Wednesday, January 26, 2011

பாடம் 134: சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 )

பாரம்பரிய சடங்குகளை பின்பற்றும் விஸ்வரூபஉபாசனையை தவிர ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு சடங்கை தேர்ந்தேடுத்து அதற்கு மேலதிக முக்கியத்துவம் கொடுத்து முக்தியடையும் வரை தொடர்ந்து கடைபிடிக்கவேண்டும். இவ்வகையில் சந்தியாவந்தனம் என்பது ஒரு முக்கியமான சடங்கு. சந்தியாவந்தனம் செய்யும் முறை எந்த வேதத்தை பின்பற்றுபவர்கள் என்பதை பொறுத்தும் எந்த ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதை பொறுத்தும் மாறுபடும். எனவே எப்படி செய்ய வேண்டும் என்பதை தவிர்த்து எதற்காக சந்தியா வந்தனம் செய்ய வேண்டும் என்பது இந்த பாடத்தில் விவரிக்கப்படுகிறது.

சந்தியாவந்தனத்தின் முக்கியத்துவம்

மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மயங்கிய ஒளியினைப்போல மன மயக்கத்தை தரும் இந்த உலக அனுபவங்களிலிருந்து ஒரு நாளைக்கு மூன்று முறையாவது விடுபட்டு ‘பரமனை அறிந்து கொள்ள முயலவேண்டும்’ என்று நமக்கு நாமே நினைவு படுத்திக்கொள்ளவே சந்தியாவந்தனம் என்ற சடங்கை அனைவரும் செய்யவேண்டும் என்று வேதம் வற்புறுத்துகிறது. காலை விழித்ததுமுதல் இரவு வரை தொடர்ந்து இவ்வுலகவிவகாரங்களில் ஈடுபட்டுகொண்டிருப்பதால்தான் இவ்வுலகத்திற்கு மேற்பட்ட சத்தியமான பரமன் என்று ஒருவன் இருக்கிறான் என்ற உண்மையை தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் பெரும்பாலோருக்கு வாய்ப்பதில்லை.

முக்தியடையவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை தினமும் மூன்று முறை மூன்று நிமிடம் கண்களை மூடி கடவுளிடம் பிரார்த்தித்தால் கூட சம்பிரதாயப்படி முறையாக சந்தியாவந்தனம் செய்வதன் பலன் கிடைக்கும். கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவை உறுதிபடுத்த உதவுவதே இந்த சடங்கின் நோக்கம்.

இவ்வுலகம் யாரால் படைக்கப்பட்டது, மனித வாழ்வின் நோக்கம் என்ன என்பது போன்ற கேள்விகளை யாரேனும் கேட்டால் ஏதோ தமக்கு சம்பந்தமில்லாத விஷயம் என்பதுபோல் பலர் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொள்வார்கள். இந்த கேள்விகளுக்கு பதிலை தெரிந்து கொள்ளும்வரை இவர்கள் வாழ்வில் துயரத்தை தவிர்க்க முடியாது. தாங்கமுடியாத துக்கம் ஏற்படும்பொழுது இவர்கள் கோவிலுக்கு வந்து ‘என் அழுகுரல் உன் காதில் விழவில்லையா’ என்று பிரார்த்திக்கும்பொழுது ‘சந்தியாவந்தனம் செய்யவேண்டும் என்று நான் சொல்வதை நீ ஏன் கேட்கவில்லை’ என்று இறைவனிடமிருந்து மௌனமான பதில் கிடைக்கும்.

ஆரோக்கியமாக இருக்க என்ன வகை உணவு உண்ணவேண்டும் எவ்வளவு உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று  ஆரோக்கிய நிபுணர்கள் கொடுத்த பரிந்துரைகளை பொருட்படுத்தாது மனம் போன போக்கில் வாழ்ந்துவிட்டு உடல்நிலை சீரழிந்த பின் மருத்துவரிடம் மன்றாடி பயனில்லை.  

சந்தியா வந்தனம் என்பது விடிகாலை, உச்சிப்பொழுது, அந்திமாலை என்ற மூன்று வேளைகளில் காயத்திரி மந்திரத்தை ஜெபித்து இறைவனை பிரார்த்திப்பது ஆகும். இதை அனைவரும் தினமும் செய்ய வேண்டும் என்ற வேதத்தின் பரிந்துரையை பொருட்படுத்தாதவர்கள் அடிக்கடி துன்பத்திற்கு ஆளாகி கோவிலுக்கு சென்று இறைவனிடம் வேண்டுகோள் விடுப்பதை தவிர்க்க முடியாது.  

எல்லாம் நலமே அமையும் பொழுது கடவுளை மறந்து விடக்கூடாது. அன்றாட அலுவல்கள் எவ்வளவு அதிகமிருந்தாலும் குறிப்பிட்ட நேரங்களை கடவுளுக்கு என்று தனியாக ஒதுக்கி எனக்கு இது வேண்டும் அல்லது அது வேண்டும் என்று அடிக்கடி உன்னிடம் கேட்காமல் இருக்கும் வரம் வேண்டும் என்று மட்டும் கேட்கும் சந்தியாவந்தனம் செய்து கடவுளை பிரார்த்திப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

சந்தியா வந்தன மகிமை – 1: சோம்பல் நீக்கம்

கடவுள் நமக்கு உதவவேண்டுமென்றால் அந்த உதவியை பெற நம்மை நாம் தயார் செய்து கொள்ளவேண்டும். சந்தியாவந்தனத்தை அதிகாலையில்  செய்யவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் விடிவதற்கு முன் எழுவது பழக்கமாகி சோம்பல் நீங்குவதுடன் நாளடைவில் நம் செயல் திறன் அதிகரித்து வாழ்வில் ஏற்படும் இடர்களை சந்திக்கும் திறமை நமக்கு ஏற்படும்.

