Monday, June 14, 2010

பாடம் 065: நீர் நெருப்பிலிருந்து தோன்றியது (பிரம்ம சூத்திரம் 2.3.11)

பிரபஞ்சத்தின் தோற்றத்தில் வெளி, காற்று, நெருப்பு என்ற மூன்று பொருள்களுக்குபின் நான்காவதாக தோன்றியது நீர் என்ற கருத்தை இப்பாடம் விளக்குகிறது.

நெருப்புக்கும் நீருக்கும் உள்ள நெருங்கிய உறவை சாந்தோக்கிய உபநிடதம் தெளிவாக விளக்குகிறது. சுற்றுப்புற சூழலிலோ உடலிலோ வெப்பம் அதிகமானால் உடனே வியர்வை ஏற்படுகிறது. மேலும் மனிதன் துயரத்தில் வேதனைப்படும்பொழுது மன அழுத்தம் (சூடு) அதிகமாகி அதன் விளைவாக அழுது கண்ணீர் உருவாகிறது. கோடை நாட்களில் வெப்பம் அளவுக்கு அதிகமாக இருந்தால் மாலை நேரத்தில் மழை வருகிறது. இது போன்ற நிகழ்வுகள் நெருப்பிலிருந்து நீர் உண்டாகிறது என்ற உண்மையை நமக்கு உணர்த்துகின்றன.

நீர் எப்படி உருவானது?

உலகம் தோன்றுவதற்கு பல காலம் முன்பே நீர் தோன்றியது என்றும் நீரிலிருந்து தோன்றியதுதான் நிலம் என்றும் வேதம் கூறும் கருத்துக்கள் அறிவியல் அறிவுக்கு முற்றிலும் புறம்பாய் உள்ளன.

நீர் என்பது உயிரினங்களின் இருப்புக்கு மிக அவசியமான பொருள் என்பதாலும் பூமியைதவிர வேறு எந்த கிரகங்களிலும் நீர் கண்டுபிடிக்கப்படாததாலும் நீர் என்பது எப்படியோ பூமியில் மட்டும் உருவாகியுள்ளது என்று அறிவியல் அறிஞர்கள் நம்புகிறார்கள். பூமியில் முக்கால் பாகம் ஆக்ரமித்திருக்கும் கடல் எவ்வாறு உண்டானது என்ற கேள்விக்கு 'தெரியவில்லை' என்பது தான் அறிவியல் அறிஞர்களின் முடிவான பதில் என்பதை அவர்களின் முரண்பாடான ஆய்வு முடிவுகளிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

நெருப்பிலிருந்து நீர் உருவானது என்று தெளிவாக வேதம் கூறும் கருத்தை அறிவியல் அறிவு உறுதிபடுத்துகிறது. நெருப்பு என்பது ஆக்ஸிடேஷன் (Oxidation) எனப்படும் வேதியியல் மாற்றத்தின் வெளிப்பாடு என்பது அறிவியல் அறிவு. ஆக்ஸிடேஷன் என்றால் ஆக்ஸிஜன் அணுக்கள் மற்ற பெரிய அணுத்துகள்களை கரியமில (கார்பன்-டை-ஆக்ஸைட்) வாயுவாகவும் நீர் ஆவியாகவும் மாற்றுகிறது என்று பொருள். எனவே நெருப்பிலிருந்து தோன்றியதுதான் நீர் என்பது தெளிவாகிறது.

பிக் பேங்க் (Big Bang)ன் பொழுது ஏற்பட்ட அளவுக்கதிகமான வெப்பத்தில் உருவானதுதான் நீர். இந்த நீர் மற்ற அணுத்துகள்களுடன் சேர்ந்து தொடர்ந்து குளிர்ச்சியடைந்து அதிலிருந்து உருவானதுதான் நிலம். திரவமான தயிரை கடைவதால் அதிலிருந்து திடமான வெண்ணையும் தண்ணீரும் உருவாவது போல்தான் தொடர்ந்த சுழற்சியினால் திரவமான விண்வெளிக்குழம்பிலிருந்து (cosmic soup) திடமான நிலமும் கடலும் உண்டாயின.

நீரின் தன்மைகள்

வேதம் நீரின் தன்மைகளாக பின்வரும் கருத்துக்களை தெரிவிக்கிறது.

1. குளிர்சி நீரின் இயல்பு.

2. நெருப்பிலிருந்து தோன்றியது நீர்.

3. ஒலி, தொட்டுணர்வு, உருவம் மற்றும் சுவை ஆகிய நான்கு குணங்களை கொண்டது நீர்.

4. நீரின் துணையில்லாமல் நம்மால் சுவையை அறியவே முடியாது.

5. நீரின் வடிவம் அது இருக்கும் பாத்திரத்தின் வடிவத்தை பொறுத்தது.

6. மெதுவாகவும் வேகமாகவும் நகரக்கூடியது நீர்.

7. அரிக்கும் தன்மையுள்ளது நீர்.

8. கல்லையும் கரைக்கும் சக்தி வாய்ந்தது நீர்.

9. நம் நுண்ணிய உடலைச்சேர்ந்த சுவைக்கும் நாக்கையும் பிறப்பு உருப்புகளையும் உருவாக்கியதில் பெரும்பாகம் வகிப்பது நீர்.

முடிவுரை :

நீர் என்பது படைப்பில் நான்காவதாக உருவான பொருள். நெருப்பிலிருந்து தோன்றிய நீர் பின் நிலத்தை தோற்றுவித்தது. இதுவே வேதம் கூறும் கருத்து.

பயிற்சிக்காக :

1. நீரின் தன்மைகள் யாவை?

2. நீரை பற்றி அறிவியல் ஆய்வுக்கும் வேதத்தின் கூற்றுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் என்னென்ன?

சுயசிந்தனைக்காக :

1. கடல் உருவானது எப்படி என்று இப்பாடத்தில் கூறிய கருத்தை இணைய தளங்களிலிருந்து கிடைக்கும் கருத்துக்களுடன் ஒப்பிடுக.