Monday, June 21, 2010

பாடம் 068: ஊழிக்காலத்தில் ஒடுங்கும் முறை (பிரம்ம சூத்திரம் 2.3.14)

பஞ்சபூதங்கள் ஒன்றிலிருந்து ஒன்று எப்படி தோன்றியதோ அதன் எதிர்வரிசையில் பிரளய காலத்தில் ஒன்றுக்குள் ஒன்று ஒடுங்கும் என்ற வேதத்தின் கருத்தை இந்த பாடம் விளக்குகிறது.

சரியான முடிவு

படிப்படியாக ஏறி மாடிக்கு சென்றவன் இறங்கும்பொழுது அதே படிகளை எதிர்வரிசையில் கடப்பது போல் காற்றிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து நீர், நீரிலிருந்து நிலம் என்ற வரிசையில் தோன்றிய பிரபஞ்சம் ஊழிக்காலத்தில் நீரில் கரைந்து, பின் நீர் நெருப்பில் மறைந்து கடைசியில் காற்றில் கலக்கும்.

எப்படி நீரிலிருந்து தோன்றிய பனிக்கட்டி நீராக மாறி அழிகிறதோ அதே போல் பரமனிடமிருந்து தோன்றிய பிரபஞ்சம் முடிவில் பரமனிடம் சென்று மறையும்.

எது அதிகம்?

பஞ்சபூதங்களுக்குள் எது முதலில் படைக்கப்பட்டதோ அது பின்னால் படைக்கப்பட்டதை விட சக்தி அதிகம் வாய்ந்தது. முதலில் தோன்றி கடைசியில் மறைவதால் அதிக காலம் இருப்பது. இருக்கும் காலத்தில் அதிகம் வியாபித்திருப்பது. நிலத்தை விட நீர் அதிகம் வியாபித்துள்ளது. இதே போல் நீரை விட நெருப்பும், நெருப்பை விட காற்றும், காற்றைவிட வெளியும் அதிகம் வியாபித்துள்ளதை நாம் அறிவியல் பூர்வமாக அறிகிறோம்.

நிலத்தை விட நீர் அதிகம் என்பது பூமியை பொறுத்தவரை சரி என்று மட்டும்தான் அறிவியல் கூறுகிறது. ஆனால் வேதம் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நிலப்பரப்பை விட நீர்தான் அதிகம் வியாபித்திருக்கிறது என்று கூறுகிறது. எதிர்காலத்தில் அறிவியல் அறிஞர்கள் விண்வெளியைபற்றி இன்னும் சரியான உண்மைகளை அறிந்துகொள்ளும்பொழுது இந்த கருத்து வேறுபாடு மறையலாம்.


அழிவை பற்றி அறிவியல் கருத்து

பிரபஞ்சம் எவ்வாறு அழியும் என்பதில் இன்னும் அறிவியல் உலகம் ஒரு முடிவுக்கு வரவில்லை. பிக் பேங்க் (Big Bang) பிரபஞ்சத்தின் தொடக்கத்தை விளக்கும் கோட்பாடாக பெரும்பான்மையான அறிவியல் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்தாலும் இந்த தொடர்ந்த விரிவாக்கம் எப்பொழுது ஒரு முடிவுக்கு வரும் என்பதில் இன்னும் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது. ஒரு சாரார் வேதம் கூறுவது போல விரிவடையும் பிரபஞ்சம் சுருங்கத்தொடங்கி கடைசியில் ஆரம்பத்திலிருந்த நிலையை அடையும் என்கிறார்கள். இந்த பிக் க்ரன்ச் (Big crunch) வாதம் தற்பொழுது மறுக்கப்பட்டு பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைந்து அனைத்து வெப்ப சக்தியும் தீர்ந்து போய் பிக் ஃப்ரீஸ் (Big freeze)ல் முடியும் என்ற கருத்து பிரபலமாயுள்ளது.

இது போன்ற எந்த ஒரு துறையுலும் முடிவான உண்மையை அறிவியலால் அறியமுடியாது. ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் இனி மாறாத உண்மை இதுதான் என்ற முடிவுக்கு அறிவியல் அறிஞர்கள் என்றும் வரமாட்டார்கள். எனவே பிரபஞ்சத்தின் அடர்த்தி பற்றி இன்னும் அதிக தகவல்கள் சேகரித்த பின் வேதம் கூறும் கருத்தான பிக் க்ரன்ச் (Big crunch) தான் சரியான கோட்பாடு என்ற முடிவு பெரும்பான்மையான அறிவியல் அறிஞர்களின் ஆதரவை பெறலாம்.

முடிவுரை :

பஞ்சபூதங்கள் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுவதைப்போல இறுதிகாலத்தில் ஒன்றினுள் ஒன்று மறையும். பஞ்சபூதங்களின் கலவையாக தோன்றிய அனைத்து உயிரினங்களும் ஜடப்பொருள்களும் அழிந்து மண்ணோடு மண்ணாகும். பின் நிலம் நீரில் மூழ்கும். நீர் நெருப்பில் அழியும். நெருப்பு காற்றில் கலக்கும். காற்று வெளியில் காணாமல் போகும். கடைசியில் வெளி பரமனிடம் அடங்கும்.

இது முடிவான முடிவல்ல. தோற்றம் மறைவு என்ற தொடர்ந்த சுழற்சியில் பிரளயம் ஒரு அங்கம்தான். ஊழிக்காலத்தில் மறையும் உலகம் மறுபடியும் தோன்றும். உயிரினங்கள் வாழத்தகுந்த உலகம் மறுபடியும் உருவாகும் என்று வேதம் தெளிவாக கூறுகிறது.

பயிற்சிக்காக :

1. பிரளயத்தின் பொழுது பஞ்ச பூதங்கள் எந்த வரிசையில் ஒடுங்கும்?

சுயசிந்தனைக்காக :

1. பிரளயத்திற்கு பின் என்ன நடக்கும்?