சந்தியா வந்தன மகிமை – 2: ஆரோக்கியம்

பிராணாயாமம் செய்வது உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தை வளர்க்க பெரிதும் உதவும். தொடர்ந்து உழைக்கும் உடலுக்கும் மனதுக்கும் சந்தியாவந்தனம் செய்வதன் மூலம் சிறிது நேரம் ஓய்வு கிடைப்பதால் மனஅழுத்தம் குறைந்து ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். 

சந்தியா வந்தன மகிமை – 3: தவறான செயல்களுக்கு தடை

அவ்வப்பொழுது சந்தியாவந்தனம் செய்வதன் மூலம் கடவுள் ஞாபகம் ஏற்படுவதால் தவறான செயல்கள் செய்யும் வாய்ப்பு வெகுவாக குறையும். மனம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்காமல் ஒரு சிலநிமிடம் ஓய்வெடுப்பதால் புத்தியின் வார்த்தைகளை செவிகொடுத்து கேட்க அவகாசம் கிடைக்கும். ஆசைகள் அளவுக்கு மீறாமல் ஒரு நிதானம் ஏற்படும்.

பிடித்தது பிடிக்காதது என்ற அடிப்படையில் செயல்படும் மனம் நிலையாத இன்பங்களை தேடுவதிலேயே அனைத்து நேரத்தையும் செலவிடும் தன்மை உடையது. சந்தியாவந்தனம் செய்வதனால் நிலையான இன்பத்தை தேடுவதுதான் வாழ்வின் குறிக்கோள் என்ற புத்தியின் அறிவுரையை திரும்ப திரும்ப கேட்பதன் மூலம் விரைவில் மனம் திருந்தி அதனுடன் ஒத்துழைக்க ஒத்துக்கொள்ளும்.

சந்தியா வந்தன மகிமை – 4: சரியான செயல்களுக்கு ஊக்கம்

நல்லது கெட்டது என்ற அடிப்படையில் செயல்படும் புத்திக்கு சந்தியாவந்தனம் ஊக்கம் அளிக்கிறது. நிலையான இன்பத்தை பெற தர்மமான காரியங்களை மட்டும் செய்து வாழ்வில் அதர்மத்தை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்ற ஆண்டவனின் கட்டளையை சந்தியாவந்தனம் நினைவுபடுத்தும்.

சந்தியா வந்தன மகிமை – 5: பாதையில் கவனம்

வேலை செய்து பணம் சம்பாதித்து உலக இன்பங்களை அனுபவிப்பது முக்தியடைய வெகு அவசியமான ஒரு செயல். ஆனால் அதிலேயே முழுகவனத்தையும் செலுத்திவிட்டால் முக்தியடைய முடியாது. சந்தியாவந்தனம் என்பது நாம் வேலை செய்வதன் காரணம் பணம் சம்பாதிப்பதற்காக அல்ல என்றும் வேதாந்தத்தை படிக்க தேவையான மனப்பக்குவத்தை பெறுவதற்காகவே என்றும் நாளில் மூன்று முறை நமக்கு எடுத்துரைக்கிறது. எனவே செய்யும் வேலைகளை கர்ம யோகமாக செய்யவும், புலன்களை அடக்கி மனதை புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் சந்தியாவந்தனம் உதவுகிறது.

முடிவுரை :

புலன்களின் ஆசைகளையும்  மனதின் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ளவே மக்கள் பணம், பதவி போன்றவற்றை நாடி தொடர்ந்து உழைக்கிறார்கள். அனுபவிப்பதால் புலன்களின் ஆசைகள் அடங்காது, அதிகம் வளரும். அதே போல் மனதின் தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம் இனி எதுவும் வேண்டாம் என்ற பூரணமான நிலையை அடையவே முடியாது. இந்த உண்மையை புத்தகங்கள் படிப்பதன் மூலமோ மற்றவர்களின் அறிவுரைகள் மூலமோ புரிந்து கொள்ள முடியாது.  கடவுள் யார், அவருக்கும் நமக்கும் என்ன உறவு என்பதை தெளிவாக அறிந்து கொண்டால் மட்டுமே பூரணத்துவத்தை அடையமுடியும்.

உலகைப்படைத்த இறைவனை நமக்கு ஞாபகப்படுத்தி உலகில் எப்படி துன்பத்தை தவிர்த்து இன்பமாக வாழ்வது என்ற பரம ரகசியத்தை அறிந்து கொள்ள சந்தியாவந்தனம் போன்ற சடங்குகள் உதவுகின்றன.  ஆகவேதான் தினமும் அன்றாட அலுவல்களை சிறிது நேரம் நிறுத்தி வைத்து சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்று வேதம் விதித்திருக்கிறது.

பயிற்சிக்காக :

1. சந்தியாவந்தனம் செய்வதன் அவசியமென்ன?

2. சந்தியாவந்தனம் என்பது போன்ற தினம் செய்யும் சடங்குகளின் ஐந்து மகிமைகள் என்னென்ன?

சுயசிந்தனைக்காக :

1. பணம் நிலையான இன்பத்தை கொடுக்காது என்ற உண்மையை ஏன் மக்கள் புரிந்து கொள்வதில்லை?

2. மனதின் தேவைகளை ஏன் தொடர்ந்து அதிகமாகின்றன?