Thursday, August 19, 2010

பாடம் 080: புலன்கள் நுண்ணியவை (பிரம்ம சூத்திரம் 2.4.7)

பிரபஞ்சம் உருவாக்கப்படும்பொழுது முதலில் நுண்ணிய பஞ்சபூதங்கள் உருவாக்கப்பட்டன என்ற கருத்தை கூறியபின் 'நுண்ணிய' என்ற சொல்லின் பொருள் ‘அளவுக்கு அப்பாற்பட்டவை’ என்று இந்த பாடம் விளக்குகிறது.

அளவுக்கு அப்பாற்பட்டவை

பரமன் எங்கும் வியாபித்து எப்பொழுதும் இருப்பவன். இடம் மற்றும் காலம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவன். எனவே பரமன் அளவுக்கு அப்பாற்பட்டவன்.

பௌதீக பிரபஞ்சம் உருவானதற்கு ஆதாரம் பரமனின் மாயா சக்தியான காரண பிரபஞ்சம். பரமனைப்போல் காரணபிரபஞ்சமும் அளவுக்கு அப்பாற்பட்டது. காரண பிரபஞ்சத்தில் இருந்து தோன்றியது நுண்ணிய பஞ்சபூதங்கள். இவை அளவில் அணுவை விட மிக நுண்ணியவை. இவற்றில் இருந்து தோன்றியதுதான் பௌதீக பிரபஞ்சம்.

நுண்ணிய பஞ்சபூதங்களின் இருப்பை யூகித்து அறிய முடியுமே தவிர நேரடியாக உணரமுடியாது. அளவில் மிகச்சிறியதாயினும் இவையும் ஜடப்பொருள்களே. இவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட பிராணமயகோசம், மனோமயகோசம் மற்றும் விஞ்ஞானமயகோசம் ஆகியவையும் நுண்ணிய அளவை உடையவை. இவையும் அளவுக்கு அப்பாற்பட்டவை.

தினசரி வாழ்வில் நாம் உபயோகிக்கும் அளவுகோல்கள் நட்சத்திரங்களுக்கிடையே உள்ள தூரங்களையோ அணுக்களிடையே உள்ள தூரங்களையோ அளக்க உதவாது. அதேபோல் பரமனும் நுண்ணிய உடல்களும் அறிவியல் அளவைகளுக்கு அப்பாற்பட்டவை.

நுண்ணிய உயிரும் நுண்ணிய ஜடமும்

அனைத்து உயிரினங்களின் பருவுடலை உள்ளிருந்து செயல்படுத்துவது உயிருடன் கூடிய நுண்ணிய உடல். உயிரினங்களின் பருவுடல் உள்ளிட்ட அனைத்து ஜடப்பொருள்களின் ஆதாரமாய் அவற்றினுள் இருப்பது நுண்ணிய பஞ்சபூதங்கள்.

பிரளயத்திற்கு பிறகு காரண உடலில் உள்ள பாவ புண்ணியங்களின் தகுதிக்கு ஏற்ப அனைத்து உயிரினங்களின் நுண்ணிய உடல்கள் உருவாக்கப்படுகின்றன. அதற்கு பிறகு பஞ்சீகரணம் மூலம் பஞ்சபூதங்களும் அவற்றின் கலவையாக பிரபஞ்சமும் உருவாக்கப்படுகின்றன.

பிரபஞ்சம் அறிவியல் கருத்துக்களின் படி தொடர்ந்து மாறி உயிரினங்கள் வாழத்தகுந்த பூமி உருவானது. பூமியில் அடிப்படை இரசாயனப்பொருள்கள் உருவானபின் நுண்ணிய உடல்கள் அவற்றினுள் புகுந்து முதல் உயிரினங்கள் உருவாயின. இவை ஓரறிவுள்ள நீருனுள் வாழ்பவை. மேலும் நுணுக்கமான உயிரினங்களுக்கு தேவையான பருவுடலை வளர்க்க தேவையான தட்பவெப்ப நிலை பூமியில் ஏற்பட்டதும் உயிரினங்கள் பரிணாம வளர்ச்சி பெறத்தொடங்கின. அதன் விளைவாக தாவரம், ஊர்வன, பறப்பன மற்றும் விலங்குகள் என பல்வேறு உயிரினங்களாக உருபெற்றன.

