Sunday, January 31, 2010

பாடம் 005: பேரறிவே பரமன் (பிரம்ம சூத்திரம் 1.1.5-11)

உலகின் ஆதாரம் என்று பரமனை அறிமுகபடுத்தியபின் வேதம் பரமனின் தன்மைகள் பற்றிய விளக்கங்களை கொடுக்க ஆரம்பிக்கிறது.

பரமன் வார்த்தைக்கும் மனதுக்கும் எட்டாதவன்!

எனவே நாம் எவ்வளவுதான் படித்தாலும் வேதங்களில் உள்ள வார்த்தைகளின் மூலம் வார்த்தைக்கு எட்டாத பரமனை நம்மால் அறிந்து கொள்ள முடியாது. ஆகவே பரமனை அறிவிக்க நமக்கு குருவின் துணை அவசியம். அவரால்தான் பல ஆயிரக்கணக்கான வார்த்தைகளாலான வேதம் மனதுக்கு எட்டாத பரமனை எப்படி அறிவிக்கிறது என்று நமக்கு புரியவைக்க முடியும்.

உலகத்தின் ஆதாரம் பரமன் என்று வேதம் கூறியது. ஒரு அறிவற்ற ஜடப்பொருள் இந்த உலகத்தை தோற்றுவிக்கவில்லை என்று வேதம் தெளிவாக கூறுகிறது. நம்முடைய அனுபவமும் யுக்தியும் இந்த உண்மையை நமக்கு உறுதிபடுத்துகின்றன.

எனவே வேதம் பரமனின் முதல் இயல்பாக கூறுவது உணர்வு அல்லது அறிவு.

பரமன் உணர்வு மயமானவன்

உணர்வு என்பது ஒரு உயிரற்ற பொருளில் இல்லாதது. நம் போன்று எல்லா உயிரினங்களிடமும் இருப்பது. அதே போல் பரமனிடமும் உணர்வு இருக்கிறது என்று சொல்வது தவறு. ஏனெனில் பரமனே உணர்வு.

பரமன் அறிவு உருவானவன்.

'உனக்கு அறிவு இருக்கிறதா?' என்று யாரேனும் நம்மை கேட்டால் கோபப்படுவது அனாவசியம். எதைப்பற்றிய அறிவு என்பதை பொருத்து 'உண்டு' அல்லது 'இல்லை' என சாதாரணமாக பதில் சொல்லாலாம். ஏனெனில் எல்லாம் அறிந்த ஒருவரோ ஏதும் அறியாத ஒருவரோ என்றும் இருக்க முடியாது. அறிவு என்பது ஏதோ ஒரு பொருளை பற்றியது. அறிவு இருக்கிறதா இல்லையா என்பதை அறியும் அறிவு பேரறிவு. பேரறிவே பரமன்.

கைகள், கால்கள் போன்ற உறுப்புகள் எதுவும் இல்லாமல் வெறும் அறிவு அல்லது உணர்வு மயமாக இருப்பவன் பரமன். அப்படியென்றால் வேறு எந்த வித உபகரணங்களும் இல்லாமல் பரமனால் எவ்வாறு இந்த உலகத்தை படைக்க முடியும்? நாம் எவ்வாறு கை கால்களின் துணையின்றி எந்த வித முயற்சியும் இல்லாமல் ஒரு பெரிய கனவு உலகத்தை உருவாக்குகிறோமோ அது போல பரமனுக்கும் இந்த பேரண்டத்தை படைப்பது என்பது எளிதான காரியம்.

நான் பலவாக ஆவேனாக என்ற இச்சையை செயலாக்க பரமன் எந்த பிரயத்தினத்திலும் ஈடுபட வேண்டியது இல்லை என்று வேதம் கூறுகிறது.

முடிவுரை:

நாம் எதை அறிந்தால் நமக்கு எல்லாமும் தெரிந்ததாகுமோ அதுவே பரமன் என்று வேதம் சொல்லுகிறது. அப்படிப்பட்ட பரமன் அறிவு உருவமானவன். அவனால் நினைத்த மாத்திரத்தில் எந்தவித முயற்சியுமின்றி இந்த உலகத்தை படைக்கவும், காக்கவும், அழிக்கவும் முடியும்.

பயிற்சிக்காக:

1. வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத பரமனை அறிந்து கொள்ள நாம் செய்யவேண்டியது என்ன?

2. பேரறிவு என்றால் என்ன?

சுயசிந்தனைக்காக:

1. பரமனை முழுதும் அறிந்தவர் அனைத்தையும் அறிந்தவர் அல்லவா?


2. அனைத்து உயிரினங்களிடமும் பேரறிவு உள்ளது என்று சொல்வது சரியா?