்க முடியாது. எனவே உணர்வற்ற ஜடப்பொருள்கள்தான் முதலில் தோன்றியிருக்க வேண்டும்.

ஜடப்பொருள்கள் தாமாக தம்மை உருவாக்கிகொண்டன என்பது நமது அறிவுக்கு சற்றும் பொருந்தாத கருத்து. ஆயினும் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் பகுத்தறிவாளர்களுக்கு ஒரு மிக இக்கட்டான சோதனை காத்துக்கொண்டிருக்கிறது. உயிரினங்கள் தோன்றுவதற்கு முன் தோன்றிய ஜடப்பொருள் தானாக தோன்றவில்லையென்றால் கடவுள் இருக்கிறார் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவதால், ஜடம்தான் படைப்பிற்கு காரணம் என்று பல அறிவாளிகள் நம்ப முயன்று கொண்டிருக்கிறார்கள்.

இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் 'ஜடப்பொருள்கள் எப்படி தாமாக தோன்றின?' என்ற கேள்விக்கு அறிவியல் பதில் கண்டுபிடித்துவிடும் என்ற குருட்டு நம்பிக்கையில் இவர்கள் தர்க்கத்துக்கு சற்றும் பொருந்தாத கருத்துடன் தங்கள் வாழ்நாளை கழித்து வருகிறார்கள்.

ஜடப்பொருள்தான் இந்த படைப்பிற்கு ஆதாரம் என்ற கருத்து தவறு என்பதை பின்வரும் காரணங்களால் நிரூபிக்கலாம்.
  1. யார் காரணம்?
உலகம் தோன்றியதற்கு காரணம் யார் என்ற ஆராய்ச்சியை முழுவதும் முடிக்காமல் ஜடம்தான் காரணம் என்று தீர்மானம் செய்வது கொலைசெய்யப்பட்டவனை கடைசியாக சந்தித்தவன்தான் கொலைகாரன் என்று முடிவு செய்வதற்கு சமம். அறிவியல் அறிஞர்கள் தற்கால நிகழ்வுகளை ஆராய்ந்து பின்னோக்கி பயணித்து பிக் பேங்க் (Big Bang) வரை சென்றுள்ளனர். பிக் பேங்க் எப்படி உண்டானது அதற்கு முன் என்ன நிகழ்ந்தது போன்ற கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்பதையும் அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். எனவே பத்திரிக்கையாளர்களுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் ஏமாந்தவனை பிடித்து கொலைகாரன் என்று ஜெயிலில் அடைக்கும் போலீஸ்காரர்களைப்போல அறிவற்ற ஜடப்பொருள்தான் உலகத்தின் தோற்றத்திற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இது உண்மையென்றால் அவர்கள் தங்கள் ஆராய்ச்சியை தொடர்வதில் அர்த்தமேயில்லை. இன்னும் அறிவியல் ஆராய்ச்சி தொடர்வதிலிருந்து ஜடம்தான் உலகின் ஆதாரம் என்ற கருத்து உண்மையல்ல என்று தெளிவாகிறது.
  1. பிழையான பிக் பேங்க் (Big Bang)
பெரிய வெடித்து சிதறல் எதுவும் பிக் பேங்கின்பொழுது நடக்கவில்லை என்பது பிரபலமாகாத அறிவியல் உண்மை. ஒரு பலூனை ஊதும்பொழுது அது எப்படி பெரிதாகிறதோ அது போல்தான் இந்த அண்டம் தொடக்கத்திலிருந்து இன்றளவும் தொடர்ந்து விரிவடைந்து கொண்டு இருக்கிறது. எனவே அண்டத்தின் துவக்கத்தை ஒரு அணுகுண்டு வெடிப்பதற்கு ஒப்பிடுவது பிழை.

