Monday, July 26, 2010

பாடம் 077: ஆத்மாவும் பரமனும் (பிரம்ம சூத்திரம் 2.3.43-53)

ஆத்மா என்பதும் பரமன் என்பதும் ஒரே உண்மையை குறிக்கும் இருவேறு சொற்கள் என்பதை இந்த பாடம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

பலூனுக்குள் இருப்பதும் காற்று. பலூனுக்கு வெளியே இருப்பதும் காற்று. அதுபோல அனைத்து உயிரினங்களின் உணர்வுக்கு ஆதாரமான பரமனே பிரபஞ்சத்தின் ஆதாரம். உயிரினங்களை பற்றி பேசும்பொழுது பரமனை ஆத்மா என்றபெயரில் வேதம் குறிப்பிடுகிறது.

பரமன் இருக்கிறான் என்பதை அறிவது கடினம். ஆனால் நான் இருக்கிறேன் என்று அறிவது எளிது. எனவே நான் என்பவன் யார் என்பதை பிரபஞ்சத்தின் அழிவு பற்றி பேசும்பொழுது பிரம்மசூத்திரம் பின்வரும் விளக்கங்களை அளித்து விளக்கியது.

1.ஆத்மா அழியாதது
2.ஆத்மா என்றுமிருக்கும் சத்தியம்
3.ஆத்மா அறிய முடியா அறிவு
4.ஆத்மா அளவிடமுடியாத அனந்தம்
5.ஆத்மா இரண்டற்ற ஒன்றானது
6.ஆத்மா பாகங்களற்றது

பிரம்மசூத்திரத்தின் முதல் அத்தியாயத்தில் பரமனின் தன்மைகளை பற்றி பின்வரும் கருத்துக்கள் கூறப்பட்டிருந்தன.

1.பரமன் அழிவில்லாதவன்
2.பரமன் அனைத்துமாக விளங்குபவன்
3.பரமன் உணர்வுமயமானவன்
4.பரமன் ஆனந்தமயமானவன்
5.பரமன் ஒருவனே
6.பரமனுக்கு பாகங்கள் கிடையாது

இந்த ஆறு விளக்கங்கள் மூலம் முதல் அத்தியாயத்தின் முதல் பகுதியின் முடிவில் கூறப்பட்ட 'நீதான் பரமன்' என்ற முடிவு சரியானது என்று நிரூபணம் ஆகிறது.

முடிவுரை :

பரமன் யார், அவன் எப்படிபட்டவன் என்பது போன்ற அனைத்து கருத்துக்களையும் பிரம்மசூத்திரத்தின் முதல் அத்தியாயம் விளக்கியது. அதன் பின் இந்த இரண்டாம் அத்தியாயத்தின் மூன்றாம் பகுதியில் நான் என்பதன் பொருளான ஆத்மாவின் தன்மைகள் விவரிக்கப்பட்டன. பரமனின் தன்மைகளும் ஆத்மாவின் தன்மைகளும் ஒன்றுக்கொன்று முற்றிலும் ஒன்றுபடுவதை சுட்டிகாட்டி இரண்டும் ஒன்றுதான் என்று கூறிய இந்த பாடத்துடன் இரண்டாம் அத்தியாயத்தின் மூன்றாம் பகுதி முற்றுபெறுகிறது.

பயிற்சிக்காக :

1.பரமன் ஆத்மா ஆகிய இருசொல்களும் ஒரு பொருளை தருகின்றன என்பதை நிரூபிக்கவும்.

சுயசிந்தனைக்காக :

1. பரமன் ஆத்மா என்று இருசொல்களை வேதம் உபயோகித்ததால் ஏற்பட்ட விளைவுகள் யாவை?