உயிரினங்கள் மற்ற உயிரினங்களை உண்டுதான் வாழ வேண்டும். ஜடப்பொருள்கள் நேரடியாக உணவாக மாறாது. உண்ணப்படும் உணவில் உள்ள ஜடப்பொருள்கள் உண்பவற்றின் பருவுடல்களை வளர்ப்பதற்கும் உணவின் நுண்ணிய பகுதி உண்பவற்றின் நுண்ணிய உடல்களை வளர்ப்பதற்கும் உதவுகின்றன.

நுண்ணிய உடல்

நுண்ணிய உடலால் உலகுடன் தொடர்புகொண்டு அனுபவங்களை பெறுவது என்பது முடியாத காரியம். ஆகவே அவை செய்த கர்மபலன்களை அனுபவிக்கும் பொருட்டு பருவுடல்களை பெறுகின்றன. பருவுடலில் உள்ள கோளகங்களில் நுண்ணிய உடலின் புலன்கள் அமர்ந்து வெளியுலகில் உள்ள பொருள்களை அனுபவிக்கின்றன. உதாரணமாக நம் முகத்தில் இருக்கும் கண் ஒரு கோளகம். இதனுள் நமது புலன்களில் ஒன்றான நுண்ணிய கண் அமர்ந்து உலகில் உள்ள பொருள்களை பார்க்கிறது. கர்மா கோட்பாடின் படி இது போன்ற அனுபவங்களை பெறுவது அவசியமென்பதால் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் நுண்ணிய உடல் உள்ளது. தான் செய்த நன்மை தீமைகளின் பலன்களை அனுபவிக்க நுண்ணிய உடல்கள் உட்புகுவதால் உயிரினங்கள் உண்டாகின்றன.

சரியாக கூறினால் எந்த ஜடப்பொருள்களுக்குள் நுண்ணிய உடல் இருக்கிறதோ அவற்றை நாம் உயிர் வாழ்வன என்று அறிகிறோம். நுண்ணிய உடலுக்கு பரமனின் உணர்வை பிரதிபலிக்கும் ஆற்றல் இருப்பதால் பருவுடல் ஜடப்பொருளிலிலிருந்து வேறுபட்டு தெரிகிறது. நம்மை யாராவது தொட்டால் அதை நாம் உணர்கிறோம். அந்த உணர்வு நம் உடலுக்கோ மனதுக்கோ சொந்தமானது அல்ல. பரமனின் உணர்வை மனம் பிரதிபலித்து தன் கட்டுப்பாட்டில் உள்ள உடல் முழுதும் அந்த உணர்வை பரப்பியுள்ளது. எனவே உண்மையில் உணர்வு என்பது பரமனை மட்டுமே சேர்ந்தது.

நுண்ணிய உடலில் 19 உறுப்புகள் உள்ளன. அவை நுண்ணியவை. ஆகையால் அவற்றின் இருப்பை நேரடியாக காட்டி நம்மால் நிரூபிக்க முடியாது. உதாரணமாக நமக்கு பிராணன் இருக்கிறது என்பதை எவ்வித அறிவியல் கருவிகளாலும் நேரடியாக சுட்டிக்காட்ட  முடியாவிட்டாலும் அதன் இருப்பை நாம் அறிகிறோம். இது போல காரியத்திலிருந்து காரணமான நுண்ணிய உடல் இருப்பதை யூகித்து மட்டுமே அறிய முடியுமே தவிர நேரடியாக அறியமுடியாது.