ஒரு பட்டாசு வெடித்தபின் துகள்கள் எரிந்து நாலாபக்கமும் சிதறுவது போல் இந்த அண்டம் தோன்றியிருந்தால் ஒருவேளை ஜடம்தான் இதற்கு காரணம் என்று முடிவு செய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து விரிவடையும் பலூனுக்கு எப்படி ஊதுபவன் என்று ஒருவன் அவசியமோ அது போல இந்த அண்டத்தின் தொடர்ந்த விரிவாக்கத்திற்கு ஒரு சக்தி அவசியம். இதை 'தெரியாத சக்தி' (dark energy) என்ற பெயரில் அழைத்து அறிவியல் உலகம் தங்கள் இயலாமையை ஒத்துக்கொண்டுள்ளது.
  1. காரண-காரிய அறிவு
வெளிச்சமும் இருளும் போல ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகாத எதிர்மறை குணங்கள் கொண்டவை உணர்வும் ஜடமும். வெளிச்சம் இருக்கும் இடத்தில் இருள் இருக்க முடியாது. இருள் இருக்கும் இடத்தில் வெளிச்சம் இருக்க முடியாது. இதே போல் உணர்விலிருந்து ஜடமோ ஜடத்திலிருந்து உணர்வோ உருவாக முடியாது. நம் காரண காரிய அறிவு இதை தெளிவாக காண்பிக்கிறது. ஆயினும் நாம் உணர்வும் ஜடமும் கலந்து இருப்பதை பார்க்கிறோம். நம் உடல் வெறும் ஜடம். நாம் உயிருடன் இருக்கும்வரை இந்த ஜடமான உடல் உணர்வுடன் கூடியதாக செயல்படுகிறது. இது எப்படி சாத்தியமாகும்? இந்த கேள்விக்கு பதில் சொல்வதை தவிர்ப்பதற்காக ஜடம்தான் உணர்வை உருவாக்கியது என்று முடிவுசெய்வது புத்திசாலித்தனமில்லை. ஏனெனில் உடலில் உயிர் இருக்கிறதா இல்லையா என்று மட்டும் நம்மால் அறியமுடியுமே தவிர உயிரை தனித்து உணர எவ்வித கருவிகளாலும் முடியாது. அறிவியல் அறிவுக்குள் அகப்படாத உணர்வை எவ்வாறு ஜடமான உடல் உருவாக்க முடியும்?

மேற்கூறப்பட்ட மூன்று காரணங்களிலிருந்து படைப்பிற்கு ஆதாரம் யார் என்ற கேள்விக்கு நமக்கு பதில் கிடைக்காவிட்டாலும்கூட ஜடம் காரணமாயிருக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது.



முடிவுரை :

உயிரினங்களை உருவாக்க உணர்வு மற்றும் ஜடம் என்று இரண்டு பொருள்கள் தேவை. உணர்வற்ற ஜடப்பொருள்களை நாம் அறிகிறோம். ஆனால் ஜடமற்ற உணர்வை நாம் பொதுவாக அறிவதில்லை. எனவே அறியாத உணர்வு படைப்பிற்கு காரணமாயிருக்க முடியாது என்றும் அறிந்த ஜடப்பொருள்கள்தான் தானாக இவ்வுலகை உருவாக்கின என்று முடிவு செய்வது அறிவீனம்.

நியூட்டனின் முதல் விதியின் படி அசையும் பொருள்களின் அசைவை நிறுத்தவதற்கும் அசையா பொருள்களை அசைய வைக்கவும் ஒரு தனிப்பட்ட சக்தி தேவை. அந்த சக்தியும் தானாக எவ்வித செயலையும் செய்ய தொடங்க முடியாது. எனவே இந்த உலகத்தின் படைப்பிற்கும் இயக்கத்துக்கும் காரணமாக ஜடப்பொருள்கள் இருக்க முடியாது.

உணர்வை அறிந்து கொள்ள அறிவியலால் முடியவில்லை என்ற காரணத்தால் ஜடப்பொருள்களுக்கு உணர்வை உருவாக்கும் சக்தி இருப்பதாக நாம் முடிவு செய்ய கூடாது.

பயிற்சிக்காக :

1. முதலில் தோன்றியவை ஜடப்பொருள்களா உடலுடன் கூடிய உயிரினங்களா?

2. ஜடப்பொருள்கள்தான் படைப்பிற்கு ஆதாரம் என்பதை மறுக்க கொடுக்கப்பட்ட மூன்று காரணங்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. ஜடப்பொருள்கள் படைப்பிற்கு ஆதாரம் என்பதை மறுக்க வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா?

2. உணர்வுதான் படைப்பிற்கு ஆதாரம் என்பதை தர்க்க பூருவமாக மறுக்க முடியுமா?

3. படைப்பிற்கு ஆதாரம் எது என்று தெரிந்து கொள்வதன் அவசியமென்ன?

Monday, April 19, 2010

பாடம் 052: படைப்பிற்கு கடவுள் அவசியம் (பிரம்ம சூத்திரம் 2.1.37)

இறைவன் இருக்கின்றானா என்ற மனிதனின் முதல் கேள்விக்கும் அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான் என்ற இரண்டாம் கேள்விக்கும் இந்த பாடம் விடை கொடுக்கிறது. மேலும் எவ்வித செயலிலும் ஈடுபடாத பரமன் எவ்வாறு இந்த உலகத்தை படைக்க முடியும் என்ற சந்தேகத்தையும் இந்த பாடம் நீக்குகிறது.

இறைவனை பார்க்க முடியுமா?

இறைவன் யார், எப்படியிருப்பான், அவன் தொழில் என்ன என்பது போன்ற முழு விவரங்களை அறிந்து கொள்ளாமல் இறைவனை பார்க்க முடியுமா என்று கேள்வி கேட்பதில் அர்த்தமேயில்லை.

கழுத்தில் பாம்புடன் தலையில் ஜடாமுடியுடன் உடலெங்கும் விபூதியுடன் யாரேனும் நம் வாசல் கதவை தட்டினால் அவனை சிவன் என்று வணங்க மாட்டோம். ஏதோ பிச்சைக்காரனென்று விரட்டிவிடுவோம். ஏன் அப்படி செய்தீர்கள் என்று கேட்டால் உண்மையான சிவன் என்றால் ஏன் கதவை தட்டிக்கொண்டு வெளியே நிற்கவேண்டும், பூட்டிய கதவை திறக்காமலேயே அதை கடந்து உள்ளே வரவேண்டியதுதானே என்று புத்திசாலித்தனமாக பதில் சொல்வோம்.

ஒருவேளை வாசல் கதவை தட்டாமல் நேராக அவன் உள்ளே வந்து விட்டால் திருடன் திருடன் என்று கூப்பாடு போட்டு ஊரை கூட்டுவோமே தவிர காலில் விழுந்து நமஸ்கரிக்க மாட்டோம். ஏன் அப்படி செய்தீர்கள் என்று கேட்டால் தினமும் பூஜை செய்யும் எனது மனைவிக்கு காட்சி கொடுக்காமல், 'இறைவனே இல்லை' என்று சொல்லும் என் முன்னே சிவன் வருவான் என்பதை எப்படி நம்புவது என்போம்.

இதுபோல் ஏதாவது காரணம் சொல்லி இறைவன் உண்மையிலேயே நம் கண்முன் தோன்றினாலும் அதை மறுத்துவிட்டு தொடர்ந்து இறைவன் இருக்கின்றானா என்று கேள்விகேட்டு கொண்டிருப்போம். இறைவனை பற்றிய அறியாமையே இதற்கு காரணம்.  