உதாரணமாக இருதயத்துடிப்பு இருக்கும் வரை உயிர் இருக்கிறது என்கிறோம். ஏன் இருதயம் துடிக்கிறது என்ற கேள்விக்கு பிராணன் உள்ளிருந்து இதயத்தை துடிக்கச்செய்கிறது என்ற பதில் வேதத்திலிருந்து மட்டும்தான் நமக்கு கிடைக்கும். இது அறிவியல் அறிவுக்கு அப்பாற்பட்டது.

பரமனின் மாயாசக்தி இந்த பிரபஞ்சத்தின் தோற்றம், வளர்ச்சி, மறைவு என்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணமாக அமைவது போல பருவுடலின் செயல்பாட்டுக்கு நுண்ணிய உடல் காரணமாக அமைகிறது. பிரபஞ்சம் ஏன் தோன்றியது என்ற கேள்விக்கு அறிவியலால் எப்படி பதில் சொல்ல முடியதோ அதே போல் ஒருவர் உயிரோடு இருப்பது எப்படி என்ற கேள்விக்கும் பதில் தெரியாது. ஒருவர் இறந்து விட்டால் அவர் இறந்ததற்கு காரணம் கண்டுபிடிக்க ஒரு அளவுக்கு ஆராய்ச்சி செய்ய முடியுமே தவிர ஒருவர் உயிரோடு இருப்பதற்கு காரணமோ அவர் எப்பொழுது இறப்பார் என்ற தகவலையோ அறிவியல் உலகம் அறியாது. நுண்ணிய உடல்கள் பருவுடலைப்போல் அல்லாமல் அளவுக்கு அப்பாற்பட்டவையாக இருப்பதே இதற்கு காரணம்.

முடிவுரை :

நுண்ணிய உடல் மிக நுண்ணியதாக இருப்பதால் அவை அறிவியல் அளவைகளுக்கு உட்படா. அவற்றின் செயல்பாட்டை வைத்துதான் அவற்றின் இருப்பை நாம் அறிந்து கொள்ள முடியும்.

ஆங்கில மருத்துவர்கள் நுண்ணிய உடலின் இருப்பை ஏற்றுக்கொள்ளாமல் அதன் செயல்பாடுகளை பருவுடலின் செயல்பாடுகளாக தவறாக கருதுகின்றனர். பருவுடல் தொடர்ந்து செயல்படுவதால் பழுதடைந்து வேலை செய்வதை நிறுத்திகொள்வதால் மரணம் நிகழ்கிறது என்பது அவர்கள் கருத்து. உடலின் பாகங்கள் அனைத்தும் சரியாக வேலை செய்யும்பொழுது கூட சில சமயம் மரணம் ஏற்படுவதை அவர்களால் விளக்கமுடியாமல் ஆயிசு முடிந்துவிட்டது என்கிறார்கள்.

பிரளயத்திற்கு பின் பரமனிடமிருந்து தோற்றுவிக்கப்படும் நுண்ணிய உடல் தொடர்ந்து பிறப்பு-இறப்பு என்ற சுழற்சியில் செய்த பாவ-புண்ணியங்களுக்கு தகுந்த பலனை பெறுவதற்காக அதற்கேற்ற பருவுடலை பெறுகிறது என்றும் கர்ம வினைகள் முற்றுபெறும்பொழுது உயிரினம் மரணமடைகிறது என்றும் வேதம் கூறுவது நமது அனுபவத்திற்கும் தர்க்க அறிவிற்கும் ஏற்புடையதாக இருக்கிறது.

பயிற்சிக்காக :

1. அளவுக்கு அப்பாற்பட்ட இரண்டு பொருள்கள்யாவை?

2. ஜடப்பொருள்களுக்குள் நுண்ணிய பொருள்கள் உண்டா?

சுயசிந்தனைக்காக :

1. மனிதனைத்தவிர மற்ற உயிரினங்களுக்கும் ஐந்து கோசங்கள் உள்ளனவா