கணவன் காலை அலுவலகத்திற்கு செல்லும்பொழுது வீட்டிலிருக்கும் மனைவியிடம் 'மதியம் முருகன் வருவான். அவனிடம் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்துவிடு' என்று சொன்னவுடன் அவள் சரி என்று பதில் கூறினால் அவளுக்கு முருகன் என்பது யார் என்றும் அவனுக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும் என்பதும் தெரியும் என்று அர்த்தம். இல்லாவிட்டால் அவள் முருகன் என்பது யார், அவன் எப்படி இருப்பான், அவன் வந்து 'நான் முருகன்' என்று சொன்னால் எப்படி நம்புவது இது போல பல கேள்விகள் கேட்டிருக்க வேண்டும்.

அது போல இறைவனை என்னால் பார்க்க முடியுமா என்று கேட்பதற்கு முன் இறைவன் எப்படி இருப்பான், அவன் என் எதிரில் வந்து 'நான்தான் இறைவன்' என்றால் எப்படி நம்புவது என்பது போன்ற கேள்விகளுக்கு சரியான பதிலை தெரிந்து கொள்வது மிக அவசியம்.

இறைவனை பற்றிய பூரண அறிவை அடைந்தபின் இறைவனை பார்க்க முடியுமா என்ற கேள்வியே நம் மனதில் எழாது.

இறைவனை பார்க்காமல் இருக்க முடியுமா?

நம் யாராலும் இறைவனை பார்க்காமல் இருக்க முடியாது. இறைவன் யார் என்று தெரிந்து 
கொண்டால் நாம் பார்ப்பவை எல்லாம் இறைவன் என்று புரிந்து விடும்.

பரமன் எதனுடனும் சம்பந்தபடமால் எவ்வித செயலையும் செய்யாமல் எவ்வித மாற்றமும் அடையாமல் இருப்பவன். உணர்வையும் ஆனந்தத்தையும் இயல்பாக கொண்டு என்றும் இருக்கும் பரமனைத்தவிர வேறு ஒன்றும் இல்லை என்று வேதம் சொல்வதால் பரமன்தான் இவ்வுலகத்துக்கு காரணமாயிருக்க வேண்டும்.

பரமனின் மாயா சக்தி இந்த உலகமாக தோற்றமளிக்கிறது. தோற்றம், தொடர்ந்த மாற்றம், மறைவு மறுபடியும் தோற்றம் எனும் சுழற்சியின் ஆதாரம் பரமன். இச்செயல்களை பரமன் செய்யவில்லை. பரமனை ஆதாரமாக கொண்டு மாயை செய்கிறது. இந்த மாயாசக்தியுடன் கூடிய பரமனைத்தான் நாம் இறைவன் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

இறைவன்தான் இந்த உலகமாக காட்சியளிக்கிறான். நம் உடல் மனம் உள்ளிட்ட அனைத்தும் இறைவனின் வடிவம். அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்பதன் பொருள் சமையற்காரர் இல்லாமல் கோதுமை தானாக சப்பாத்தியாக மாறாது என்பது போன்றதல்ல. கோதுமை, அடுப்பு, சமையற்காரர், அணு இவையனைத்தின் வடிவில் இருப்பது இறைவன் என்பதுதான் சரியான பொருள்.

இறைவன் என்று ஒரு தனிப்பட்டவன் எங்கும் இல்லை. இறைவனைத்தவிர வேறு ஒன்றுமில்லை. இதை புரிந்து கொண்டால் இறைவனை பார்க்க முடியுமா என்ற கேள்வி மனதில் எழாது.

முடிவுரை :

நம் கண் முன்னே இருக்கும் உலகம்தான் இறைவன் இருக்கிறான் என்பதற்கு சாட்சி. இருப்பதை வைத்து இல்லாததை அறியும் திறன் படைத்த வெகு சில அறிஞர்கள் மட்டுமே இறைவனை நேரடியாக பார்க்கும் சக்தி வாய்ந்தவர்கள்.

உணர்வற்ற பொருள்கள் மட்டுமே இந்த பிரபஞ்சத்தில் உள்ளது என்றால் கடவுள் கிடையாது என்ற வாதத்தில் உண்மையிருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் உணர்வு மற்றும் ஜடப்பொருள்களின் கலவையாக காணப்படும் இவ்வுலகத்தை காண்கையில் இது தானாக உருவாகியிருக்க முடியாது என்பதும் ஜடப்பொருள்கள் உணர்வை உண்டாக்கியிருக்க முடியாது என்பதும் எல்லோருக்கும் எளிதில் விளங்கிவிடாது. பரமன் என்ற உணர்வும் மாயாசக்தி என்ற ஜடப்பொருளும் சேர்ந்த சேர்க்கைதான் இறைவன் என்று அறிந்து கொள்பவர்களுக்கு கடவுளைத்தவிர வேறு ஒன்றும் கண்ணில் தென்படாது.  வர்களால் மட்டுமே என்றும் இன்பம் என்ற வாழ்வின் முக்தி நிலையை அடைய முடியும்,

பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஓவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. வேதத்தில் கூறப்பட்ட தத்துவங்கள் சரியானவை என்றும் அவற்றில் எவ்வித குறைபாடோ முரண்பாடோ இல்லை என்றும் முறையான விளக்கங்களை கொடுத்து இந்த இரண்டாம் அத்தியாயத்தின் முதல் பகுதி இத்துடன் முற்று பெறுகிறது.

பயிற்சிக்காக :

1. உலகத்தை படைத்தது பரமனா இறைவனா?

2. இறைவனை பார்க்க முடியுமா?

3. அவனன்றி ஓர் அணுவும் அசையாது. உதாரணத்துடன் விளக்குக.

சுயசிந்தனைக்காக :

1. ஜடப்பொருள்களிலிருந்து தான் உணர்வு தோன்றியது என்பது உண்மையாக இருக்குமானால் அதன் விளைவுகள் என்னென்ன?


Thursday, April 15, 2010

பாடம் 051: கொடுமையோ பட்சபாதமோ அற்றவன் அவன் (பிரம்ம சூத்திரம் 2.1.34-36)


செல்வசெழிப்புடன் உல்லாசமாக வாழும் மக்கள் ஒருபுறமும் அடுத்த வேளை உணவுக்கே வழியில்லாமல் வாடும் மக்கள் மறுபுறமும் இருக்கும் இந்த படைப்பை பார்க்கும்பொழுது இதை படைத்த பரமன் கொடுமைக்காரனாகவும் பாரபட்சம் உள்ளவனாகவும்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருபவர்களின் எண்ணங்கள் தவறானவை என்று இந்த பாடம் விளக்குகிறது.

பரமன் கொடுமைக்காரனல்ல

பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பது போன்ற பழமொழிகளுக்கு ஆதாரமாக நம் வாழ்வில் தொடர்ந்து துன்பம் ஏற்படும் பொழுது படைப்புக்கு காரணமான பரமன் ஒரு கொடுமைக்காரன் என்ற எண்ணம் ஏற்படுவது இயல்பு. மேலும் பட்டினிச்சாவு, உள்நாட்டு கலவரம், குடி, கொள்ளை, கற்பழிப்பு, கொலை, போதைபொருள்களின் தாக்கம் இது போன்ற சமூக கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகமாவதை பார்க்கும்பொழுது பரமன் மக்களின் துன்பத்தில் இன்பமடையும் கொடுங்கோலனா (sadist) என்ற சந்தேகம் எழுகிறது.

தங்கத்தை சுட்டால்தான் ஆபரணங்கள் செய்யமுடியும். அதுபோல நம் மனதை செம்மையாக்க துன்பமான சூழ்நிலைகள் அவசியம்.

உலகம் என்ற பள்ளியில் வாழ்க்கை என்னும் பாடத்தை படிக்கும்பொழுது கடினமான பாடங்களை கற்றுத்தேர்ந்தால்தான் மனிதன் பரிணாம வளர்ச்சிபெற்று அறிவுஜீவியாக (Gnostic being) முடியும். வல்லவன் மட்டுமே வாழலாம் (survival of the fittest) என்ற விலங்குகளின் கோட்பாட்டிலிருந்து விலகி அனைவரும் வாழலாம் என்ற முன்னேற்றத்தை மனித இனம் அடைந்துள்ளது. இந்தப்பாதையில் மேலும் முன்னேற்றமடைய உடலளவில் அதிக சக்தி தேவையில்லை. மனம் பக்குவமடைந்து கூரிய அறிவுள்ளவர்களாக மனித இனம் மாற வேண்டும். எனவே கத்தியை தீட்டுவதைவிட்டு நம் புத்தியை தீட்டும் நிலைக்கு நாம் உயர்ந்து வருகிறோம்.

கல்லை தொடர்ந்து உளியால் தாக்கி அதை கண்கவர் சிற்பங்களாக உருவாக்கும் சிற்பியை போல தொடர்ந்து துன்பங்களை கொடுத்து நம் மனதை செதுக்கி மனித குலத்தின் மேம்பாட்டுக்கு வழி செய்பவன் பரமன்.

பரமன் பட்சபாதம் அற்றவன்.

பள்ளியில் ஆசிரியர் ஒரு சில மாணவர்களுக்கு நிறைய மதிப்பெண்கள் கொடுத்து சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்குகிறார். வேறு சிலருக்கு வெகுகுறைவான மதிப்பெண்களும் அதிகப்படியான பிரம்படியும் தருகிறார். எனவே அந்த ஆசிரியர் பாரபட்சத்துடன் செயல்படுகிறார் என்று கூறுவது அறிவீனம்.

ஆசிரியர் அனைத்து மாணவர்களும் முன்னேற வேண்டும் என்ற அடிப்படை நோக்கில் அவரவர்களின் தகுதிகளையும் தேவைகளையும் மனதில் கொண்டு எவ்வித பாரபட்சமும் இல்லாமல் செயல்படுவது போல பரமன் அனைத்து மக்களின் நலத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மனிதனுக்கும் பொறுத்தமான சூழ்நிலைகளையும் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தி கொடுக்கிறான்.

வினைப்பயன் (laws of karma) பற்றிய பூரண அறிவு இல்லாதவர்கள் ஏன், எப்படி, எதற்காக என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் தெரியாத சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் தற்செயல் (by chance), விபத்து (accident), அதிர்ஷ்டம் (luck) போன்ற வார்த்தைகளால் வர்ணிக்கிறார்கள். இவை யார் வாழ்விலும் எப்பொழுதும் நடப்பதில்லை.

தினமும் இரண்டு மூன்று தினசரிகளையும் குமுதம் ஆனந்தவிகடன் போன்ற பத்திரிக்கைகளையும் பக்கத்து வீட்டு வாசலில் மட்டும் போடும் பேப்பர்காரனை 'என் வீட்டுக்கு மட்டும் ஏன் ஒன்றும் போடுவதில்லை' என்று கோபித்து பயனில்லை. பக்கத்து வீட்டுக்காரர் அனைத்தையும் கேட்டிருக்கிறார் மற்றும் அவற்றுக்குண்டான விலையை மாதாமாதம் தருகிறார். எனவே அவருக்கு எல்லாம் கிடைக்கிறது. கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும் என்ற வாசகங்கள் முற்றிலும் உண்மையானவை. இதில் வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு துளியும் கிடையாது. அவரவரின் விருப்பத்துக்கும் தகுதிக்கும் என்ன கிடைக்க வேண்டுமோ அது முறைப்படி இவ்வுலகில் அனைவருக்கும் கிடைக்கிறது. எனவே பரமன் பாரபட்சமானவன் என்ற பேச்சுக்கே இடமில்லை.

நான் துன்பபடவேண்டுமென்ற விருப்பம் எனக்கில்லையே, பின் ஏன் எனக்கு இம்மாதிரி சோதனைகள் ஏற்படுகின்றன என்றால் நாம் பிறர் துன்பத்துக்கு காரணமான செயலை இந்த பிறவியிலேயோ அல்லது முன்பிறவிகளிலேயோ செய்ததன் பலனை நாம் இப்பொழுது அனுபவிக்கிறோம். மாலையில் கொலை செய்தவன் மறுநாள் காலை எழுந்ததிலிருந்து மிக நல்லவனாகவும் அனைவருக்கும் உதவி செய்பவனாகவும் இருக்கிறான் என்ற காரணத்தைகாட்டி அவனை கைது செய்யாமல் விட்டு விட வேண்டும் என்று போலீஸிடம் நாம் வாதாட மாட்டோம். வினை விதித்தவன் வினை அறுப்பான் என்ற சட்டத்தில் யாருக்கும் எப்பொழுதும் எவ்வித சலுகையும் கிடையாது.

பசிவர அங்கு மாத்திரைகள், பட்டினியால் இங்கு யாத்திரைகள் என்ற நிலைக்கு பரமன் காரணமல்ல. அவரவர்களின் வினைப்பயனின்படி வாழ்க்கை அமைகிறது. வாழ்க்கை என்னும் செயல் முறை கல்வியை தொடர்ந்து பயின்று நல்ல செய்கைகளின் மூலம் புண்ணியத்தை ஈட்டி என் விதியை தீர்மானிப்பது நான் மட்டும்தான் என்று உணர்ந்தவர்களால் மட்டுமே முக்தியடைய முடியும்.

நம் எதிர்காலம் செல்வசெழிப்பும் சுகமான சூழ்நிலைகளும் கொண்டதாக இருக்கச்செய்வது நம் கையில்தான் இருக்கிறது. இது தெரியாமல் பரமனை கொடுமைக்காரன் என்றும் பாரபட்சம் உள்ளவன் என்றும் கூறுவது பொறுப்பற்ற செயல்.

முடிவுரை :

மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பது போன்ற மனித குலத்துக்கே உரிய பாரபட்சமான இயல்பை பரமனுக்கு கற்பிப்பது நம் அறியாமை. நம் வாழ்வு எங்கனம் அமைய வேண்டும் என்று தீர்மானிப்பது பரமனல்ல. நாம்தான். ஒரு சிலர் துன்பத்தால் சூழப்பட்டும் மற்றும் சிலர் சுகமாகவும் வாழ்வதற்கு அவரவர் வினைப்பயன் மட்டுமே காரணம்.

தங்கள் துன்பத்திற்கு மற்றவர் காரணமென்று ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொண்டால் நம் வாழ்க்கை இன்பமாக அமைகிறதா இல்லையா என்பதில் நமக்கு எவ்வித பொறுப்பும் இல்லையென்றாகிறது. மேலும் துன்பத்தை தவிர்க்கவும் இன்பமாயிருக்கவும் நாம் செய்யும் அனைத்து முயற்சிகளும் அர்த்தமற்றவையாகின்றன.

நமது பாவபுண்ணியங்கள் மட்டுமே நமது சூழ்நிலைகளையும் நிகழ்வுகளையும் தீர்மானிக்கின்றன. இவற்றிலிருந்து நாம் பெறும் அறிவு நம்மை துன்பக்கடலை கடந்து இன்பக்கரையை அடைய படிப்படியாக உதவும்.

பயிற்சிக்காக :

1. பரமன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு காரணம் என்ன?

2. பரமன் கொடுமைக்காரன் அல்ல என்று நிரூபிக்கவும்.

3. மக்களிடையே இருக்கும் ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டுக்கு காரணம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. ஏன் மனிதர்களின் வாழ்வு முழுவதுவும் இன்பமாகவோ அல்லது முழுவதும் துன்பமாகவோ இருப்பதில்லை?

2. ஒருவேளை நாம் நமது சென்ற பிறவிகளில் நிறைய பாவம் செய்திருந்தால் இந்த பிறவியில் துன்பபட்டுத்தான் ஆகவேண்டுமா?